பெண்கள் மருத்துவம்

திருமணமாகப் போகும் பெண்களுக்கு மருத்துவர் ஆலோசனை அவசியமா?

திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் இரண்டாவது தொடக்கம். அது ஆரோக்கியமாக அமைந்தால்தான், அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாகவும் திருப்தியாகவும் தொடரும். திருமணத்துக்குத் தயாராகிற அல்லது திருமணமாகி, குழந்தைக்காகத் திட்டமிடும் பெண்கள், முன்கூட்டியே தங்கள் உடல், மன ஆரோக்கியங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை வலியுறுத்துகிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

‘கல்லூரிப் பெண்கள்ல 30 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடம்பை சிலீமாக வைத்திருக்க டயட் செய்வதால், உடம்புக்கு தேவையான சத்து உடம்பில் சேராது ரத்த சோகை ஏற்படுகின்றது. இது அவங்களுக்குக் திருமணமாகி, கருத்தரிக்கிற போது பிரச்னைகளைத் தரும். ரத்தசோகை இருக்கிறதா என்று பரிசோதனை செய்து பார்த்து இருந்தால் அதற்கான சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் பல பயங்கர பாதிப்புகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

அடுத்து ஃபோலிக் அமிலக் குறைபாடு. கல்யாணமானதும் மருத்துவரோட உதவியோட இந்தக் குறைபாட்டுக்கான மருந்துகளை எடுபதால், மூளை மற்றும் முதுகுத் தண்டுவடப் பிரச்னைகள் இல்லாத, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

தட்டம்மைக்கான தடுப்பூசி மிக முக்கியம். கர்ப்பமானதும் தட்டம்மை வந்தால், உறுப்புக் கோளாறுகளுடைய குழந்தை பிறக்கலாம். இந்தத் தடுப்பூசி போட்டுக்கிட்டு, 6 மாதங்கள் கழிந்த பின்புதான் கருத்தரிக்கணும். மாதவிலக்கு சுழற்சி முறை தவறியிருந்தால், அதற்கும் சரியான மருத்துவ ஆலோசனை அவசியம்.

சில பெண்களுக்கு பிறவியிலிருந்து பிரச்னைகள் இருக்கும். இதய நோய், வலிப்பு, சிறுநீரகப் பிரச்னை, நீரிழிவு… இவையெல்லாம் உள்ள பெண்கள், கருத்தரிப்பதற்கு முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சில வகை இதய நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கக் கூடாது.

குடும்பநல மருத்துவரைப் பார்ப்பதற்குப் பதிலாக, அந்தந்த நோய்க்கான சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. ஏற்கனவே எடுக்கும் மருந்துகளை மாத்தி, கருவை பாதிக்காத அளவுக்கு பாதுகாப்பான மருந்துகளைக் பெற்றுக் கொள்ள இது வசதியா இருக்கும். அடுத்து மார்பகக் கட்டி, கர்ப்பப்பை கட்டிகள் ஏதாவது இருக்கின்றனவா என சோதனைசெய்து பார்ப்பது அவசியம்.

உடல் ரீதியான ஆலோசனை எவ்வளவு முக்கியமோ, அதைவிட மனசுக்கான ஆலோசனையும் முக்கியம். கணவன்-மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து கல்யாணத்துக்கு முன்னாடியோ, கருத்தரிக்கிறதுக்கு முன்னாடியோ ஒரு கவுன்சலிங் எடுத்துக்கலாம்.

கடைசியாக குழந்தைக்கான திட்டமிடல். உடனடியா குழந்தை வேணாம்னு நினைக்கிறவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி, அவர்களின் உடல் பரிசோதனைக்குப் பிறகு சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுக்கலாம். சரியான திட்டமிடல் இல்லாது கருத்தரிச்சு, பின்பு அது வேண்டாம் என்று கலைக்கிறவர்கள் கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு, பிற்காலத்தில் குழந்தையே இல்லாமப் போகலாம்.
doctors 3183824k

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button