மருத்துவ குறிப்பு

யாழ். குடாநாட்டு நீரில் நைத்திரேற்று அதிகரிப்பை தடுப்பதற்கு -சு.சரவணன்

இன்றைய நாட்களில் குடா நாட்டின் நீரின் தரத்தைப் பற்றி நாம் எடுத்துக் கொள்ளும் போது அதில் முக்கியத்துவம் பெறுபவை நைத்திரேற் மற்றும் வன்தன்மை ஆகும். வன் தன்மையானது எமது குடா நாட்டின் புவியியல் சார்பாக நீரில் ஏற்படும் மாசாக்கமாகும்.

இது எம்மால்கட்டுப்படுத்திக் கொள்ள இயலாத ஒன்றாகும். ஆயினும் நைத்திரேற் தொற்றானது மனிதனால் ஏற்படுத்தப் படும் மாசாக்கமாகும். எனவே நாம் இதனைப் பற்றி தெளிவுற அறிந்து இதனைத் தடுப்பதற்கு இயலுமானவற்றைச் செய்தல் வேண்டும்.

நைத்திரேற் தொற்றினை அறிந்து கொள்வதற்கு முன்பாக நாம் நைத்திரேற்றின் சில இயல்புகளை அறிந்து கொள்வது நன்றாகும். இதன் மூலம் நாம் நைத்திரேற்றின் தொற்றல் அடையும் இயல்பு, நோயாக்கும் இயல்பு என்பவற்றை இலகுவாக அறிந்த கொள்ளக் கூடியதாக இருக்கும். நைத்திரேற் என்பது நைதரசன் மற்றும் ஒட்சிசன் சேர்ந்த ஓர் இரசாயன பதார்த்தம். இது வேறுபட்ட சேதன அசேதனப் பொருட்களுடன் இணைந்து காணப்படுகின்றது.

அநேகமான அசேதன நைத்திரேற் உப்புக்கள் சாதாரண அமுக்க வெப்பநிலையில் இலகு வாகக்கரையக் கூடியவை ஆகும். அதாவது கரைதிறன் கூடியதாகும். நைத்திரேற் ஆனது நைத்திரேற் வட்டம் மூலம் சூழலில் ஓர் சமநிலையிலும் பேணப்பட்டு உருவாகின்றது. ஆனால் மனிதனின் முறையற்ற செயற்பாடுகளின் மூலம் இவ்வட்டமானது குழப்பமடைந்து மனிதனுக்கே பெரும் தீங்கை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.

நைத்திரேற் ஆனது விவசாயத் தேவைக்கான அசேதன உர உற்பத்தியில் அதன் கரையும் இயல்பையும் உயிரியல் ரீதியாக அழிவடையும் இயல்பையும் அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் நைத்திரேற் ஆனது தாவரங்களின் வளர்ச்சி மற்றும் போசணைக்கு இன்றியமையாத ஒன்றாகும்.

பொதுவாக நீரானது விவசாய நிலங்களின் நீர் மூலமும் மலசலக்கூடக்கழிவுகள்,தொழிற்சாலைக் கழிவுகள் மூலமும் நைத்திரேற்றின் தொற்றலுக்கு உள்ளாகின்றது. இதன் அதிக கரைதிறன் இலகுவான நீருடன் கொண்டு செல்ல ஏதுவாக அமை கின்றது.

யாழ்.குடாநாட்டைப்பொறுத்த வரை சில இடங்களில் மாத்திரமே நன்னீர்வளம் நிரந்தர நீராகக் காணப்படுகின்றது. இந் நிரந்தர நீர்ப்பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதியில் மக்கள் செறிந்த பிரதேசமாகக் காணப்படுவதுடன் இங்கு விவசாய நடவடிக்கைகளும் அதிகளவில் காணப்படுகின்றது.

குடாநாட்டின் நீர்வளமானது கல்சிய பாறைகளுக்கிடையில் காணப்படும் குகைகளில் சேமிக்கப்படுகின்றது. இப் பாறைகளின் மேல் காணப்படும் மண்படையானது மெல்லியதாகவும, பாறைகளின் உட்புகவிடும் தன்மையும் அதிகமாக காணப்படு வதால் விவசாய கழிவுகள் இலகுவாக இந்நிலக்கீழ் நீர் வளத்தை தொற்றலடையச் செய்கின்றன. அத்துடன் விவசாயிகள் தமது விளைச்சலை மட்டும் கருத்தில் கொண்டு அதிகளவில் உரங்களைப் பயன்படுத்துவதும் அதிக நீரைப் பாய்ச்சுவதும் அதிகமாக நீர்வளம் நைத்திரேற் தொற்றுக் குள்ளாக காரணமாகின்றது.

இதன் செறிவானது உலக சுகாதார நிறுவனத்தால் (WHO 4th Edition )50 mg/l ஆக, அதன் அனுமதிக்க கூடிய செறி வாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இது 11mg/l Nitrate As Nitrogen எனவும் கொள்ளலாம். இதனை சார்பாகக் கொண்டே அனைத்து நாடுகளும் தமக் குரிய குடிநீரின் தரத்தை நிர்ணயித்துக் கொண்டுள்ளன.

அதன் பிரகாரமே இலங்கையில் SLS 614 part II (2013 ஆம் பதிப்பு) 50mg/l அதன் உச்சவரம்பாக அறிவித்துள்ளது. இந்த செறிவு எல்லையானது முழுமையாக Меtho moglo binemia எனும் நீலக் குழந்தைகளை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்பட்டவை.

17 நைத்திரேற் Enterohe patic Metabolism போது இடைநிலையாக நைத்திரைட் உருவாகின்றது. இந்த நைத் திரைட் ஆனது ஈமோகுளோ பினில் உள்ள பெரசு (Ferrous – Fe 2+) அயன்களை பெரிக் (Ferric – F3+) அயன் களாக ஒட்சிறேற்றுவதால் ஈமோக்குளோபினின் ஒட்சி சனை காவும் தன்மை பாதிப்புக் குள்ளாக்கப்படுகின்றது.

இதனால் அங்கங்களின் தசைகளில் ஒட்சிசன் பற்றாக் குறை ஏற்பட்டு ஆபத்தான நிலை மையை உருவாக்கின்றது.

இதுவே Methemoglobinemia என அழைக்கப்படுகின்றது. இது சிறு குழந்தைகளில் ஏற்படும் போது அது நீலக் குழந்தை நோய் என அழைக்கப் படுகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்நோய்த் தாக்கத்தின் மூலம் இறப்பும் ஏற்படுகின்றது.

ஆகவே கட்டாயமாக சிறுகுழந்தைகளும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாரும் இத்தொற்றான நீரைப் பருகுவதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். மற்றும் நைத்திரேற் ஆனது குறிப்பிடத்தக்களவிற்கு அதி கமாக மனிதனால் உள்ளெடுக்கப்படும் பொழுது அவை புற்று நோயாக்கித் தொழிற்படும் சந்தர்ப்பங்களும் அதிகளவில் இருப்பதாகப் பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அதாவது உள்ளெடுக்கப்படும் நைத்திரேற் ஆனது புற்றுநோயாக்கியான “நைத்திரோசமைனஸ் (Nitrosamines ) ஆக உடலில் மாற்றம் அடைந்து உணவுக் கால்வாய் (Esophageal) மற்றும் வயிற்று (Stomach) புற்று நோய்க்குக் காரணமாகின்றது. நைத்திரேற் எம் குடாநாட்டு நீரில் மற்றைய பகுதிகளிலும் பார்க்க அதிகமாக காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்ததே.

இதற்கு முக்கிய காரணம் எமது தரைக்கீழ் கட்டமைப்பும் விவசாய நடவடிக்கைகளும் என அறிந்து கொண்டோம். நைத்திரேற் எனும் ஓர் இரசாயன பதார்த்தம் மட்டும் அல்லாது அதனுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் ஏனைய மிகக் கொடிய நச்சான மற்றைய இரசாயன பதார்த்தங்கள் (Agro Chemicals-Pesticide, weedicides fungicide etc) நீண்டகால குறுகியகால விளைவுகளை ஏற்படுத்தவல்ல மிகக் கொடிய இரசாயனங்களாகும். Nitrate ஆனது ஒர் குறிப் பிட்ட அளவிற்கு மேலாகக் காணப்படுமாயின் அதனை ஓர் குறிகாட்டியாகக் (Index) கொண்டு அடுத்த கட்ட ஆய்வுகளுக்குச் செல்ல வேண்டியதுகட்டாயமாகும்.

அத்துடன் Nitrate பரிகரிக்கும் (Treatments / Removals) நடைமுறைகளானது அதிகளவாக காணப்படுகின்ற போதிலும் அவை அதிதொழில் நுட்பம் வாய்ந்தவையாகவும் அதிக செலவீனம் கொண்டவையாகவும் உள்நாட்டு சந்தையில் கிடைக்கப் பெறாத தொழில்நுட்பம் கொண்ட வையாகவும் உள்ளது.

இன்று உள்நாட்டு சந்தையில் காணப்படும் Ro (Reverse| Osmosis) தொழில்நுட்பம் மட்டும் ஓரளவு Nitrate ஐ அகற்றக் கூடியதாக உள்ளது. ஆயினும் RO சுத்திகரிப்பானது அதிக விலை கொண்டதாகவும் பாரிய செலவு கொண்ட தாகவும் உள்ளது. சாதாரண மக்களின் பாவனைக்கு எட்டும் வகையில் இவை இல்லை.

இந்த விவசாய இரசாயன தொற்றானது நிச்சயமாக முறையற்ற மற்றும் அதீத இரசாயன பாவனையினால் தான் ஏற்படுகின்றது.

ஆதலால எம் மக்களுக்கு நைத்திரேற் புற்றிய விழிப் பூட்டல் மிகவும் அவசியமான ஒன்றாகும். இதன் மூலமே நிலத்தடி நீர்வளமானது விவசாய இரசாயன கழிவுகளின் தொற்றலில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கும் தொற்றுக்குள்ளான நீரில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

சு.சரவணன்
இரசாயனவியலாளர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button