மருத்துவ குறிப்பு

பெண்களை அதிகம் தாக்கி வரும் ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் எனப்படும் ஹைபர் டென்ஷன் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம். இப்போது 20 வயதிலேயே ஹார்ட் அட்டாக் போன்றவை பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்சனை. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம்.

ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்சனைதான். வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும்.

அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம். குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹார்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்சனை தோன்றும்.

இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது. சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன.

ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். இதனிடையே ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கே அதிக ரத்த அழுத்தப் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆம் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் வழிமுறைகளில் உள்ள குறிப்பிட்ட வேறுபாடுகள் குறித்து விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.

அந்த ஆராய்ச்சியின் முடிவில் இந்தத் தகவல் வெளியானது. “இதற்கு முன்னால் ரத்த அழுத்தம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது என்றும், அவர்களுக்குரிய சிகிச்சை முறைகளும் ஒன்று என்றும் மருத்துவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களுமாக 100 பேரை வைத்து இந்த ஆராய்ச்சி நடந்தது.

ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு ரத்த அழுத்தம் காரணமாக 30 முதல் 40 சதவீதம் பாதிப்புகள் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. ‘இதனால் பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் தரம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வது அவசியம்’ என்றும் இந்த ஆராய்ச்சி வலியுறுத்துகிறது.
1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button