கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தலில் நுரை வந்ததும், அழுக்கு நீங்கிவிட்டதாக எண்ணி முடியினை அலசி விடுகிறோம்

நம் கூந்தல் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக அழகாக தோற்றம் அளிக்கிறதோ, அதற்கு ஏற்ப ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூந்தலில் இருக்கும் அழுக்கை நீக்கி சுத்தம் செய்தல் வேண்டும். நாம் பயன்படுத்தும் பெரும்பாலான ஷாம்புகள் தலையில் தடவியதுமே அதிகமான நுரை தந்துவிடும். நுரை வந்ததும், அழுக்கு நீங்கிவிட்டதாக எண்ணி முடியினை அலசி விடுகிறோம்.

855090

நுரை தோன்றியதுமே நீங்கள் சுத்தம் செய்வது, வெளியில் தெரியும் நீண்ட முடிகளைத்தான். தவிர, நம் தலையில் முடிக்கால்களுக்கு இடையிலும் ஸ்கால்ப்பில் படிந்திருக்கும் அழுக்கை அவ்வளவாக நாம் அழுத்தி தேய்த்து வெளியேற்றுவதில்லை. இந்த அழுக்குகள் படிப்படியாக முடியின் ஈரத்தோடு இணைந்து நமக்கு பலவிதமான முடி சார்ந்த தொந்தரவுகளை நாளடைவில் கொடுக்கத் துவங்குகின்றன என்கிறார் அழகுக் கலை நிபுணர்
ஹேமலதா.

முன்பெல்லாம் அம்மாக்கள் நம் தலையில் எண்ணை தேய்த்து, நன்றாக மசாஜ் கொடுத்து, பின்னர் வீட்டில் தயார் செய்த சீகைக்காய் பவுடரை தலையில் அழுத்தி தேய்த்து சுத்தம் செய்து விடுவர். அது இயற்கையாகவே நம் முடிக்கு ஸ்க்ரப்பாக  அமைந்ததுடன், கூந்தலும் ஆரோக்கியம் சார்ந்த வளர்ச்சியாக வெளிப்படும். அதனாலே பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மனமுண்டு என்ற சந்தேகங்களும், கதைகளும் தோன்றத் துவங்கின.

தற்போதுள்ள அவசர யுகத்தில், இயற்கையை எதிர்த்து நாம் புரியும் ஒவ்வொரு செயற்கைத்தனமும் எதிர்வினைகளை நமக்கு ஏற்படுத்துகின்றன. அதற்கு இருபாலரின் கூந்தலுமே இலக்காகி பொடுகுத் தொல்லை, முடி கொட்டுதல், சோரியாசிஸ், சொட்டை என நம் தலையும், முடியும் இணைந்தே அடுத்தடுத்த அபாய கட்டங்களை நோக்கி நகர்கிறது. பொடுக்குத் தொல்லையால், முடி கொட்டுவதுடன் முகத்தில் தழும்புகளும் வரத் துவங்கும் என எச்சரிக்கை மணி அடிக்கிறார் இவர். முடி தொடர்பான சென்ற இதழ் கேள்விகளுக்கான பதில்கள்…

பொடுகுத் தொல்லை ஏன் வருகிறது? அதன் விளைவு என்ன?

* நமக்குத் தேவையான பி.எச் நிலை சமனற்று இருக்கும்போது அதனால் ஏற்படும் வறட்டுத்தன்மை  அல்லது அதிகமான எண்ணைத் தன்மை சுரப்பதால் ஃபங்கஸ் உண்டாகி பொடுகுத் தொல்லை உருவாகும்.

* ஷாம்புவை மாற்றி மாற்றி பயன்படுத்துவது. அதிகமான ரசாயனத் தயாரிப்புகளான ஹேர் கலரிங், ஹேர் ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்றவற்றை பயன்
படுத்துவதால்.

* சீபோரிக் என அழைக்கப்படும் ஒரு விதமான தோல் பிரச்சனையால் பொடுகுத் தொல்லை வரும்.

* சோரியாசிஸ் பிரச்சனை. இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு, மீன் செதில் மாதிரி மண்டை ஓட்டில் இருந்து நம் தோள்களில். சீவும்போதும் பொடுகு அப்படியே உதிரும். இதுவும் ஒருவிதமான பொடுகுத் தொல்லை. இதன் அடுத்த நிலைதான் தலையில் சொட்டை விழுதல்.

பொடுகு வந்தால் எப்படி சரி செய்வது?
முதல் இரண்டு நிலையையும் நாம் நம் வீடுகளில் உள்ள பொருட்களை கொண்டே கட்டுப்படுத்தி, சரி செய்து விடலாம். கடைசி இரண்டு நிலையினை நம் தலைமுடி அடைந்தால் வேறு வழியே இல்லை. முடி தொடர்பாக பயின்ற ட்ரைகாலஜிஸ்ட் அல்லது அது தொடர்பான பட்டயப்படிப்பு படித்த அழகுக் கலை நிபுணரை அணுகி கவுன்சிலிங் பெற்று முறையான மருத்துவத்தை துவங்க வேண்டும். சோரியாசிஸ் மூலம் தலையில் விழும் சொட்டை தன்மையினை தள்ளிப்போட முடியுமே தவிர அதில் இருந்து தப்பிக்க முடியாது.

சரியான முறையில் முடியினை பாதுகாக்கவில்லை என்றால் 2 வயது குழந்தைக்குக் கூட பொடுகுத் தொல்லை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. நமது வீட்டிலேயே நம்மிடம் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு இந்தப் பொடுகுத் தொல்லையின் ஆரம்ப நிலையினை எப்படி சரி செய்யலாம் எனப் பார்ப்போம்.

எலுமிச்சை பழத்தின் சாறு பொடுகுத் தொல்லைக்கு நல்ல மருந்து. தேங்காய் எண்ணை மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவு எடுத்து, தேங்காய் எண்ணையினை மிதமாக சூடுபடுத்தி அத்துடன் எலும்பிச்சை சாற்றினை கலந்து, இந்தக் கலவையினை தலைமுடிகளுக்கு இடையில் ஸ்கால்ப்பில் படுமாறு தடவி நன்றாக 20 நிமிடங்களுக்கு தொடர்ந்து மசாஜ் கொடுத்து, 20 நிமிடத்திற்கு பிறகு முடியினை ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு அலச வேண்டும். பொடுகுத் தொல்லை அதிகமாக இருப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்தால் விரைவிலே பொடுகில் இருந்து விடுதலை கிடைக்கும்.

பொடுகுத் தொல்லைக்கு உடல் சூடும் காரணமாக இருப்பதால் குளிர்ச்சியான பொருட்களை பயன்படுத்தி மசாஜ் செய்து, முடியினை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் உடல் சூடு குறைந்து இயற்கையாக குளிர்ச்சி உடலுக்கு கிடைக்கிறது. எனவே வேப்பெண்ணெய், ஆப்பிள் சிடார் வினிகர், ஆப்பச் சோடா, வெந்தயம், நெல்லிக்காய் சாறு, சின்ன வெங்காயத்தின் சாறு, ஆலுவேரா ஜெல், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணை,  இவையெல்லாம் உடல் குளிர்ச்சிக்கும், பொடுகினை குறைத்து முடியின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியவை.

யார் யாருக்கெல்லாம் பொடுகுத் தொல்லை அதிகமாக வரும்?
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள், முடியினை சுத்தமாக வைத்துக்கொள்ளாதவர்கள், அதிகமாக பயணம் செய்பவர்கள், மனநிலை இயல்பாக இல்லாமல், எப்போதும் பதற்றத்துடன் இருப்பவர்களுக்கும் பொடுகுத் தொல்லை வரும். தேவைக்கு அதிகமான எண்ணையினை முடியில் தடவுவதால் ஃபங்கஸ் உண்டாகி பொடுகுத் தொல்லை வரும் வாய்ப்பு உண்டு.

காய்ச்சல் இல்லாமலே காய்ச்சலுக்கான மருந்தை நாம் உட்கொள்வோமா? அதுபோல டேன்ட்ரஃப் இல்லாமல் விளம்பரத்தைப் பார்த்து, டேன்ட்ரஃப் கன்ட்ரோல் ஷாம்பினை வாங்கி பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தும் ஷாம்புவும் ஒரே வகையானதாக இருத்தல் வேண்டும்.  இரண்டு நிமிடத்திற்கு மேல் ஷாம்புவை தலை முடியில் இருக்கவிடக் கூடாது. ஷாம்புவை பயன்படுத்தும்போது, தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும், இரண்டு முறைக்கு மேல் ஷாம்புவை பயன்படுத்தக் கூடாது.

இவ்வளவு தொல்லைகள் ஏன்? பேசாமல் வீட்டில் அம்மாக்கள் தயாரிக்கும் சீகைக்காய் பவுடரை பயன்படுத்தினால் எந்தத் தொல்லையும் இல்லை. சீகைக்காய் தயாரிக்க முடியாதவர்கள் நாட்டு மருந்துக்கடைகளில் தயாராக இருக்கும் மூலிகை கலந்த சீயக்காய் பவுடரை வாங்கிப் பயன்படுத்துங்கள் பிரச்சனையில்லை. முடிக்கு எப்போதும் பாதுகாப்பு என்கிறார் இவர். இயற்கைக்கு ஈடேது? இயற்கைக்கு எதிரான எதுவும் எதிர்வினைதான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார் இவர். பொடுகுத் தொல்லையினை கட்டுப்படுத்த அதற்கென முறையாக பயின்ற அழகுக் கலை நிபுணர்களை அணுக வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button