முகப்பருஅழகு குறிப்புகள்

பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது? இதையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

யாராக இருந்தாலும்  சட்டெனப் பார்ப்பது முகத்தைத் தான். அதனால்தான் அனைவரும்  தங்கள் முகத்தை அழகாய்க் காட்ட அதிகமாக பிரயத்தனப்படுகிறார்கள். முகம்  பளிச்சென இல்லாமல், பருக்களோடு இருந்தால். அவ்வளவுதான், தாழ்வு மனப்பான்மை மனதில் தானாக ஒட்டிக் கொள்ளும். அதுவும் வளரும் இளம்  பருவத்தினர் என்றால்? கேட்கவே வேண்டாம். 20170601152128768

கவனம் முழுதும் முகத்தில் இருக்கும் பருவைச் சுற்றியே சுழலும். அந்த நேரத்தில், பருவைப் போக்க யார் எதைச் சொன்னாலும் உடனே செய்து  பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இல்லையெனில் ஆங்காங்கே ஊடகங்கள் வாயிலாகக் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பருவை போக்கும்  முயற்சிகளில் தானாகவே இறங்கிவிடுவார்கள். பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம்  வருகிறது? இதையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? இல்லை அறியவாவது முயல்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

பரு வருவதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதற்கான முறையான வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனை அல்லது அழகுக்கலை  நிபுணர்கள் ஆலோசனையோடு துவக்கத்திலே செய்யத் துவங்கினால் நிரந்தரமாக இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். மிக இளம் வயதான 12  மற்றும் 13 வயதினில் இளம் பருவத்தினருக்கு அதிகமாக வரும் பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு. 30 வயதினைத் தாண்டியவர்களுக்கும் முகப்பரு  பிரச்சனை உண்டு.

முகத்தில் பரு வந்து நீங்கிய பிறகும் வந்த இடத்தில் பரு நீங்கியதற்கான கரும்புள்ளி ஆங்காங்கே இருக்கும். இல்லையென்றால் அந்த இடம்  பள்ளமாகி இருக்கும். துவக்கத்திலேயே இதை சரிசெய்யவில்லை என்றால், நிரந்தரமான ஓர் அடையாளத்தை முகம் அவர்களுக்குத் தந்துவிடும்.  பருக்கள் முகத்திலும் நெற்றியிலும்தான் வரவேண்டும் என்பதில்லை: கழுத்து, முதுகு, தோள்பட்டை, நெஞ்சு ஆகிய இடங்களிலும் வரலாம்.

பரு வருவதற்கான காரணங்கள்

நம் பருவ வயதில் “ஆண்ட்ரோஜன்” என்ற இயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண்இருபாலருக்கும் சுரக்கத் தொடங்கும். சில சமயங்களில்  ஆண்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது. நமது சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளன‌.  அவை “சீபம்” (Sebum) என்ற எண்ணெய்ப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக  வைத்திருக்கப் பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆண்ட்ரோஜன் இந்த எண்ணெய்ப்பசையை மிக அதிகமாகவே சுரக்க வைக்கிறது.

அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதீத அளவில் படிவதுடன், மாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப்  பசையில் சுலபமாக ஒட்டிக்கொண்டு, மயிர்க்கால்களின் துளைகளை அடைத்துவிடுகின்றன. விளைவு நமது சருமம் சுவாசிக்க முடியாத நிலையினை  அடைகிறது. தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கி குறிப்பிட்ட இடத்தில் சேரத் துவங்கும். இப்படிச் சீபம்  சேரச்சேரத் தோலில் கோதுமை ரவை அளவில் வீக்கம் உண்டாகும்.

இதுதான் பரு (Acne vulgaris). சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சீபம்  வெளியேறும் வழி சுருங்கி, பரு வருவதற்குப் பாதை போடும். துவக்கத்தில் கருப்பு நிறத்தில் குருணை (Blackhead) போலத் தோன்றும் பரு, இரண்டு  மூன்று நாள் இடைவெளியில் வெள்ளை நிறத்தில் (Whitehead) வெளிவரும். இந்தச் சமயத்தில் தோலில் இயற்கையாகவே இருக்கிற  பாக்டீரியாக்கள் அதில் தொற்றிக்கொண்டு, பருக்களை சீழ்ப்பிடிக்க வைக்கும்.

அடிக்கடி பருக்களை தொட்டுப்பார்ப்பது அல்லது பருக்களைக் கிள்ளுவது போன்ற செயல்களால், பருக்கள் மேலும் சீழ்ப்பிடித்து, வீங்கிச் சிவந்து  வலிக்கத் துவங்கும். இவற்றுக்கு முறையான சிகிச்சை பெறவில்லை என்றால், கட்டிகளாக (Cystic acne) மாறத் துவங்குவதுடன், தோற்றப்  பொலிவையும் கெடுக்கும். பொதுவாக 13 வயதில் முகப்பரு பிரச்சனை தொடங்கும். 85 சதவிகிதம் பேருக்கு 35 வயதுவரை இப்பிரச்சனை நீடிக்கும்.  இளமைப் பருவம் கடந்தும் சிலருக்கு முகப்பரு தொந்தரவு நீடிக்கலாம். அம்மா, அப்பாவிற்குப் பரு வந்திருந்தால், வாரிசுகளுக்கும் வர அதிக  வாய்ப்புண்டு. பெண்களுக்கு மாதவிலக்கின்போது, சில ஹார்மோன்களின் அளவு மாறுபடுவதால், அந்த நேரத்தில் மட்டும் முகப்பரு தோன்றும்.

பருவில் நான்கு வகை உண்டு

* இயல்பாக வந்து போவது
* தண்ணீர் மாதிரியான திரவமாக சிறிதாக வருவது
* சீழுடன் சின்னதாக வருவது
* பெரிது பெரிதாக கட்டியாக வருவது.

இதில் முதல் மூன்றும் இயல்பாக அனைவருக்கும் வருவது. நான்காவது வருவது கொஞ்சம் ஆபத்தான வகையினைச் சேர்ந்தது. இந்தவகை பருவை  சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்தே அகற்ற இயலும்.

வேறு காரணங்கள்

எண்ணெய் தன்மையுடைய சருமம் கொண்டவர்களுக்கு முகப்பரு பிரச்சனை அதிகமாக இருக்கும். இவர்கள் அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவி  சுத்தம் செய்தல் வேண்டும். எண்ணெயில் தயாரான உணவுகளை அதிகம் உணவாக எடுத்தல் கூடாது. முகத்தைக் கழுவப் பயன்படுத்தும் காஸ்மெடிக்  பொருட்களை அடிக்கடி மாற்றவும் கூடாது. எந்த நேரமும் முகத்தில் மேக்கப்புடன் இருப்பதும் ஆபத்தை ஏற்படுத்தும். நமது சருமம் இயல்பாக சுவாசிக்க  சற்று இடைவெளி தருதல் வேண்டும். எனவே இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தைக் கழுவி சுத்தம் செய்த பிறகே உறங்கச் செல்ல  வேண்டும்.

மன அழுத்தம் இருப்பவர்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக முகப்பரு வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வயிறு  தொடர்பான பிரச்சனை இருப்பவர்களுக்கும், பொடுகு பிரச்சனை உள்ளவர்களுக்கும் முகப்பரு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொடுகு  மூலம் வரும்  பருக்கள் நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் பொறிப்பொறியாக வரும். எனவே முதலில் எந்தக் காரணத்தினால் தனக்கு பரு வருகிறது என்பதைக்  கண்டுபிடித்தல் மிகவும் முக்கியம்.

பரு வந்தால் செய்யக் கூடாதவை

* விரல்களைக் கொண்டு பரு வந்த இடத்தை அடிக்கடி தொடுதல் கூடாது.
* பருவினை அழுத்தி எடுக்கும் முறை தவறானது.
* பருவை விரலால் அழுத்தத் துவங்கினால் அந்த இடம் தொற்றுக்குள்ளாகி சருமத்தில் பள்ளம் தோன்றத் துவங்கும். பிறகு பள்ளம் விழுந்த தோற்றம்  முகத்தில் நிர‌ந்தரமாகிவிடும்.
* பரு உள்ளவர்கள் எலுமிச்சை, தக்காளி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள பழங்களை முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போடுதல் கூடாது.

பரு வந்தால் கடைபிடிக்க வேண்டியவை

* நிறைய தண்ணீர் அருந்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து லிட்டராவது தண்ணீரை குடிக்க வேண்டும்.
* ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை வெறும் நீரால் முகம் கழுவுதல் வேண்டும்.
* முகத்தை கழுவும்போது காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ரோஸ் வாட்டரில் முகம் கழுவினால் சருமத்தில் உண்டான சூடு குறைந்து  குளிர்ச்சி கிடைக்கும்.
* ஜெல் பேஸ், ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துதல் வேண்டும்.
* பயத்தம் பருப்பு அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் குளியல் பொடி கொண்டும் முகத்தைக் கழுவலாம்.
* வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது முகத்தை மூடி வெயில் நமது சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு பாதுகாப்பாகச் செல்ல  வேண்டும்.
* வெளியில் செல்லும்போது சூரிய ஒளி நேரடியாகத் தாக்காதவாறு சன் க்ரீம்களை பயன்படுத்தலாம். இது சருமத்தை சற்று பாதுகாக்கும்.
* கைபேசிகள் வழியாக வெளியேறும் ரேஷர் கதிர்கள் முகத்தை தாக்கும் தன்மை கொண்டது. எனவே கைபேசி பயன்பாட்டை குறைப்பதுடன்,  தூங்கும்போது அருகில் வைப்பதை தவிர்த்தல் வேண்டும்.
* சாலிட்டிரிக் ஆயில் அல்லது டீ ட்ரீ ஆயில் உள்ள ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் முகப்பரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
* ஆலுவேரா சருமத்திற்கு மிகவும் உகந்தது. ஆலுவேரா ஜெல்லை நன்றாக மசித்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் அரை ஸ்பூன் இணைத்து முகத்தில்  பேக் போடலாம். ஆலுவேராவில் உள்ள ஜெல் சருமத்தில் உள்ள எண்ணைத் தன்மையை இழுப்பதுடன், கஸ்தூரி மஞ்சள் முகப்பருவை கட்டுப்படுத்தும்.
* வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து இரண்டையும் அரைத்து, அத்துடன் வெந்தயம் எசன்ஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம். இதுவும்  முகப்பருவை கட்டுப்படுத்தும்.
* அதிகமாக பழம் மற்றும் பழச்சாறுகளை உணவாக எடுக்கலாம். காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
* சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும். எனவே  குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது உணவை எடுக்க வேண்டும்.

முகப்பரு வந்துவிட்டால் சுயமாக எதையாவது செய்து, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சரும மருத்துவர்கள் அல்லது அழகு நிலையங்களில்  இதற்கென முறையான பயிற்சி பெற்ற அழகுக் கலை வல்லுநர்களை அணுகி, பருவில் இருக்கும் மார்க்கை முறைப்படி மெஷின் வைத்தும் எடுக்கலாம்.
வெளிநாட்டு தயாரிப்புகளான சிலவகை ஃபேஸ் க்ரீம்கள் அந்த நாட்டவரின் சருமத்திற்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்டவை. அவை டைப் 1, 2, 3  என்ற காம்ளெக் ஷ‌னில் இருக்கும். நம் நாட்டின் ஸ்கின் டைப் 4, 5 என்ற வகையில் இருக்கும். எனவே நம்நாட்டு தயாரிப்பு ஃபேஸ் க்ரீம்களே நமது  சருமத்திற்கு ஏற்றவை. அவற்றைப் பயன்படுத்துவதே எப்போதும் சிறந்தது.

இனிவரும் கேள்விக்கான பதில்கள் அடுத்த இதழில்…
* பிம்பிள் மார்க்(கரும்புள்ளி) மறைய என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன?
* டீ ட்ரீ ஆயிலை பயன்படுத்தி ஃபேசியல் செய்து பருவை நீக்க, படங்களுடன் செய்முறை வரும் இதழில்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button