நாடு முழுவதும் கொரோனா உக்கிரம்-சொல் பேச்சு கேட்காமல் வெளியில் திரியும் மக்கள்.. டிரெண்டிங்காகும் #DeclareEmergency
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாக் #DeclareEmergency என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த முதலில் நாடு தழுவிய சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து சுய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால் அன்றைய தினம், கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்ற பெயரில் வீதிகளில் பெருங்கூட்டம் கூடியது. இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியே 21 நாள் லாக்டவுனை அமல்படுத்தினார். ஆனாலும் பொதுமக்கள் கொரோனாவின் தாக்கத்தை சீரியசாக புரிந்து கொள்ளவில்லை.
வீடுகளில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் லாக்டவுன், ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு என அத்தனையையும் கேலிக்கூத்தாக்கி இருக்கிறது.
இப்படியான அலட்சியங்களால்தான் வெளிநாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மாண்டு போனதை மக்கள் மறந்துவிட்டனர். இந்த நிலையில் டெல்லியில் லட் சக்கணக்கான பிற மாநில தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் அந்த பெருநகரைவிட்டு வெளியேறியது நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து டெல்லி பேரவலத்துக்கு முதல்வர் கெஜ்ரிவால்தான் காரணம் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் நாடு முழுவதும் உடனே எமர்ஜென்சியை அமல்படுத்த வேண்டும்; கெஜ்ரிவாலை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. டிவிட்டரில் #DeclareEmergency என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.