​பொதுவானவை

சூப்பரான மசாலா தால்

பருப்புக்களில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் இருப்பதால், இதனை வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அப்படி பருப்புக்களை சமைக்கும் போது, அதில் ஒருசில மசாலாப் பொருட்களை சேர்த்து செய்தால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த மசாலா தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த மசாலா தால் சாதத்திற்கு மிகவும் சூப்பராக இருக்கும்.

Tasty Masala Dal Recipe
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1 கப்

கடலைப்பருப்பு – 1 கப் (1 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)

மைசூர் பருப்பு – 1/2 கப்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

மல்லி – 1 டீஸ்பூன் (கையால் நசுக்கியது)

வரமிளகாய் – 1

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 3 கப்

கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

முதலில் அனைத்து பருப்புக்களையும் நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பருப்புக்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு அதில் விசில் போனதும், குக்கரை திறந்து மத்து கொண்டு லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மல்லி, பெருங்காயத் தூள், வரமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி சேர்த்து நன்கு 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் மசித்து வைத்துள்ள பருப்புக்களை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மசாலா தால் ரெடி!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button