முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா கரும்புள்ளிகளைப் போக்க உதவும் 5 அற்புதமான ஃபேஸ் பேக்குகள்!!!

நம் அழகைப் பிரதிபலிப்பது முகம். அத்தகைய முகத்தை அனைவருக்குமே அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பல்வேறு பராமரிப்புக்களையும் மேற்கொள்வோம். அத்தகைய அழகான முகத்தின் அழகை கெடுக்க அவ்வப்போது முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படும்.

இப்படி முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்கள் சருமத்துளைகளில் தங்கி அடைப்பை ஏற்படுத்துவது தான். இந்த கரும்புள்ளியைப் போக்க பலரும் பல்வேறு க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் பலருக்கு எந்த ஒரு பலனும் கிடைத்ததாக தெரிந்திருக்காது. அதற்கு மாறாக பல்வேறு சரும பிரச்சனைகளை சந்தித்திருப்போம்.

ஆனால் கரும்புள்ளிகளைப் போக்க க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தாமல், வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யலாம். இங்கு கரும்புள்ளிகளை மறையச் செய்யும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை செய்து பாருங்கள்.

ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்

ஓட்ஸ் மற்றும் தயிர் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் சருமத் துளைகளை அடைத்துக் கொண்டிருந்த இறந்த செல்கள் நீங்கும். மேலும் இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள தயிர் சருமத்தை மென்மையாக மாற்றும். இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பப்பாளி ஃபேஸ் பேக்

பப்பாளி பழத்தைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தின் ஈரப்பசையும் அதிகமாகும். மேலும் இதில் பருக்கள், கரும்புள்ளிகளைப் போக்கும் புரோடியோலைடிக் மற்றும் பாக்டீரிசீடல் தன்மைகள் இருக்கிறது. இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு பப்பாளிப் பழத்தை மசித்து, அதில் 1/4 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு முறை போட்டு வந்தால், கரும்புள்ளிகளை மறைவதைக் காணலாம்.

கொத்தமல்லி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

கொத்தமல்லி மற்றும் மஞ்சளைக் கொண்டு போடப்படும் ஃபேஸ் பேக்கினால் கரும்புள்ளிகள் மறைவதோடு, பெரியதாக இருக்கும் சருமத்துளைகளும் சுருங்கும். இந்த ஃபேஸ் பேக் போடுவதற்கு கொத்தமல்லியை அரைத்து, அதில் 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது முகத்தில் நன்கு தடவி, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் நல்ல மாற்றம் தெரியும்.

முட்டையின் வெள்ளைக் கரு

முட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, சருமத்துளைகள் சுருங்கும். இதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அதன் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் மிகவும் நல்லது.

முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

முல்தானி மெட்டி முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கும். முல்தானி மெட்டியைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, அது முகத்தில் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரித்து, முகத்தை பொலிவோடு வெளிக்காட்டும். இந்த ஃபேஸ் பேக் செய்ய 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், 3 டீஸ்பூன் ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 2-3 நிமிடம் ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை போட்டால் நல்ல பலனை விரைவில் காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button