அழகு குறிப்புகள்

சுவையான பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி

இதுவரை எத்தனையோ பிரியாணி ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் மீன் பிரியாணியை அதிகம் யாரும் செய்திருக்கமாட்டோம். அதிலும் பெங்காலி ஸ்டைலில் மீன் பிரியாணியை செய்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த ஸ்டைல் பிரியாணியானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. மேலும் இந்த ரெசிபி செய்வதற்கு நேரம் சற்று அதிகமானாலும், இது மிகவும் சுவையுடன் இருக்கும்.

இங்கு அந்த பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 2 1/2 கப்

கண்ணாடி கெண்டை மீன் – 4-5

வெங்காயம் – 2 (பொரியது மற்றும் நறுக்கியது)

உருளைக்கிழங்கு – 2 (துண்டுகளாக்கப்பட்டது)

பட்டை – 1

கருப்பு ஏலக்காய் – 1

பச்சை ஏலக்காய் – 2

கிராம்பு – 3

பிரியாணி இலை – 3

ஜாதிக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

பால் – 1 கப்

குங்குமப்பூ – 1 சிட்டிகை

சர்க்கரை – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கெவ்ரா வாட்டர் – 1 டீஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – 2 டீஸ்பூன் (நறுக்கியது)

தண்ணீர் – 5 கப்

செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அரிசியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு மற்றும் கழுவி வைத்துள்ள அரிசி ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும், அதனை இறக்கி, ஒரு தட்டில் பரப்பி குளிர வைக்க வேண்டும்.

பின் பாலில் குங்குமப்பூவை போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து 10 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி, அதனை ஒரு வாணலியில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள மீனை போட்டு, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின் அதே எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், குளிர வைத்துள்ள சாதத்தை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பாதியை மட்டும் வாணலியில் போட்டு, அதன் மேல் சர்க்கரை, ஜாதிக்காய் பொடி, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ பால், சிறிது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வறுத்த வெங்காயத்தைப் பரப்பி விட வேண்டும்.

பின்பு அதன் மேல் மீதமுள்ள சாதம், உருளைக்கிழங்கு, வெங்காயம், குங்குமப்பூ பால் மற்றும் உப்பு ஆகியவற்றை பரப்பி, பின் அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து, இறுதியில் கெவ்ரா வாட்டரை ஊற்றி, வாணலியை மூடி, 10-15 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, இறுதியில் எலுமிச்சை சாற்றினை மேலே ஊற்றி இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி ரெடி!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button