சரும பராமரிப்பு

எண்ணெய் தேய்க்கும் முறை

தீபாவளி என்றால் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு, ‘டிவி’ நிகழ்ச்சிகள். ஆனால், போன தலைமுறையினரைக் கேட்டால் அதிகாலை 3:௦௦ மணிக்கு எழுந்து
நல்லெண்ணெய் தேய்த்து, சிகைக்காய், அரப்பு போட்டு குளிரில் நடுங்கிக் கொண்டே குளித்தது தான் ஞாபகமாய் பதிவாகியிருப்பதாக கூறுவர்.

உடலுக்கும், மனதுக்கும் பல நன்மைகளை வரிசையாக தரும் இந்த நல்லெண்ணெய் குளியலுக்காக,தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு காத்திருக்க தேவையில்லை. நம் உடலும், மனதும் ஆரோக்கியமாக இருந்தால் தான் பண்டிகையும், பலகாரம், பட்டாசும். அதனால் தான் நம் முன்னோர்கள், ஒவ்வொரு பண்டிகையையும் நம் ஆரோக்கியத்துடன் தொடர்புபடுத்தி
வைத்துள்ளனர். எண்ணெய் தேய்க்கும்போது வியர்வை துவாரங்கள் வழியாக உள்ளே போய் நம் தோலை மிருதுவாக்கி, தோலின் அடியிலுள்ள அழுக்குகளை வெளியே கொண்டு வருகிறது.

எண்ணெய் தேய்க்கும் முறைக்கும்,
அறிவியலுக்கும் தொடர்பு உண்டு. தலையில் துவங்கும்போது இதயத்தை நோக்கி
கீழாகவும், பாதத்தில் துவங்கும்போது மார்பு பகுதியை நோக்கி மேலாகவும் தேய்க்கணும்.
உடலில் ரத்தம் புவிஈர்ப்பு விசை காரணமாக பாதம் நோக்கிப் பாய்கிறது. இதனால் உடலை கட்டுப்படுத்தும் மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம் கிடைப்பது குறைகிறது. மேலும் அதிகப்படியான சூட்டினாலும், வேலைப் பளு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளாலும் தலையில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. இந்த குறைபாட்டை சீராக்கவே எண்ணெய் குளியல் வாரம் இரு முறை அவசியம்.

தலைக்கு அடுத்து கண்களுக்கு மிக அவசியம் இந்த எண்ணெய் குளியல். மிக மெல்லிய நரம்புகள் மூலமே கண்களுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கிறது. உடல் சூடாகும்போது குறைபாடு ஏற்படும்.

தொடர்ந்து எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது கண்கள் குளிர்ச்சியடைந்து சீரான ரத்த ஓட்டம் நடைபெறுகிறது.குடல், கல்லீரல் என அனைத்து உறுப்புகளுமே குளிர்ச்சி அடைகின்றன. இதன் மூலம் நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஏற்படுவதில்லை. அதிக சூட்டினால் ஏற்படும் மூல நோய் கூட இந்த எண்ணெய் குளியல் மூலம் தடுக்கப்படுகிறது. பலவிதமான மனச்சோர்வுக்கும், மன நிலை மாற்றங்களுக்கும் உடல் சூடு அதிகரிப்பது தான் காரணம் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள்.

கல் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் தான் நல்லது என்றாலும், கண்டிப்பாக ரீபைண்ட் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது சிறப்பான பலன்களை தரும்.

நல்ல எள் எண்ணெயில் மிளகு, விராலி மஞ்சள், பூண்டு, இஞ்சி போட்டு நன்கு காய்ச்சி தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கணும். அதில், 20 நிமிடம் வெயிலில் நின்றால் இன்னும் பலன் அதிகம். உடல் வியர்த்து ஈரம் எண்ணெய் பசையுடன் இருக்கும். தோலின் உள், வெளி, அழுக்குகளை வெளியேற்றும்.

கண்களிலிருந்து சூடு வெளியேறி, கண்ணீர் துளிப்பதை நாம் உணர முடியும். பின் நல்ல தண்ணீரில், சிகைக்காய் அல்லது அரப்புத் துாள் தேய்த்து வெது வெதுப்பான தண்ணீரில் குளிப்பது பரம சுகம் தரும் ஒரு விஷயம். கண்டிப்பாக கண், காதில் எண்ணெய் விடக்கூடாது.

ஒவ்வொரு முறையும் இவ்வளவு நேரம் செலவழிக்க முடியாதவர்கள் நல்லெண்ணெய்யில் நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி, வெட்டிவேர், நன்னாரி,
பொன்னாங்கண்ணி போன்றவைகளை போட்டு காய்ச்சி வைத்துக் கொள்ளலாம்.

எண்ணெய் தேய்ப்பது எப்படி, எதனால், ஏன் என்பதையும் தாண்டி இப்படி குளித்த தினத்தில் பகலில் துாங்கவோ, குளிர்ச்சியான பானங்களை அருந்தவோ, அசைவம் சாப்பிடுதோ கூடாது. இரவிலும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை தவிர்க்கணும். இந்த தீபாவளி அனைவருக்கும் குளிர்ச்சியான தீபாவளியாக இருக்க வாழ்த்துகள்!

நம் வீட்டிலேயே சிகைக்காய் துாள் தயாரித்துக் கொள்ளலாம்.
சிகைக்காய் – 1 கிலோ,
மருதாணி – 100 கிராம்,
செம்பருத்தி பூ – 100 கிராம்
கரிசலாங்கண்ணி – 100 கிராம்
வெந்தயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – 100 கிராம்
பச்சைப் பயிறு – 100 கிராம்
இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து, சாதம் வடித்த கஞ்சியில் கலந்து தலைக்கு தேய்த்து, குளிப்பது நல்ல பலனைத் தரும்.
– வான்மதி.
E 1413682052

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button