ஆரோக்கியம் குறிப்புகள்

அலுவலக காதலால் ஏற்படும் ஆபத்துக்கள் ! அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

காதல்…! உலகத்திலுள்ள அத்தனை உயிர்களையும் மயக்கும் மந்திர சக்தி கொண்டது.– பருவத்தின் தொடக்கத்தில் துளிர்விடும் காதல் பக்குவமில்லாதது.– பருவம் கடந்த காதலும் பக்குவமற்றது.

– படிக்கும் காலத்து காதல் படிப்பிற்கு உலைவைக்கும்.

– வேலை பார்க்கும் இடத்தில் வரும் காதல் பெரும்பாலும் வேதனையைத்தான் தரும். வேலை பார்க்கும் இடத்து காதலையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்..!

1 . வேலையில் கவனக் குறைவு:

ஆண்களும், பெண்களும் ஒன்றாக அனைத்து இடங்களிலும் வேலைபார்க்கிறார்கள். வேலை பார்க்கும் இடத்திலே காதல் வசப்படுவது, வேலையில் இருக்கும் அவர்களது கவனத்தை குறைத்துவிடுகிறது. திறமையானவர்கள்கூட காதல்வசப்  படும்போது, திறமையை பணியில் காட்டாமல் காதலில் காட்டிவிடுகிறார்கள்.

அதனால் தவறுகள் நிகழும்போது, அலுவலகத்தில் பிரச்சினைகள் தோன்றும். அலுவலகத்தில் பணியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். ஏன்என்றால் அங்கு நடக்கும் சிறிய தவறுகூட பெரிய இழப்புகளை எற்படுத்திவிடும். காதலனும், காதலியும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும்போது ஒருவர் மீதுதான் இன்னொருவர் கவனம் இருக்குமே தவிர, வேலையின் மீது முழு கவனமும் செல்லாது.

ஒரு ஜோடி காதலிப்பது தெரிந்துவிட்டால், இருவரில் யார் இயல்பாக தவறு செய்தாலும், அதற்கு காதல் சாயம் பூசிவிடுவார்கள். அதனால் தவறு பெரிதாக்கப்பட்டு, வேலையையே இழக்கும் சூழ்நிலை உருவாகிவிடும். காதலை எல்லோரும் புனிதமாக பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் அதற்கு தவறான அர்த்தம் கற்பிப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள் அலுவலகத்தில் இருந்தால், அந்த காதல் தவறாக பார்க்கப்பட்டுவிடும். அதுமட்டுமின்றி சிலருக்கு அடுத்தவர்களின் காதல் பொறாமையை ஏற்படுத்தும். பொறாமையால் வதந்தியை கிளப்பிவிட்டு, காதலுக்கே களங்கம் ஏற்படுத்திவிடவும் செய்வார்கள். அதனால் வேலை பார்க்கும் இடத்தில் வேலையை மட்டும் பாருங்கள்.

2.குறுஞ்செய்திகள்:

குறுஞ்செய்திகள் என்னவோ சிறியவைதான். அதற்காக செலவழிக்கும் நேரம் பெரிது. எதிர்பார்ப்புகள் அதைவிட பெரிது. அலுவலக நேரத்தில் வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுப்புவது, குறுஞ்செய்திகள் அனுப்புவது இதெல்லாம் எவ்வளவு நேரத்தை வீணடிக்கச் செய்யும் என்பது தெரியுமா? ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் ‘மெசெஜ்’ அனுப்புவார்கள். அதற்கு பதில் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் வேலையில் இருந்த கவனம் சிதறிவிடும். இதெல்லாம் அலுவலகத்தில் தேவையற்றது. இது வேலையை முற்றிலுமாக பாதிக்கச் செய்துவிடும்.

3. தவறுகளை மறைத்தல்:

சிலருக்கு ஆர்டர்கள் பெறுவது, பொருட்களை சப்ளை செய்வது, வாடிக்கையாளர்களை சந்திப்பது போன்றவைதான் வேலையாக இருக்கும். அவர்கள் காதல்வசப்பட்டுவிட்டால், காதலியோடு ஊர்சுற்றத் தொடங்கிவிடுகிறார்கள். ஊர்சுற்றுவதுதான் வேலை என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று அவர்கள் நினைத்தாலும், விரைவாகவே அது வெளியே தெரிந்துவிடும்.

வெளியே தெரிய தாமதமானாலும் அதற்குள் அவரது அலுவலக இலக்கில் குறைபாடு தோன்றி விடும். சரியாக ஆர்டர் எடுக்காமலோ, சப்ளை செய்யாமலோ சொதப்பிவிடுவார்கள். அதனால் அலுவலகத்தில் அவர்கள் பெயர் கெட்டுவிடும். பணி தொடர்புடைய வளர்ச்சியும் பாதிக்கப்படும். பூங்கா, சினிமா தியேட்டர் என்று சுற்றி, சேமிப்பை கரைத்து, கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்கும் சென்றுவிடுவார்கள்.

4.தவறுகளை மறைத்தல்:

மேலதிகாரியாக இருப்பவர் ஆண் என்றால், அவருக்கு கீழ் வேலை பார்க்கும் அனைத்து பெண்களையும் அவர் சமமாக பாவிக்கவேண்டும். அவர், அந்த பெண்களில் ஒருத்தி மீது காதல்வசப்பட்டுவிட்டால் அவளுக்கு சாதகமாக நடந்துகொள்ளத் தொடங்குவார். அவளுக்கு நிறைய சலுகைகளை வழங்குவார். அவள் செய்யும் தவறுகளையும் மறைத்துவிடுவார். சிலரோ தன் காதலி செய்யும் தவறை மறைக்க, வேறு யார் மீதாவது அந்த பழியை போட்டுவிடவும் செய்வார்கள். அவர்கள் இருவரும் அலுவலகத்தில் இருக்கும்போது தங்கள் பணி என்ன என்பதை மறந்து காதல் கொள்ளும்போது, அடுத்தவர்களுக்கு கேலிப்பொருளாகவும் அவர்கள் மாறிவிடுவார்கள்.

5.நண்பர்களை புறக்கணித்தல்:

காதலிக்கும்போது காதலி, காதலனை நோக்கியும்– காதலன், காதலியை நோக்கியும் ஈர்க்கப்படுகிறார்கள். காதலனே தனது உலகம் என்று காதலியும், காதலியே தனது உலகம் என்று காதலனும் கருதுவதால், அதுவரை அவர்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த நண்பர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அந்த நண்பர்களின் உதவி அலுவலக பணிக்கு தேவை என்கிற நிலையில் அவர்களை புறக்கணித்தால், அதன் மூலம் அலுவலக பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுவிடும். அலுவலகத்திலே அழகான பெண், ஒருவருக்கு காதலியாகிவிட்டால் அவர் தனது தலையில் ஏதோ புதிய மகுடம் ஒன்றை சூட்டிக்கொண்டதுபோல் கர்வமடைந்துவிடுவார்.

அந்த கர்வம் இயல்பாகவே நல்ல நண்பர்களைக்கூட அவரைவிட்டு பிரியவைத்துவிடும். அப்படிப்பட்டவர்கள் எதிர்காலத்தில் நல்ல நண்பர்கள் கிடைக்காமல் தவிக்கவேண்டியதாகிவிடும்.

6.தேவையற்ற பேச்சு:

அலுவலக வேலை என்பது எல்லோருக்குமே ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அந்த அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற்று, மீண்டும் மனதை உற்சாகப்படுத்திக்கொள்ள அலுவலக நேரத்தில் இடைவெளி கிடைக்கிறது. அந்த சில நிமிட நேரத்தை பயனுள்ள வழியில் கழிப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.

ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்கும்போது அலுவலக ஓய்வு நேரத்தை, நல்லபடியாக கழிக்கிறார்கள். அந்த நேரத்தில்கூட தங்கள் பணி பற்றியும், அலுவலக வேலை சூழல் பற்றியும் விவாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் காதலர்களாகிவிட்டால், அவர்கள் பேச்சு முழுவதும் காதலை சுற்றித்தான் செல்கிறது. அரட்டை அடிப்பது, பொழுதுபோக்குவது போன்று நேரத்தை செலவிட்டு விடுகிறார்கள்.

அப்போது பேசப்படும் விஷயங்கள் அவர்கள் இருவருக்கும் தேவையற்ற பேச்சாக அமைந்துவிடும். அதை பார்ப்பவர்கள் அவர்கள் இருவரையும் தேவையற்ற பேச்சுக்களால் துளைத்தெடுத்துவிடுவார்கள்.

7.பண– நேர இழப்பு:

இன்றைய காதலில் சுயநலம் அதிகம். தன்னுடைய வேலையை பகிர்ந்துகொள்ளவும், தனக்கு தேவைப்படும்போது பண உதவி பெறவும் சில பெண்கள், ஆண்களை திட்டமிட்டு காதலிப்பார்கள். அவர்   களும் விவரம் தெரியாமல் தனக்கும் ஒரு காதலி கிடைத்துவிட்டாள் என்ற சந்தோஷத்தில் எதை எல்லாம் கொடுக்க முடியுமோ அதை எல்லாம் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.

அப்போது சில நேரங்களில் அலுவலக நேரமும், பணமும்கூட தவறான வழிகளில் செலவிடப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். பிற்காலத்தில் அது சமாளிக்க முடியாத சிக்கலை தோற்றுவித்துவிடும். அப்படி ஒரு சிக்கல் ஏற்படும்போது காதலி அவரை விட்டு பிரிந்துகூட சென்றிருக்கலாம். அதனால் அலுவலக காதல் விதிமுறைகளை மீறாத அமைதியான காதலாக இருக்கவேண்டியது அவசியமாகிறது.

8.கண்காணிப்பு:

இப்போது அலுவலகங்களில் நவீன தொழில்நுட்ப முறைகளை கையாண்டு கண்காணிக்கிறார்கள். மனிதர்களின் கண்களில் இருந்து தப்பித்தாலும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களின் கண்களில் இருந்து தப்ப முடிவதில்லை. காதலர்கள் அலுவலகத்தில் எவ்வளவு கவனமாக இருந்து காதலை வளர்த்துக்கொண்டிருந்தாலும், விரைவாகவே அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறார்கள்.

அப்போது இருவரும் இருவேறு கிளைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். அதனால் ‘ஏண்டா காதலித்தோம்!’ என்று கவலைப்படும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பிரிந்து வெவ்வேறு ஊருக்கு செல்லும்போது அவர்களிடம் இருந்து காதலும் பிரிந்து திசைமாறிப் போய்விடுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button