Other News

தெரிஞ்சிக்கங்க…கொரோனா வீட்டு தனிமை.. பின்பற்றவேண்டிய விஷயங்கள்!

லேசான கொரோனா அறிகுறிகள், பாதிப்புகளை கொண்டவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சையை தொடர்வதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்படி வீட்டு தனிமையில் இருப்பவர்கள், சிகிச்சை பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்திய மருத்துவ சங்க தலைவர், ஜெயலால் விவரிக்கிறார்.

நிலை 1: ஒரு நபர் கொரோனா நோய் பாதிப்பு கொண்டவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டாலோ, காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, வாசனை, சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை அனுபவித்தலோ அவர் முதலில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தினர் உள்பட மற்றவர்கள் யாருடனும் நேரடியாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இரவில் நன்றாக தூங்க வேண்டும். இந்த காலகட்டத்தில் மருத்துவர் அல்லாத வேறு யாரிடமும் ஆலோசனை பெறக்கூடாது.

நிலை 2: அடுத்த கட்டமாக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு சென்று ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது கொரோனா நடத்தை விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அங்கு தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகும் வரை, வீட்டில் தனிமை அறையில் சுய தனிமையை தொடர வேண்டும். சுய தனிமைப்படுத்துதலின் போது அணிந்திருக்கும் துணிகளையும், பயன்படுத்திய பொருட்களையும் தனியாக வைத்திருங்கள். துணிகளை தனியாகத்தான் துவைக்க வேண்டும்.

வீட்டு உறுப்பினர்களிடம் பேசும்போது மட்டுமின்றி எப்போதும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்களையும் முக கவசம் அணியச்சொல்ல வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். தலைப்பகுதியில் மட்டுமின்றி வயிற்று பகுதியிலும் தலையணையை வைத்து அழுத்தியபடி குப்புறப்படுத்து தூங்க வேண்டும். மூச்சை நன்றாக ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட பழகிக்கொள்ளவும் வேண்டும். வழக்கத்தை விட தண்ணீர் அதிகம் பருக வேண்டும். தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடலாம். அவை மன அமைதிக்கு வித்திடும்.

நிலை 3: பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனே மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்கள்.

நிலை 4: பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாவிட்டாலோ, லேசான அறிகுறிகள் இருந்தலோ வீட்டில் தனிமையை தொடருங்கள். சுகாதார நிபுணர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று, அதனை பின்பற்றுங்கள்.

நிலை 5: வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் விறுவிறுப்பான நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங், டிரெட்மில்லில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். அதிக உடல் வலியை உணர்ந்தாலோ, சோர்வாக இருந்தாலோ கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம். அதேவேளையில் மூச்சை நன்றாக உள் இழுத்து வெளியிடும் சுவாச பயிற்சிகளை தவறாமல் செய்யுங்கள். யோகாசனம் செய்வதற்கு முடிந்தால் அதனையும் மேற்கொள்ளலாம். ஒருசில சுய பரிசோதனைகளையும் செய்து கொள்ளலாம். 6 நிமிட நடைப்பயிற்சி நல்ல பலனை தரும். முதலில் ஆக்ஸிமீட்டரில் ஆக்சிஜன் அளவை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அதில் ஆக்சிஜன் அளவு 96 முதல் 100 வரை இருப்பது சிறந்த நிலையாகும். வீட்டுக்குள்ளேயே 6 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்துவிட்டு மீண்டும் ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தி ஆக்சிஜன் அளவை அளவிட வேண்டும். அப்போது ஆக்சிஜன் அளவு 5 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தால் சுவாச நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக அர்த்தம். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

நிலை 6: உடல் வெப்பநிலை, இதய துடிப்பு, சுவாச அளவு, ஆக்சிஜன் செறிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை 8 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது சரி பார்க்க வேண்டும். நீரிழிவு நோய் இருந்தால் தினமும் இரண்டு முறை ரத்த அழுத்தத்தை சரிபார்த்து மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளலாம். 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு மணி நேரம் வயிற்றுக்கு அடியிலும் தலையணையை வைத்து குப்புறப்படுத்து தூங்க வேண்டும்.

நிலை 7: இதயத்துடிப்பு தொடர்ந்து 100-க்கு அதிகமாக இருந்தாலோ, மூன்று நாட்களுக்கு மேல் வெப்பநிலை 100-க்கு மேல் இருந்தாலோ, கடுமையான தலைவலி அல்லது தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு இருந்தாலோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

கல்லீரலில் தயாரிக்கப்படும் புரதம் சி.ஆர்.பி என்று குறிப்பிடப்படும். ரத்தத்தில் இந்த சி.ஆர்.பி அளவு 10-க்கு மேல் இருந்தாலோ, லிம்போசைட் அளவு 20 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தாலோ, பெரிடின் மற்றும் டி-டைமர் அதிகமாக இருந்தாலோ, சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம் அதிகரித்தாலோ அது மோசமான நிலையாக கருதப்படும். சிறுநீரக செயலிழப்பும் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.

நிலை 8: மருத்துவருடன் தொடர்பில் இருந்தபடி, அவரது பரிந்துரையின் பேரில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாமா? வேண்டாமா? என்பதை மருத்துவர் பரிந்துரை செய்வார். ஒருவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் ரெம்டெசிவிர் அல்லது ஆக்சிஜன் செறிவூட்டலை பெறுவதற்கு முயற்சி செய்யாதீர்கள். 10 முதல் 15 சதவீதம் பேருக்கே இவை தேவைப்படும். அவர்களில் நீங்கள் ஒருவராக இருந்தால் மருத்துவர் நிச்சயம் பரிந்துரைப்பார்.

நிலை 9: வீட்டு தனிமையில் இருக்கும்பட்சத்தில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதில் சி.ஆர்.பி. அளவு 10-க்கும் மேல் தொடர்ந்து உயர்ந்திருந்தால் ஆபத்தான அறிகுறியாகும். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்பும் வரை டாக்டரின் பரிந்துரையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

-dailythanthi-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button