சரும பராமரிப்பு

ஒரே இரவில் முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்.

வெயிலில் சுற்றி முகம் மற்றும் கை, கால்களின் நிறம் கருமையாகியிருக்கும். அதுமட்டுமின்றி புகைப்பிடிப்பதாலும், மன அழுத்தத்தில் இருப்பதாலும், சருமம் பொலிவிழந்து ஒருவித சோர்வுடன் காணப்படும். பொதுவாக இப்படி முகம் பொலிவிழந்து கருமையாக காணப்பட்டால், அழகு நிலையங்களுக்கு சென்று ப்ளீச்சிங் செய்வோம்.

ஆனால் சருமத்தின் பொலிவு மற்றும் நிறத்தை அதிகரிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஒருசில ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டு வந்தால், சருமத்தை அழகாகவும் பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம்.

அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசில ஃபேஸ் பேக்குகளை அன்றாடம் போட்டு வந்தால், நிச்சயம் விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம். மேலும் இந்த ஃபேஸ் பேக்குகள் அனைத்தும் எவ்வித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

தேன்
தேன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதோடு, சிறந்த ப்ளீச்சிங் பொருளாகவும் பயன்படும். மேலும் தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. எனவே அந்த தேனை தினமும் முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தயிர்
தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை, கால்களில் தடவி ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவாகும். முக்கியமாக, இந்த செயலை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பப்பாளி
பப்பாளி கூட ப்ளீச்சிங் தன்மை கொண்டது. அதற்கு பப்பாளித் துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து, 2-3 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

எலுமிச்சை
எலுமிச்சை மற்றொரு அற்புதமான ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவவும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் பொலிவு மேம்படும்.

மஞ்சள்
தென்னிந்திய பெண்களின் அழகின் ரகசியமே மஞ்சள் தான். மேலும் மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், இந்த மஞ்சள் தூளை பாலில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

கற்றாழை
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இது எலுமிச்சையைப் போன்றே ப்ளீச்சிங் தன்மை கொண்டதால், இவையும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும். அதற்கு 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1/2 கப் ஆரஞ்சு ஜூஸ் கலந்து, முகம், கை, கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் குளிர்ச்சித்தன்மை உள்ளதால், இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும கருமை நீங்குவதோடு, சருமமும் புத்துணர்ச்சியுடன் காணப்படும். எனவே தினமும் வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ முகத்தில் வைத்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்தின் கருமை நீங்குவதோடு, சரும சுருக்கமும் மறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button