சரும பராமரிப்பு

சரும பிரச்சனைகளை சரிசெய்யணுமா? இப்படி யூஸ் பண்ணுங்க…

தக்காளி ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. தக்காளி சூப்பர் உணவுகளுள் ஒன்றாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இது குடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் சிறந்தது மட்டுமல்ல, சருமத்திலும் மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்றவை அதிகம் உள்ளன. அதனால் தான் பல அழகு சாதனப் பொருட்களில் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைட்டமின்கள் சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமானவை.

தக்காளியில் உள்ள அமிலத்தன்மை சருமத்துளைகளில் அழுக்குகளால் ஏற்பட்ட அடைப்புக்களை நீக்கி, முகப்பருக்களை சரிசெய்ய உதவுகிறது. அதோடு இது ஆரோக்கியமான செல்களை மாசுப்படுத்தும் ப்ரீ-ராடிக்கல்களை அகற்றவும் பயன்படுகிறது. இதுமட்டுமின்றி இன்னும் பல பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய திறன் தக்காளிக்கு உள்ளது. கீழே நாம் சந்திக்கும் சில சரும பிரச்சனைகளைப் போக்க தக்காளியை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.

கரும்புள்ளிகளை நீக்க..

பலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அசிங்கமாக இருக்கும். இந்த கரும்புள்ளிகளை எளிதில் போக்க தக்காளி பெரிதும் உதவி புரியும். அதற்கு ஒரு தக்காளியை எடுத்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பகுதி தக்காளியை சர்க்கரையில் தொட்டுக் கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மென்மையாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் தக்காளியில் உள்ள அமிலம் மற்றும் சர்க்கரை, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வேரோடு நீக்கி, முகத்திற்கு பொலிவை தரும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்வது நல்லது.

முகப்பருக்களைப் போக்க…

சிலருக்கு முகத்தில் பருக்கள் அடிக்கடி வந்து தொல்லைத் தரக்கூடும். அந்த பருக்களைப் போக்க தக்காளி உதவுகிறது. அதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்துளைகளில் உள்ள அடைப்புக்களை நீக்குவதோடு, பருக்களால் வந்த தழும்புகளையும் மறையச் செய்யும். நீங்கள் சென்சிடிவ் சருமத்தைக் கொண்டவரானால், இந்த மாஸ்க்கை முகத்தில் பயன்படுத்தும் முன் கைகளில் சோதித்துப் பாருங்கள்.

பொலிவிழந்த முகத்தைப் பொலிவாக்க…

உங்கள் முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? இயற்கையான வழியில் பொலிவாக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதை நன்கு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வையுங்கள். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க் சருமத்தை நீரேற்றம் செய்வதற்கும், சரும கருமையைப் போகுவதற்கும் உதவும். இதில் சேர்க்கப்படும் தயிர் நீரேற்றத்திற்கு மட்டுமின்றி, மென்மையான சருமத்தையும் வழங்குகிறது.

சரும கறைகள் நீங்க…

உங்கள் முகத்தில் கருமையான திட்டுகள் தென்படுகிறதா? அப்படியானால் சிறிது பப்பாளியை அரைத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதில் சிறிது தக்காளி கூழ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் சருமத்தில் கறைகள் போன்று காணப்படும் திட்டுக்கள் நீங்குவதோடு, உங்கள் சருமத்திற்கு பிரகாசத்தையும் அளிக்கிறது.

சரும வறட்சி நீங்க…

உங்கள் முகம் அடிக்கடி வறண்டு காணப்படுகிறதா? வறட்சியை போக்க வேண்டுமா? அப்படியெனில், ஒரு தக்காளியை அரைத்துக் கொள்ளுங்கள். பின் அதில் அவகேடோ பழத்தை மசித்து சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் சரும வறட்சி நீங்குவதோடு, சரும கருமையும் அகலும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button