சிற்றுண்டி வகைகள்

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான வடைகறி ரெசிபி

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் வடைகறி. இந்த வடைகறியானது இட்லி மற்றும் தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் இது பலருக்கு ஃபேவரைட் என்றும் சொல்லலாம். உங்களுக்கு இந்த வடைகறி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரியாதா?

அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு அந்த வடைகறி ரெசிபியின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

Vada Curry Recipe
தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – 1 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது)
சோம்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய – 2
உப்பு – தேவையான அளவு

கிரேவிக்கு…

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

முதலில் தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதனை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அடுத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் வடைகளை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வடைகறி ரெடி!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button