உடல் பயிற்சி

மூன்றே மாதத்தில் பி.சிஓ.டி -க்கு முடிவு!

புவனேஸ்வரி, யோக சிகிச்சை நிபுணர்
‘என்ன வெயிட் போட்ட மாதிரி இருக்கியே…’ என்று உங்கள் தோழியைக் கேட்டுப்பாருங்கள்… உடனே, ‘எனக்கு பி.சி.ஓ.டி பிரச்னை இருக்குப்பா’ என்பார். இன்றைய இளம்பெண்களை, பி.சி.ஓ.டி’ (Polysystic Ovarian Disease) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை அதிகமாகத் தாக்கிவருகிறது.

பி.சி.ஓ.டி பிரச்னைக்கு, ஹார்மோன்களின் சீரற்றதன்மையே முக்கியக் காரணம். இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு மாதவிலக்கு சீராக இருக்காது. மாத்திரை போட்டால்தான், மாதவிலக்கு வரும். உடல் எடை கூடும். ஆண்களைப் போல ரோமம் வளரும். குழந்தைப்பேறும் தள்ளிப்போகும். யோகாசனங்களைச் செய்வதன் மூலம், சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையை சரிசெய்ய முடியும். தகுதியான ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில் ஆசனங்களைக் கற்று, தொடர்ந்து செய்துவந்தால், மூன்று முதல் ஆறே மாதங்களில் நீர்க்கட்டிகள் மறைவதுடன், ஹார்மோன்களின் சுரப்பும் சீராகும்.
p62

வார்ம் அப்
ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு, உடலில் நெகிழ்வுத்தன்மை உண்டாவதற்காக வார்ம்அப்’ செய்ய வேண்டியது முக்கியம். ஒவ்வொரு பயிற்சியையும் 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால், கை, கால்கள் மற்றும் இடுப்புப் பகுதியில் நெகிழ்வுத்தன்மை ஏற்படும். ஆசனங்கள் செய்வதற்கும் சுலபமாக இருக்கும். இவற்றைச் செய்வதற்கு 10 முதல் 20 நிமிடங்கள் ஆகும்.

பயிற்சிக்குத் தயாராகுதல் 1
தரை விரிப்பின் மீது நேராக நிமிர்ந்து நிற்கவும். மூச்சை நன்றாக உள்ளிழுத்தபடியே, வலது கையை மெதுவாக மேலே உயர்த்தவும்(1). கை, காதை ஒட்டியும் நேராகவும் இருக்க வேண்டும். இதே நிலையில் சில விநாடிகள் இருந்து, பிறகு மூச்சை வெளியே விட்டபடியே கையை இறக்கவும்(2). பிறகு இடது கையை இதே போல் தூக்கி(3), இறக்கவும். இதனால் தோள்பட்டை மூட்டுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.

பயிற்சிக்குத் தயாராகுதல் 2
சுவரின் அருகே நின்றுகொண்டு, வலது கால் முட்டியை மடக்கி, மூச்சை இழுத்தபடியே மேல் நோக்கித் தூக்கி, மார்பின் அருகே கொண்டுவர வேண்டும். இரு கைகளாலும் முழங்காலைப் பிடித்துக்கொள்ள வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியே விட்டபடியே வலது காலை மெதுவாகக் கீழிறக்கிவிட்டு, இடது காலைத் தூக்கி மார்பின் அருகே கொண்டுவந்து இரு கைகளாலும் பிடிக்கவும். பிறகு கீழிறக்கவும். இடுப்பு எலும்புகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.
p62a
பயிற்சிக்குத் தயாராகுதல் 3
வலது காலை மெதுவாகத் தூக்கி, மார்பின் அருகே கொண்டுவந்து, இடது கையால் பிடிக்கவும். அதே சமயம், மூச்சை இழுத்தபடியே வலது கையை மேலே உயர்த்தவும். கை, காதருகே ஒட்டியவாறு இருக்கவேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியே விட்டபடியே கையைக் கீழிறக்கி, காலையும் கீழே இறக்கவும். இதே போல, இடது காலைத் தூக்கி, வலது கையால் பிடிக்கவும். அதே சமயம், மூச்சை இழுத்தபடியே இடது கையை மேலே உயர்த்தவும். சில விநாடிகளுக்குப் பின், மூச்சை விட்டபடியே கையை இறக்கவும்.

பயிற்சிக்குத் தயாராகுதல் 4
மூச்சை இழுத்தபடியே வலது காலைத் தூக்கவும். அதை வலது கையால் பிடித்தபடி, இடது கையை மேலே தூக்கவும். பிறகு மூச்சை வெளியே விட்டபடியே கையை மெதுவாகக் கீழிறக்கவும். பிறகு, இடது காலைத் தூக்கி, இடது கையால் பிடிக்கவும். வலது கையை மெதுவாக உயர்த்திப் பிறகு கீழே இறக்கவும். இப்போது மூட்டுகளும் எலும்புகளும் விறைப்புத்தன்மை நீங்கி, ஃப்ளெக்ஸிபிள்’ ஆக இருக்கும்.

ஆசனங்கள்

சஷாங்காசனம் (முயல் ஆசனம்)
p62c

விரிப்பின் மீது, கால்களை மடித்து, குதிகால்களின் மீது (வஜ்ராசனத்தில்) உட்காரவும். மூச்சை உள்ளே இழுத்தபடியே, இரு கைகளையும் மேலே தூக்கி, அப்படியே முன்புறமாக வந்து, தலை தரையைத் தொடுமளவுக்குக் குனியவும். கைகள் முன்புறமாக நீட்டியிருக்கட்டும். ஒரு விநாடி அதே நிலையில் இருந்த பிறகு, மூச்சை வெளியே விட்டபடியே தலையை மட்டும் தூக்கி, நிமிர்ந்து பார்க்கவும். 2, 3 முறை செய்யலாம்.
பயன்கள்: தொடை மற்றும் இடுப்புப் பகுதி அழுத்தப்்பட்டு, அடிவயிற்றுப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கர்ப்பப்பை, கருக்குழாய் போன்ற உறுப்புகளுக்கு அதிக ரத்தம் பாயும்.

வியாக்ரஹாசனம் (புலி ஆசனம்) 1
p63
விரிப்பின் மீது வஜ்ராசனத்தில் அமர்ந்த பின், முழங்கால்களில் நின்று, கைகளை முன்னே ஊன்றி (நான்கு கால்களில் நிற்பது போல) விலங்கு போல நிற்கவும். மூச்சை இழுத்தபடி மெதுவாகத் தலையைத் தூக்கவும். இந்த நிலையில் முதுகுப் பகுதி, நடுவே (ஒரு ஆர்ச் போல) வளைந்திருக்க வேண்டும். பிறகு, மூச்சை விட்டபடி, மெதுவாகத் தலையைக் கவிழ்த்து, முகம் உள்நோக்கி இருப்பது போலக் குனியவும். வயிறு உட்புறமாகப் போயிருக்கும். இப்போது, முதுகு மேல்புறமாக வளைந்து அல்லது தூக்கி இருக்கவேண்டும்.
பயன்கள்: இடுப்பு, விலாப் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகி, அந்தப் பகுதியில் இருக்கும் உறுப்புகள் நன்கு வேலை செய்யும். கருக்குழாய், சினைக்குழாய், சினைமுட்டை எல்லாமே நன்கு தூண்டிவிடப்படும்.

வியாக்ரஹாசனம் (புலி ஆசனம்) 2
p63a
புலி போல நின்று கைகளை முன்னே ஊன்றி, தலையைக் குனிந்து, முட்டி போட்டு நிற்கவும். மூச்சை இழுத்தபடி தலையை மேலே தூக்கியபடியே, வலது காலை பின்புறமாக நீட்டவும். சில விநாடிகள் கழித்து, மூச்சுவிட்டபடி, தூக்கிய காலை மெதுவாக இறக்கி, தலையைக் கவிழ்ந்து பழைய நிலைக்கு வரவும். பிறகு, தலையைத் தூக்கியபடியே, இடது காலை நீட்டவும். சில விநாடிகளில் பழைய நிலைக்கு வரவும். இந்தப் பயிற்சியை 3 முறைகள் செய்யவும். களைப்பாக இருந்தால், வஜ்ராசனத்தில் அமர்ந்து சிறிது ஓய்வு எடுத்துத் தொடரலாம்.
பயன்கள்: கருக்குழாய்களுக்கு அதிக ரத்த ஓட்டம் பாய்கிறது. கருப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் கரைய உதவுகிறது.

வியாக்ரஹாசனம் (புலி ஆசனம்) 3
p63b
தரைவிரிப்பில் முட்டி போட்டு நிற்க வேண்டும். தலையை மெதுவாக உயர்த்தியபடி, மூச்சை இழுத்தபடியே, வலது காலை பின்புறமாக நீட்டவும். சில விநாடிகளில், மூச்சை விட்டபடியே அந்தக் காலை மடக்கி முன்புறமாகக் கொண்டுவந்து, முகத்தை உட்புறமாகக் கவிழ்த்து, மூக்கால் முழங்காலைத் தொட வேண்டும். வலது கால் பாதத்தைத் தரையில் வைத்து, பேலன்ஸ் செய்துகொள்ளலாம். பிறகு, காலையும் தலையையும் பிரித்து, பழைய நிலைக்கு வரவும். இதேபோல இடது காலிலும் செய்யவேண்டும். இடது காலை நீட்டி, பிறகு உட்புறமாக மடித்து, முகத்தைக் கவிழ்த்து, மூக்கால் முழங்காலைத் தொட வேண்டும். இடது பாதத்தைக் கீழே வைத்துக்கொள்ளலாம். மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இந்தப் பயிற்சியை 3 முறை செய்யலாம்.
பயன்கள்: கர்ப்பப்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்பட்டு, அந்த உறுப்புகள் நன்கு வேலை செய்யும். ஹார்மோன்களின் சுரப்பும் வேலைப்பாடும் சீராகும். நீர்க்கட்டிகள் குறையும். மாதவிலக்கு சுழற்சி சீராகும். இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு, சதை கரைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
குறிப்புகள்:
மேற்கண்ட 3 நிலைகளையும் செய்த பிறகு, உடலைத் தளர்த்தும் சவாசனம் செய்யவேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்கு 20 30 நிமிடங்கள் ஆகும்.
ஆசனங்களைப் பொறுமையாகச் செய்ய வேண்டும். முதலில் செய்வதற்குச் சிரமமாக இருந்தாலும், தொடர்ந்த பயிற்சிக்குப் பின் நன்கு பழகிவிடும்.
தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்யவேண்டும். காபி, டீ, பால் போன்ற திரவ உணவுக்குப் பிறகு 20 நிமிடங்கள் கழித்துச் செய்யலாம்.
யோகாசனங்களைச் செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் மூன்று முறை செய்தால், 20 நிமிடங்களுக்குள் முடித்துவிடலாம்.
பிரேமா நாராயணன்
படங்கள்: கார்முகில்வண்ணன், மாடல்: சகஸ்ர ஜனனி
நீர்க்கட்டிகள் நோய் அல்ல!
நீர்க்கட்டிகள் என்று சொல்லப்படுகிற பி.சி.ஒ.டி ஒரு குறைபாடே தவிர, நோய் அல்ல. பரபரப்பு நிறைந்த இயந்திரத்தரமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம், உடலுழைப்பு குறைவு, ஹார்மோன்களின் சீரற்ற செயல்பாடு, மரபியல் காரணம், எதிர்பாற்றல் குறைதல் போன்ற காரணத்தால் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
எல்லாப் பெண்களுக்கும் 15 நீர்க்கட்டிகள் வரை உருவாகலாம். அவை மாதவிலக்கு சமயத்தில் மறைந்துவிடும். இது இயல்பான செயல்பாடுதான். மாதவிலக்கு சுழற்சி தடைப்பட்டு ஃபைப்ராய்டு, சிஸ்ட் போன்ற பெரிய அளவிலான பாதிப்புகளாக உருமாறினால் மட்டுமே இதற்கு சிகிச்சை எடுப்பது அவசியம்.
லேசான தலைவலி, காய்ச்சல், சளி, அசதி, வயிற்று வலி போன்ற சிறு உபாதைகளுக்கெல்லாம் மாத்திரைகளை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்தலாம். வலியை ஏற்கப் பழகுதல் நல்லது. தலைவலிக்கு வெற்றிலை வைத்துக் கொள்ளுதல், சளி தொல்லைக்கு ஆவி பிடித்தல் என முடிந்தளவு எளிய வெளிப்புற சிகிச்சைகளை செய்துகொள்தல் நலம். மருத்துவ ஆலோசனையுடன், அவசியம் தேவைப்பட்டால் மட்டுமே ஹார்மோன் மாத்திரைகளை எடுக்கலாம். அதிலும் இரண்டாவது முறையாக, வேறொரு மருத்துவரிடம் கருத்து கேட்க வேண்டியது அவசியம்.
என்ன தீர்வு?
துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
சரியான நேரத்தில் சாப்பிடுவதால்கூட, வரும் நோயை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.
போதுமான அளவு தண்ணீர், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீர்க் கட்டிகளை குணப்படுத்த, கற்றாழையின் தோல் சீவி அதன் சதைப் பகுதியை 7 முறை ஒடும் தண்ணீரில் (running tap water) கழுவி, அதன் சதைப் பகுதியை மோரில் நன்கு அடித்து குடிக்கலாம். பனை வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, கர்ப்பப்பை பிரச்னைகள் குணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button