மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…நார்ச்சத்து குறைபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

உடலின் சிறப்பான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் அவசியமானது. நார்ச்சத்து என்பது எளிதில் செரிமானமாகாத கார்போஹைட்ரேட்டுகளாகும். இச்சத்து ஒருவருக்கு போதுமான அளவில் கிடைக்காவிட்டால், அதனால் உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நார்ச்சத்தின் அளவு ஒவ்வொரு வயதினருக்கும், பாலினத்திற்கும் வேறுபடும்.

அதில் 12 மாத குழந்தைகளுக்கு தேவைப்படாது. ஆனால் 1-3 வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 19 கிராமும், 4-8 வயதினருக்கு 25 கிராமும், 9-13 வயது சிறுவர்களுக்கு 31 கிராமும், சிறுமிகளுக்கு 26 கிராமும் அவசியமாகும். 14-50 வயதுள்ள ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 38 கிராமும், பெண்களுக்கு 25 கிராமும், 51 வயதிற்கு மேலான ஆண்களுக்கு 30 கிராமும், பெண்களுக்கு 21 கிராமும் தேவை.

ஒருவரது அன்றாட டயட்டில் நார்ச்சத்து இல்லாவிட்டால், அது பல தீவிர பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறிகள், முழு தானிய பொருட்கள் மற்றும் உலர்ந்த பீன்ஸ் வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். பெரும்பாலானோர் நார்ச்சத்துள்ள உணவுகளின் மீது அதிக கவனம் செலுத்துவதில்லை. மாறாக புரோட்டீன் அதிகமான மற்றும் கார்போஹைட்ரேட் குறைவான டயட்டை தான் மேற்கொள்ள நினைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட டயட்டை மேற்கொண்டால், உடலில் நார்ச்சத்தின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். சிலர் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுகிறேன் என்ற பெயரில், பிரட், பாஸ்தா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுகிறார்கள். உங்களுக்கு நார்ச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

மலச்சிக்கல்

ஒருவர் போதுமான அளவில் நார்ச்சத்தை எடுக்காமல் இருந்தால், அதன் ஆரம்ப அறிகுறியாக மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பார்கள். ஒருவர் வாரத்திற்கு 3 முறைக்கும் குறைவாக மலத்தை வெளியேற்றினாலோ அல்லது மலம் வெளியேற்றும் போது கஷ்டப்பட்டு வெளியேற்றினாலோ, அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளதென்று அர்த்தம்.

நார்ச்சத்துள்ள உணவுகளை ஒருவர் அதிகம் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் நார்ச்சத்து மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலக்குடலின் வழியே செல்லச் செய்து, பிரச்சனையின்றி எளிதாக வெளியேறச் செய்வதோடு, தினமும் உடலில் சேரும் கழிவுகளையும் வெளியேற்றும். மேலும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

உடல் பருமன்

ஒருவரது டயட்டில் நார்ச்சத்து இல்லாவிட்டால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். ஆனால் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளும் போது, அது விரைவில் வயிற்றை நிரப்ப செய்வதோடு, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கும். மேலும் நார்ச்சத்துள்ள உணவுகளானது நீண்ட நேரம் மென்று விழுங்க வேண்டியிருப்பதால், குறைவான அளவிலேயே உணவை உட்கொள்ள நேரிடும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், அதிகளவு நீரைக் குடிக்க வேண்டுமென்று தோன்றும். இதனால் உடலில் நீர்ச்சத்தும் சரியான அளவில் இருக்கும்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்

உங்கள் உடலில் திடீரென்று கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறதா? அதற்கு காரணம் நீங்கள் நார்ச்சத்துள்ள உணவை மிகவும் குறைவாக சாப்பிடுவது தான். நார்ச்சத்து ட்ரை-கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்புக்களைக் குறைக்கும். மேலும் நார்ச்சத்துள்ள உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் வகையில் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, உடலினுள் ஏற்படும் அழற்சியையும் குறைக்கும்.

உயர் சர்க்கரை அளவு

சர்க்கரை நோயாளியாக இருந்து, உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் இருந்தால், நீங்கள் சாப்பிடும் டயட்டில் நார்ச்சத்து போதுமான அளவு இல்லை என்று அர்த்தம். நார்ச்சத்தில் ஒரு வகையான கரையக்கூடிய நார்ச்சத்து, சிறு குடலில் இருந்து மெதுவாக சர்க்கரையை உறிஞ்ச செய்யும். எனவே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

உணவுக்கு பின் தூக்கம்

பெரிய அளவில் உணவை உட்கொண்ட பின், தூக்கத்தை உணர்கிறீர்களா? கட்டாயம் தூங்க வேண்டுமென்ற நிலையை ஏற்படுகிறதா? அப்படியானால் நீங்கள் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவில்லை என்று அர்த்தம். இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்துக் கொள்வதற்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். எப்போது ஒருவர் குறைவான அளவு நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்கிறோரோ, அப்போது இரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். இதன் விளைவாக மிகுதியான களைப்பை உணர நேரிட்டு, உடனே தூங்க வேண்டுமென்ற நிலையை உண்டாக்கும்.

வயிற்று உப்புசம்

நீங்கள் போதுமான அளவு நார்ச்சத்து சாப்பிடாமல் இருந்தோலோ அல்லது தவறான காம்பினேஷனில் உணவுகளை உட்கொண்டிருந்தாலோ, வயிறு உப்புசமாகவும், மிகுந்த அசௌகரியத்துடனும் இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. போதுமான அளவு நார்ச்சத்து இல்லாத டயட்டை மேற்கொண்டால், அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். அதோடு செரிமான பிரச்சனைகளை உண்டாக்கி, வாய்வுத் தொல்லையாலும் அவஸ்தைப்படச் செய்யும்.

அதே சமயம் ஒருவர் அளவுக்கு அதிகமான அளவில் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலும், வயிற்று உப்புசம் ஏற்படும். சில சமயங்களில் வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லையால் வயிற்று வலியையும் சந்திக்க நேரிடும்.

உணவு உண்ட பின்பும் பசி

நார்ச்சத்துள்ள உணவுகள் அடுத்த வேளை உணவு உண்ணும் வரை, பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். அதிலும் கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், அது செரிமான பாதையில் நீரை உறிஞ்ச, வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்கும். இந்த காரணத்தினால் தான் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டால், பசி அவ்வளவு விரைவில் எடுப்பதில்லை. மேலும் நார்ச்சத்துள்ள உணவுகள் மெதுவாக செரிமானமாகி, அதில் உள்ள சத்துக்கள் மெதுவாக இரத்த நாளங்களில் நுழையும்.

உடலில் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்கும் வழிகள்!

நீங்கள் தினமும் போதுமான அளவில் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுப்பதில்லையா? அப்படியானால் எளிய வழியில் அந்த சத்தை உடலில் அதிகரிக்கலாம். உங்களுக்கு எளிய வழியில் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்கும் வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

#1

நார்ச்சத்து முழு தானிய உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் விதைகளில் அதிகளவில் நிறைந்துள்ளது. இவற்றை ஒருவர் அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே, ஒரு நாளைக்கு தேவையான அளவிலான நார்ச்சத்தைப் பெறலாம்.

#2

சுத்திகரிக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளில் நார்ச்சத்து குறைவான அளவில் இருப்பது போன்று தான் இருக்கும். ஆனால் உண்மையில் இவற்றில் நார்ச்சத்தே இருக்காது. மாறாக ஆரோக்கியத்தை சீரழிக்கும் பொருட்கள் தான் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button