மருத்துவ குறிப்பு

குழந்தை கொடி சுற்றி பிறந்தால் மாமனுக்கு ஆகாதா? உண்மை என்ன?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவென்றால், குழந்தை கொடி சுற்றி பிறந்துவிட்டால் என்ன செய்வது என்பது தான்.. ஆனால் குழந்தை கொடி சுற்றி பிறப்பதால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று சொல்கிறது அறிவியல். குழந்தைக்கு கொடி சுற்றிக் கொள்வதால், குழந்தைக்கு எந்த ஒரு ஆபத்தும் உண்டாகாது என்பது தான் முற்றிலும் உண்மையாகும்.

மேலும் இந்த கொடிசுற்றிக் கொள்வது, தாயின் சில திரும்பங்களாலும், குழந்தையின் அசைவுகளாலும் தான் உண்டாகிறது. இது பற்றி நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி காணலாம்.

எப்படி நடக்கிறது?

உங்கள் குழந்தை கருவில் இருக்கும் போது, ஒரு சில சின்ன சின்ன விஷயங்களை செய்து கொண்டிருக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை சுற்றி நகருகிறது, உதைக்கிறது, உணர்ச்சிகளை கூர்மையாக்கி கொள்கிறது, ஊட்டம் பெற்று வளர்கிறது. இவையெல்லாம் நடக்கும் போது, உங்கள் குழந்தையுடன் வளரும் தொப்புள் கொடியானது குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொள்ள நேரிடலாம்.

தெரிந்து கொள்வது எப்படி?

பெரும்பாலும், இந்த நிகழ்வை கர்ப்பத்தின் இரண்டாவது பருவ காலத்தில், அதாவது கர்ப்பத்தின் ஆறாவது மாதத்திற்குள் செய்யும் ஸ்கேன் மூலமாக கண்டறிய முடியும். என்ன தான் மருத்துவர்கள் குழந்தையை கொடி சுற்றி இருப்பதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்தாலும் கூட, பெரும்பாலானோர் இதனை பற்றி அதிகமாக கவலைப்படுகின்றனர்.

பயம் வேண்டாம்!

கொடி அல்லது மாலை என்று குறிப்பிடப்படும் இது, குழந்தையின் கழுத்தை சுற்றியிருந்தால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை. பல குழந்தைகள் கழுத்தை சுற்றி கொடியுடன் தான் பிறக்கின்றன. இந்த கொடியானது மிகவும் நீளமாக இருப்பதால், கழுத்தை இறுக்கிவிடுமோ அல்லது மூச்சுத்திணறலை உண்டாக்குமோ என்பது போன்ற எந்த விதமான பதட்டமும் வேண்டாம். இந்த நச்சுக்கொடியின் நீளமானது, சுமார், 50 செமீ முதல் 60 செமீ வரை ஆகும்.

பிரச்சனை இல்லை

இந்த நச்சுக்கொடி மிகவும் நீளமானது என்பதால், குழந்தையை இந்த நச்சுக்கொடி சுற்றி இருந்தாலும் கூட, குழந்தை சௌகரியமாக இருக்க நிறைய இடங்கள் இருக்கும். மேலும் சுவாசிப்பதிலும், அமிடோமிக் என்ற திரவத்தை குழந்தை விழுங்குவதிலும் எந்தவிதமான தடைகளும் இருக்காது. குழந்தையின் கழுத்தை சுற்றியிருக்கும் இந்த நச்சுக்கொடியானது குழந்தையின் வளர்ச்சியில் எந்த விதமான தீங்கையும், தடையையும் அளிக்காது.

சிசேரியனுக்கு வழிவகுக்குமா?

பல மருத்துவர்கள் உங்களது பிரசவமானது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, உங்களை சிசேரியன் செய்து கொள்ள பரிந்துரை செய்வார்கள். ஆனால் குழந்தைக்கு ஒன்று அல்லது பல கொடிகள் சுற்றியிருந்தால், சிசேரியன் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கருப்பை சுருங்கி இருப்பது, குழந்தை கீழ் நோக்கி நகருவதல் பிரச்சனை போன்ற பிரச்சனைகளால் தான் கடைசி நேரத்தில் மருத்துவர்கள் சிசேரியன் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆபத்தா?

குழந்தையின் கழுத்தை சுற்றியிருக்கும் நச்சுக் கொடியானது குழந்தை, பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதியை திறந்து கொண்டு வெளியே வருவதற்கு எந்த விதமான தடைகளையும் ஏற்படுத்துவது இல்லை. அமெரிக்காவின் ஒரு ஆராய்ச்சி மையமானது குழந்தையின் கழுத்தை இந்த நச்சுக்கொடியானது எவ்வளவு இறுக்கமாக சுற்றியிருந்தாலும் கூட, குழந்தைக்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

குறைவு தான்

கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில், எங்கே குழந்தை கொடி சுற்றி பிறந்து விடுமோ என்ற ஒரு அச்சம் இருக்க தான் செய்யும். ஆனால் இது அந்த அளவுக்கு கவலைப்பட கூட விஷயம் ஒன்றும் கிடையாது. குழந்தைக்கு கொடி சுற்றிக் கொள்ளுதல் என்பது மிகவும் குறைவானோர்களுக்கே நடைபெறும் ஒன்றாக உள்ளது.

தாய்மாமனுக்கு ஆகாதா?

ஜோதிட ரீதியாகவும், குழந்தை கொடி சுற்றி பிறந்தால் தாய்மாமனுக்கு ஆபத்து, குடும்பத்திற்கு ஆபத்து என்பது போன்ற கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன. ஆனால் உண்மையில் இது போன்று எல்லாம் ஒன்றுமே கிடையாது. தாய்மாமனின் ஜாதகத்தை கணித்து பார்த்து மட்டுமே அவருடைய பலனை சொல்ல முடியும் என்று தலைசிறந்த ஜோதிடர்கள் கூறிப்பிடுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button