மருத்துவ குறிப்பு

தசைப்பிடிப்பு தடுப்பது எப்படி?

நாம் எல்லோருமே வாழ்வில் ஒருமுறையாவது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டிருப்போம். கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, விளையாடும்போது திடீரென உடலில் எங்கேயாவது தசை பிடித்துக்கொண்டு பாடாகப்படுத்திவிடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியப் பிரச்னை, தசைப்பிடிப்பு!

தசைப்பிடிப்பு என்றால் என்ன?
மனிதனின் இயக்கத்துக்கு தசைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் தசைகள் சுருங்கி, தளரும் தன்மைகொண்டவை. இவை, இயற்கைக்கு மாறாக சுருங்கி வலியை ஏற்படுத்துவதைத் தசைப்பிடிப்பு என்கிறோம்.

தசைப்பிடிப்பு ஏன்?
உடலில் அதிக வறட்சியின் காரணமாக, திடீரென தசைகளில் நீர்க்குறைவு ஏற்படுவதாலும், மிகவும் சோர்வு அடையும்போது தாதுஉப்புகளின் அளவு குறைவதாலும் தசைப்பிடிப்பு ஏற்படும்.
கை, கால் போன்ற இடங்களில் அடிபடுவதாலும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உடற்பயிற்சி செய்யும் முன் வார்ம் அப் செய்யாவிடில், உடலில் ஏற்படும் திடீர் வெப்ப இழப்பைத் தாங்காமல் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது.

அதிகத் தூரம் பயணம் மேற்கொள்ளும்போது ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்துஇருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும்.

உடலில் உள்ள ஒரே உறுப்பை அதிக நேரம் பயன்படுத்தும்போது, தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.அடிகுழாயில் தொடர்ந்து தண்ணீர் அடிக்கும்போது, கையில் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
வாழைக்காய், உருளை போன்ற வாயு நிறைந்த உணவுப் பொருட்கள், உடலில் வாயுவை அதிகரிக்கும். இதன் காரணமாகவும் தசைப்பிடிப்பு ஏற்படலாம்.

நெஞ்சு எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய அதிகக் காரம், மசாலா வகைகளை தொடர்ந்து உண்பதால், நாளடைவில் தசைப்பிடிப்பு எளிதில் ஏற்படும்.

தசைப்பிடிப்பு ஏற்படும்போது செய்யக் கூடாதவை
நாமே கை, கால்களை முறுக்கி, தசைப்பிடிப்பை சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது.
தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில், அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்க்கக் கூடாது. அந்த இடத்தில் தசை, பலவீனம் அடைந்து இருக்கும். எனவே, அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்ப்பதால், உள் காயம் ஏற்படும்.

குளிர்ந்த நீரையோ அல்லது குளிர்பானங்களையோ அருந்தக் கூடாது.
தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது.

தசைப்பிடிப்பு ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும்?
தசைப்பிடிப்பு ஏற்பட்டால் முதலில் ஓய்வு எடுக்க வேண்டும்.
சூடாக சுக்கு மல்லி காபி குடிக்கலாம். சுக்கு, வலியைப் போக்கும் தன்மை உடையது.
வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

நல்லெண்ணெயில் உப்பு கலந்து தேய்த்து, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியை வேர்க்கச் செய்ய வேண்டும். குணமாகும் வரை இப்படி ஒரு நாளைக்கு இருமுறை செய்யலாம்.

அடிபட்டு, தசைப்பிடிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தில் தசை பலவீனமாகி, ரத்த ஓட்டம் நடைபெறாமல் தடைப்பட்டு இருக்கும். எனவே, அடிபட்ட இடத்தில் எண்ணெயை ஊற்றி, மிதமாக அல்லது மெதுவாகத் தேய்துவிட வேண்டும்.

முழுமையான குணம் பெற…
கற்பூராதித் தைலம், முறிவு எண்ணெய், காயத்ரி மேனித் தைலம், நாரயணத் தைலம் ஆகியவற்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.

தசைப்பிடிப்புக்கான ஆயுர்வேத சிகிச்சைகள்
‘கிழிச்சல்’முறைப்படி மருத்துவக் குணமுள்ள எண்ணெயை மிதமான சூட்டில் மிதமான வேகத்தில் ஊற்ற வேண்டும். ‘வத்தி’ முறைப்படி மருத்துவக்குணமுள்ள எண்ணெயை மிதமான சூட்டில் பாத்தி போல் கட்டி, குறிப்பிட்ட நேரம் தேக்கிவைக்கும் சிகிச்சை நல்ல பலன் கொடுக்கும்.

ஆமணக்கு, நொச்சி, கல்யாணமுருங்கை, முருங்கை இலை, புங்கன் இலை, புளி இலை, எருக்கம் இலை, ஊமத்தம் இலை இதனுடன் வாதநாரயண இலை ஆகியவற்றைச் சேர்த்து, வதக்கி ஒரு துணியில் கட்டி, தினமும் இருமுறை ஒத்தடம் கொடுத்தால், தசைப்பிடிப்பு குணம் அடையும். இந்த முறைக்கு ‘பத்திரப் போட்டலி அல்லது இலைக் கிழி’ என்று பெயர்.
p29a

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button