கர்ப்பிணி பெண்களுக்கு

மார்பகத் தொற்று -தெரிந்துகொள்வோமா?

பிரசவமான பெண்களுக்கு முதல் 10 நாட்களுக்குள் மார்பகங்களில் உண்டாகிற ஒருவகையான தொற்று முலை அழற்சி’ (Mastitis) எனப்படுகிறது. தாய்ப்பால் ஊட்டுவதால் ஏற்படுகிற இந்தப் பிரச்னையை பல பெண்களும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அலட்சியப்படுத்தினால் அறுவை சிகிச்சை வரை அழைத்துச் செல்லக்கூடியது இந்தத் தொற்று” என்கிற மகப்பேறு மருத்துவர் ஜெயராணி, இதன் பின்னணி, அறிகுறிகள், தீர்வுகள் குறித்துப் பேசுகிறார்.

சில பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் சுரப்பு குழந்தையின் தேவையைவிட அதிகமாக இருக்கும். மார்பகங்களில் பால் கட்டிக் கொண்டது போல கனமாக இருக்கும். கட்டிய பாலை குழந்தைக்குக் கொடுக்கக்கூடாது என்கிற தவறான நம்பிக்கை நம் மக்களிடம் இருப்பதால், அந்தப் பாலை குழந்தைக்கும் கொடுக்க மாட்டார்கள். பீய்ச்சியும் எடுக்க மாட்டார்கள். அதிகமாக பால் சுரந்தால் அதை ப்ரெஸ்ட் பம்ப் உதவியால் எடுத்து சுத்தமான பாட்டிலில் நிரப்பி 6 மணி நேரம் வைத்திருந்து குழந்தைக்குக் கொடுக்கலாம்.

சிறுநீர் வெளியேறாமல் நீண்டநேரம் அடக்கி வைக்கப்படுகிற போது அது எப்படி சிறுநீர் தொற்றை ஏற்படுத்துகிறதோ, அப்படித்தான் இதுவும். பால் சுரப்பிகளில் இருந்து தாய்ப்பாலானது லாக்டிஃபெரஸ் டக்ட்யூல்ஸ்’ எனப்படுகிற குழாய்களில் சேகரிக்கப்படும். குழந்தை உறிஞ்சத் தொடங்கும் போது அந்தப் பால் வெளியே வரும். உறிஞ்சாமல் விடப்படுவதால் தேக்கி வைக்கப்படுகிற பால், மார்பகங்களில் இன்ஃபெக்‌ஷனை ஏற்படுத்தும். பிரசவமான பெண்களுக்கு இது சகஜம்தான் என விடப்பட்டால், அந்த இன்ஃபெக்‌ஷன் பரவி, வீங்கி, செப்டிக் ஆகி, சீழ் பிடிக்கும்.

அடுத்தது குழந்தைகள் வாய் வைத்து உறிஞ்சும்போது, மார்பகக் காம்புகள் வறண்டு, புண்ணாவதாலும் இந்த இன்ஃபெக்‌ஷன் வரலாம். அதே போல குழந்தையின் வாய் பகுதியில் ஏதேனும் ஃபங்கல் இன்ஃபெக்‌ஷன் இருந்தாலும் அதன் மூலம் தாய்க்கு மார்பகங்களில் அழற்சி ஏற்படும். இந்தப் பிரச்னையின் முதல் அறிகுறி, தாய்க்கு ஏற்படுகிற திடீர் காய்ச்சல். அடுத்து குளிரும், மார்பகங்களில் வீக்கம், சிவந்து போவது, பால் சுரப்பு சீழ் நிறத்தில் இருப்பது, பாலே சீழாக வருவது,அக்குள் பகுதிகளில் வீக்கம், கொப்புளம் போன்றவை ஏற்படலாம்.

பால் கட்டிக் கொண்டால் முதல் வேலையாக அதை வெளியேற்ற வேண்டும். அதீத பால் சுரப்பு இருந்தால் அதைக் கட்டுப்படுத்த மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார். கட்டிக் கொண்ட மார்பகங்களின் மேல் வெந்நீர் பை கொண்டு ஒத்தடம்கொடுத்துவிட்டு, பாலை வெளியேற்றலாம். அடுத்த நிலையில் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் பலன் அளிக்கும். அதற்கும் சரியாகாமல், சீழ் பிடித்திருந்தால், மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையின் மூலமே தீர்வு காண வேண்டியிருக்கும். அரிதாக சில பெண்களுக்கு இந்தப் பிரச்னை புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். மேலே சொன்ன எதிலும் தீர்வுகள் கிடைக்காதபோது புற்றுநோயாக இருக்குமோ என்றும் சோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.”

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button