மருத்துவ குறிப்பு

த்ரி டேஸ் வலிகள்!

ஐயோ பெண்ணாக பிறந்து விட்டோமே என பெண்கள் வருந்தும் நாட்கள் அந்த ‘மூன்று நாட்கள்’. அந்த நாட்களில் சிலருக்குத் தாங்க முடியாத வயிற்று வலியும், இன்னும் சிலருக்குக் கால் குடைச்சல், இடுப்பு வலி, முதுகு வலி எனப் பல வலிகள் வரிசைகட்டி வாட்டும். இந்த வலிகள் மனதையும் பாதிக்கும். ”இந்த மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே சிலருக்கு இந்தப் பிரச்னைகள் ஆரம்பித்துவிடும்.

பி.எம்.எஸ் (ப்ரி மென்ஸ்ட்ரல் சிண்ட்ரோம்’) என்ற அவஸ்தை நிகழும் இந்த நாட்களில் ஒரு சில பெண்கள் வழக்கத்துக்கு மாறாக, பார்க்கிறவர்களிடம் எல்லாம் கோபத்தைக் கொட்டுவார்கள். எரிந்து விழுவார்கள். சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் அல்ல… அவரது வீட்டில் இருப்பவர்களும் இந்த நாட்களின் வேதனைகளைத் தெரிந்து புரிந்து நடந்து கொள்ள வேண்டும்” என்கிறார் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் பரிமளா.

பி.எம்.எஸ் எப்படி ஏற்படுகிறது?

பொதுவாக, பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 28 நாளில் மாதவிடாய் ஏற்படும். முதல் 15 நாளில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியாகும். கருமுட்டை உருவான பிறகு புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோன் உற்பத்தியாகும். கருச்சேர்க்கை நடைபெறாத நிலையில் புரோஜெஸ்ட்டிரான் ஹார்மோனின் அளவு குறைந்து மாதவிடாய் உருவாகும். இந்நிலையில் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரான் என்ற இரு ஹார்மோன்களும் சரிவிகிதத்தில் இல்லாத நிலையில் ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம் பிரச்னை ஏற்படுகிறது.

அறிகுறிகள்?

பொதுவாக மாதவிடாய் சமயத்தில் மூன்று (அ) ஐந்து நாட்களுக்கு முன்னால் உடலில் சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துவிடும். உடல் அசதி, உடல்வலி, தலைவலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். சிலருக்கு அதிகமாகத் தூங்கவேண்டும், அதிகமாக சாப்பிடவேண்டும் என்றுகூடத் தோன்றும். ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’ பிரச்னை இருப்பவர்களுக்கு டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை, கால்வலி போன்ற பிரச்னைகளும் சேர்ந்துகொள்ளும். மேலும் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகள் கனமாக இருப்பதுபோல உணர்வும் ஏற்படும். சிலருக்கு இயல்பான வேலைகளைச் செய்யமுடியாத அளவுக்கு உடல்சோர்வும் ஏற்படும். மன அழுத்தம் ஏற்பட்டு, ‘கார்டிஸோல்’ (Cartisol) என்ற ஹார்மோன் உற்பத்தியாகும். இன்சுலின் உற்பத்தி குறைவாகும்போது சிலருக்கு அதிகமாக இனிப்பு சாப்பிட ஆசை ஏற்படும்.

பிரச்னை வரக் காரணங்கள்?

சரிவர ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது, துரித உணவு மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களை அதிகமாகச் சாப்பிடுவது, ஓடி ஆடி வேலை செய்யாமல், டிவி மற்றும் கம்ப்யூட்டர் முன்பே பழியாய்க் கிடப்பது என்று இருந்தால் இந்த வேதனைகள் அதிகமாகத் தெரியும். திருமணத்திற்கு முன்புள்ள இளம்பருவத்தினரையே இப்பிரச்னை அதிகமாகப் பாதிக்கிறது. சில குழந்தைகள் 13 வயதுக்கு முன்பாகவே பருவமடைந்து விடுகின்றனர்.

அவர்களைப் போன்றவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக ஏற்படும். மேலும் அவர்களுக்கு மாதவிடாய் குறித்த சரியான புரிதல் இல்லாத நிலையில் ஒருவித மன அழுத்தத்திற்கும் ஆளாவார்கள். சமச்சீரான உணவுகளைச் சாப்பிடுவது, நிறையத் தண்ணீர் குடிப்பது, காலை, மாலை வேலைகளில் நடைப்பயிற்சி மற்றும் ஸ்கிப்பிங் போன்றவற்றை மேற்கொள்வது இந்தப் பிரச்னையைத் தவிர்க்கச் சிறந்த வழிகளாகும்.

சிகிச்சைகள்?

இப்பிரச்னை உள்ளவர்களுக்கு அவரவருக்கு உள்ள அறிகுறிகளைப் பொருத்து மாத்திரைகளைக் கொடுக்கலாம். பாதிப்புகள் அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்றவாறு சிகிச்சைகள் அளித்தும், சில ஆலோசனைகள் கொடுத்தும் குணப்படுத்திவிடலாம்

ld1292

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button