மருத்துவ குறிப்பு

சளித்தொல்லைக்கு மருந்தாகும் தும்பைப்பூ!

தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து, அதன் சாறை குடித்தால் பிரச்னை சரியாகும். தலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசினால் நிவாரணம் கிடைக்கும். தீராத தலைவலி உள்ளவர்கள் தும்பைப்பூவை கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.

காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சமஅளவு மிளகு சேர்த்து மையாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்தில் மட்டும் உணவில் உப்பு, புளி, அசைவ உணவுகள் சேர்க்கக் கூடாது.

டைஃபாய்டு காய்ச்சல் வரும்போது கண்வலி, தலைவலி போன்ற பிரச்னைகளும் பின்தொடர்ந்து வரும். அப்போது 10 தும்பைப்பூக்களை தாய்ப்பாலில் ஊறவைத்து, அதை மெல்லிய துணியால் நனைத்து நெற்றி மற்றும் கன்னப்பொட்டில் பற்று போடவும். கூடவே கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்வலி, தலைவலி சரியாவதுடன் கண்களுக்கு ஒளி கிடைக்கும்.

தும்பைப்பூவின் சாறு 2 சொட்டு, வேலிப்பருத்தி (உத்தாமணி) சாறு 2 சொட்டு, மிளகுத்தூள் 2 சிட்டிகை, தேன் சேர்த்து குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள், மாந்தம், பேதி எல்லாம் சரியாகும்.

விஷப்பூச்சிகள் கடித்தால் தும்பைப்பூவையும், அதேஅளவு தும்பை இலையையும் எடுத்து நசுக்கிச்சாறு எடுத்து, அதில் கால் அவுன்ஸ் அளவு சாப்பிட வேண்டும். இதேபோல, பூ மற்றும் இலையை அரைத்து பூச்சிக் கடித்த இடத்தில் பற்று போட்டால் உடனே விஷம் முறிந்துவிடும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் தும்பைப்பூவையும், தும்பை இலையையும் மையாக அரைத்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் கழித்து சுட்ட சீகைக்காயுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்துக் குளித்து வந்தால் பிரச்னை தீரும்.

பாம்பு கடித்து விஷம் தலைக்கு ஏறி மயக்கம் வந்துவிட்டால், முதலுதவியாக தும்பை இலைச்சாறை மூக்கில்விட்டு ஊதினால் சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்துவிடும். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்கலாம்.meicine1217 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button