மருத்துவ குறிப்பு

விக்கலை போக்கும் வெல்லம்

வீட்டில் எந்த ஒருவகை இனிப்பை செய்வதாக இருந்தாலும் பெரும்பாலும் நாம் வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவற்றைத்தான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது வெல்லத்தை பயன்படுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பாரம்பரியமான பானகத்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, சுக்கு பொடி, ஏலக்காய். ஏலக்காயை பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு டம்ளர் அளவு பானகம் தயார் செய்ய ஒரு ஸ்பூன் அளவுக்கு வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பொடி செய்து வைத்துள்ள ஏலக்காயை சேர்க்க வேண்டும். ஒரு சிட்டிகை அளவு சுக்கு பொடி சேர்க்க வேண்டும். இதனுடன் நன்றாக நீர் சேர்த்து கலக்க வேண்டும். இந்த பானகம் நமது பண்பாட்டோடு ஒன்றி கலந்த ஒன்றாகும். வெல்லத்தை பானகமாக பருகுவதன் மூலம் சிறு நீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் கலந்து செல்லும் நிலை இவற்றை போக்குகிறது. மேலும் உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கக் கூடியதாகவும் இது அமைகிறது.

வெல்லத்தை பயன்படுத்தி விக்கல் மற்றும் இருமலுக்கான மருந்தை இப்போது தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் வெல்லம், ஏலக்காய், எலுமிச்சை, இஞ்சி. ஒரு கிராம் அளவுக்கு வெல்லம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஏலக்காயை தட்டி பொடி செய்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு இஞ்சி சாறு சேர்க்க வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். இதை எடுத்துக் கொள்வதன் மூலம் விக்கல் மற்றும் இருமலை நிறுத்தக் கூடிய மருந்தாக இது வேலை செய்கிறது. இதனால் விக்கல் மற்றும் இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம். மேலும் வயிற்றில் உள்ள வாயுக்கள் விலகி போகும். இதனால் செரிமானம் சீர் அடையும். இருமலையும் தணிக்கும்.

மேலும் தொண்டை வறட்சி, வலி போன்றவையும் இல்லாமல் போகும். அதே போல் வெல்லம் மற்றும் பூவரசு இலையை பயன்படுத்தி கொழுக்கட்டை உணவை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பச்சரிசியை லேசாக வறுத்து உப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொழுக்கட்டைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் துருவல், ஏலக்காய், நாட்டு சர்க்கரை, வேக வைத்த பாசிப்பருப்பு அல்லது கடலை பருப்பு. பூவரசம் இலை. பூவரசம் மரம் சாதாரணமாக அனைத்து இடங்களிலும் காணப்படும்.

இதன் இலையை கொண்டு கொழுக்கட்டை செய்வதன் மூலம் பூவரசம் இலையின் மருத்துவ குணங்கள் அப்படியே கொழுக்கட்டைக்குள் இறங்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. பூவரசம் இலைகளை காம்புடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடி செய்து கொள்ள வேண்டும். பருப்புடன் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காயை சேர்த்து நாட்டு சர்க்கரையையும் கலந்து கொள்ள வேண்டும். இவற்றை நன்றாக பிசைய வேண்டும். பின்னர் கொழுக்கட்டைக்கான பூரணமாக தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூவரசம் இலையை சுத்தம் செய்து எடுத்து அதன் மேல் பகுதியில் நெய் தடவிக் கொள்ள வேண்டும். மாவை இலை முழுவதும் பரப்பிக் கொள்ள வேண்டும். இதன் மத்தியில் பருப்புடன் பிசைந்து வைத்துள்ள பூரணத்தை வைக்க வேண்டும். பின்னர் இலையுடன் நீளவாக்கில் இரண்டாக மடித்து கொழுக்கட்டையை முழுமையாக ஒட்ட வைக்க வேண்டும். இதை இட்லி பாத்திரம் அல்லது ஆவியில் வேக வைக்கும் வகையில் வைத்து அவிக்க வேண்டும். நன்றாக வெந்ததும் கொழுக்கட்டை தயார் ஆகி விடும்.
1452253617 9563

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button