மருத்துவ குறிப்பு

கொஞ்சம்..பெர்சனல்…!

Personal Hygineமாதவிடாய், பிறப்புறுப்பு என்று பேசினாலே சில பெண்கள் முகத்தை திருப்பிக்கொள்ளலாம். ஆனால், ‘பெர்சனல் ஹைஜீன்’ தொடர்பான விழிப்பு உணர்வுத் தகவல்களை அறியவேண்டியது உங்கள் கடமை. சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராதா கண்ணன், அது தொடர்பாகத் தரும் தகவல்கள் இங்கே! படியுங்கள், தெளியுங்கள்…

பிறப்புறுப்பு சுகாதாரம்!

11
”பிறப்புறுப்பை சுகாதாரமாக வைத்துக் கொள்வது, பல தொற்றுகளில் இருந்து காக்கும். அதற்கான முதல் வழி, சுத்தமான, உலர்வான உள்ளாடைகள் அணிவது. ஈரம், பூஞ்சைத்தொற்றுக்கு அதிக வழிவகுக்கும் என்பதால் எக்காரணம்கொண்டும் உள்ளாடைகளை ஈரத்துடன் அணியக்கூடாது. மாதவிடாய் நாட்கள் தவிர, மற்ற நாட்களில் உறங்கும் நேரத்தில் உள்ளாடைகள் தவிர்ப்பது நலம்; காற்றோட்டமும், உலர்வும் கிடைக்கும். ரோமம் இருந்தால்… ஈரம் தங்கும், தொற்று ஏற்படும் என்று பிரச்னைகள் வரிசைகட்டும் என்பதால் அதை நீக்கி பிறப்புறுப்பை சுத்தமாகப் பேண வேண்டும். குளித்து முடித்த பின்னும், ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னும் பிறப்புறுப்பை உலர்வாக்கிய பின்னரே உள்ளாடை அணிய வேண்டும். மாய்ஸ்ச்சரைஸர், டியோடரன்ட் போன்ற எதையும், மிகவும் சென்சிட்டிவான பிறப்புறுப்புப் பகுதியில் பயன்படுத்தக் கூடாது. மாதவிடாய் நாட்கள் தவிர மற்ற நாட்களில் ஏதேனும் டிஸ்சார்ஜ் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

பிறப்புறுப்புப் பிரச்னைகளுக்கு…
2
வெள்ளைப்படுதல் குணமாக, 3 ஸ்பூன் புழுங்கல் அரிசியை 500 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை வடிகட்டி எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தி வர, குணம் பெறலாம்.

ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையை (தனியா) ஒரு கப் தண்ணீரில் இரவு முழுக்க ஊறவைத்து காலையில் அந்தத் தண்ணீரை அருந்தி வர, ஆரோக்கியம் கூடும். இது காலம்தவறிய மாதவிடாய்ப் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

பிரைவேட் பார்ட் வாஷ்!

ஒரு ஸ்பூன் திரிபலா பவுடரை ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவிட்டு, வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் அந்தத் தண்ணீரால் பிறப்புறுப்பைக் கழுவி வர… அரிப்பு, வெள்ளைப்படுதல் பிரச்னைகள் நீங்கும்.

3 ஸ்பூன் வெந்தயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைத்து, அரை மணி நேரம் கழித்து வடிகட்டி, அந்தத் தண்ணீரால் பிறப்புறுப்பைக் கழுவிவர… துர்நாற்றம் நீங்கும்.

மாதவிடாய் நாட்கள்!

சராசரியாக ஒரு பெண் 15 வயதில் பருவமடைகிறாள் என வைத்துக் கொண்டால், 40 வயதுக்கு மேல் அவளுக்கு மெனோபாஸ் ஏற்பட்டு மாதவிடாய் நிற்கும் காலம்வரை, கருத்தரிக்கும் காலம் நீங்கலாக, கிட்டத்தட்ட 300 முறை, அதாவது குறைந்தது 900 நாட்கள் அவள் தன் ஆயுளில் மாதவிடாயுடன், அந்த வலி, அவஸ்தையுடன் வாழ்கிறாள். அதனால்தான், முந்தைய காலங்களில் அந்நாட்களில் பெண்களுக்கு ஓய்வும், ஆரோக்கிய உணவும் தரும் விதமாக அவர்களைத் தனித்திருக்க வைத்தார்கள். இன்றோ ஸ்பெஷல் கிளாஸ், டெஸ்ட், செமஸ்டர், வேலை என்று எல்லா நாட்களிலும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயத்தில், மாதவிடாய் ஓய்வு என்பது சாத்தியமற்றது. இருந்தாலும், அந்நாட்களில் ஆரோக்கியமும், சுகாதாரமும் பேணுவது அவசியமாகிறது.

சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் மாதவிடாய், மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை நீடிக்கும். அப்போது வலி, வாந்தி, தலைவலி, உடல் அசதி என்று சிரமப்பட்டாலும், சாப்பாட்டைத் தவிர்க்கக் கூடாது. காரணம், இந்நாட்களின் ரத்தப்போக்கால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, சத்தான உணவு மிகவும் அவசியம். மேலும், இந்த உதிரம் கழிவு ரத்தம் அல்ல. எனில், ஒவ்வொரு மாதமும் இவ்வளவு ரத்தப்போக்கையும் ஈடு செய்யும்விதமாக சத்துணவு உட்கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம்?!

காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுவகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாட்களில் காபி தவிர்த்து பிளாக் டீ குடிக்கலாம். உடல் சூட்டைத் தவிர்க்கும் விதமான குளிர்ச்சியான மற்றும் திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். கடைகளில் வாங்கும் காஸ்ட்லி நாப்கின்களில் பயன்படுத் தப்படும் ரசாயனங்களால் சிலருக்கு ஒவ்வாமை பிரச்னை ஏற்படும். அவர்கள் அதைத் தவிர்த்து, அம்மாவிடம் காட்டன் நேப்கின்கள் தயாரித்துத் தரச்சொல்லிப் பயன்படுத்தலாம். அல்லது, கடைகளில் காட்டன் நாப்கின் களாக கேட்டு வாங்கிப் பயன்படுத்தலாம்.

பீரியட்ஸ் வலி, சோர்வு நீங்க…

கற்றாழைச் சோற்றின் சாற்றை, சாப்பாட்டுக்குப் பின் ஒரு ஸ்பூன் இரண்டு வேளைகள் அருந்தலாம்.

கட்டிப் பெருங்காயத்தை நெய்யில் வறுத்துச் சாப்பிடலாம்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், துளசிச் சாறு இரண்டு ஸ்பூன்கள் கலந்து குடிக்கலாம்.

ஒரு ஸ்பூன் எள்ளை, ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்கலாம்.

ஒரு துண்டு இஞ்சியை சுத்தம் செய்து நசுக்கி ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி, உணவுக்குப் பின் அந்த நீரை அருந்தலாம்…”

– தேவையான ஆலோசனைகள் தந்துமுடித்தார், மருத்துவர் ராதா கண்ணன்.

ஹைஜீனாக இருங்கள்… ஹெல்தியாக இருங்கள்… ஹேப்பியாக இருங்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button