சரும பராமரிப்பு

வெயிலால் கருமை நீக்குவதில் எளிமை

கோடை துவங்கும் முன்பே, வெயில் சுட்டெரிக்கிறது. அப்படியானால் நிஜமான கோடை வெயில் எப்படி இருக்கும் என்பதை, நினைத்துப் பார்த்தாலே முதுகில் வியர்க்கிறது. கடும் வெயில் காலத்தில், உடலுக்கு பாதிப்பு வராமல் தடுக்க குளிர்ச்சியான பானங்களை அடிக்கடி அருந்த வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் அலைவோரின் சருமம், பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும்.

சூரியக்கதிர்கள் சருமத்தை கடுமையாக பாதிக்கின்றன. சூரியக்கதிர்கள் அளவுக்கு அதிகமாக, சருமத்தைத் தாக்கும் போது, சருமத்தின் நிறம் கருமையாகி விடுகிறது. இப்படி கருமையான சருமத்தை, வெளுக்க வைக்க, கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால் அதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும். இயற்கைப் பொருட்களைக் கொண்டு முகத்தில் மாஸ்க் போட்டால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தில் உள்ள கருமை நீங்கும்; சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

எப்படி தயாரிப்பது இயற்கை மாஸ்க்?
எலுமிச்சை சாற்றில், 2 டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்த பின், முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள்: இந்த பேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவையும் அதிகரிக்கும். அதற்கு, 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து குழைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்த பின், கழுவ வேண்டும்.

ஓட்ஸ்: இது ஒரு நேச்சுரல் ஸ்க்ரப்பர். இந்த ஸ்க்ரப்பர் தயாரிக்க, சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து முகத்தில் தடவி, மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். பின் முகத்தை கழுவிய பிறகு, வைட்டமின் இ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும்.

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு எலுமிச்சை ஒரு சிறப்பான பிளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். அந்த எலுமிச்சையின் சாற்றில், சிறிது உப்பு சேர்த்து கலந்து குளிக்கும் போது, இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமை அகலும். வெள்ளரிக்காய் கூட சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால், சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.

கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் கூட நீங்கும். சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து பின், குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
Beauty%20Tips jpg 950

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button