சரும பராமரிப்பு

மஞ்சள் இருக்கு மங்காத அழகு!

மஞ்சள் தேய்த்துக் குளிப்பது என்பது அழகுக்காக மட்டுமல்ல. முகம், கை, கால்களில் வளரும் தேவையற்ற ரோமங்களையும் அகற்றவும்தான். மஞ்சளை உடலில் பூசுவதாலும், எண்ணெய்தேய்த்துக் குளிப்பதாலும், கொசு கூட நம்மிடம் நெருங்காது என்பார்கள். அந்த அளவுக்கு அதன் மகத்துவத்தை உணர்ந்து, அந்தக் காலப் பெண்கள் மஞ்சளை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், இன்றோ, மஞ்சள் பூசிய முகத்தைப் பார்த்தாலே, ‘மங்காத்தா மாதிரி வந்திருக்கா பாரேன்…’, ‘அம்மனுக்கு கூழ் ஊத்துங்கடி…’ என்று கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக நேரிடுமோ என்று கிராமத்துப் பெண்கள்கூட, மஞ்சளை மறந்துவிட்டனர் என்பதுதான் வருத்தமான விஷயம்.

‘மஞ்சள் தேய்த்துக் குளித்தால், சீக்கிரத்திலேயே வயோதிகம் வரும். மிருதுவான சருமம் தடித்துவிடும்.’ என்ற தவறான கருத்துக்களால், பெண்கள் மஞ்சளைத் தவிர்க்கின்றனர்.

அற்புதமான கிருமிநாசினியான மஞ்சளின் மகத்துவம் குறித்து, சித்த மருத்துவர் வேலாயுதம் சொல்லும் சிறப்புத் தகவல்கள் இங்கே…

”மஞ்சள் பூசுவது அழகுக்காகவும், பண்பாட்டுக்காகவும் மட்டுமல்ல… நம் மருத்துவக் கலாசாரமும்கூட. அந்தக் காலத்தில் கடவுளின் சிலைகளுக்கு மஞ்சள் காப்பு போடுவார்கள். பூஜைகளில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். மஞ்சளை அரைத்து வாசல் கதவுகளில் பூசுவார்கள். அம்மை நோய்க்குக்கூட மஞ்சளைக் கரைத்துக் குளிப்பாட்டுவார்கள். இதனால் நோய் பரவாமல் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய்த் தொற்று வராமல் காக்கும்.

இன்று மஞ்சளைத் தவிர்ப்பதன் விளைவாகத்தான் அலர்ஜி, அரிப்பு, தேமல், மங்கு, கரும்புள்ளி என ஏராளமான சருமப் பிரச்னைகளை சந்திக்கின்றனர் இளம் பெண்கள். பெண்களுக்கு மார்பு, அக்குள், இடுப்பு, தொடை இடுக்குப் பகுதிகளில் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். இதற்காகப் போட்டுக்கொள்ளும் ரசாயனம் கலந்த டியோடரன்ட், ஸ்ப்ரே, பெர்ஃப்யூம்கள் சருமத்தைப் பாதிக்கலாம். ஆனால், மஞ்சள் பூசிக் குளிப்பதன் மூலம் நோய்த் தொற்றை அண்டவிடாமல் செய்யலாம்.

மஞ்சளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, சமையலுக்குப் பயன்படுத்துவது. மற்றொன்று, முகத்துக்குப் பூசுவது.

பூசு மஞ்சள்

வேரோடு ஒட்டி இருக்கும் கஸ்தூரி மஞ்சள் வாசனையாக இருக்கும். முகம் மற்றும் உடலில் பூசிக் குளிக்க ஏற்றது. சருமத்தில் தேய்த்தாலும், மஞ்சள் நிறம் அதிகம் படியாது. ஸ்நானப் பொடித் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது. சில இயற்கை அழகு நிலையங்களிலும், ஃபேஸ் பேக்குக்கு இதைப் பயன்படுத்துகின்றனர். முகத்துக்குப் பூசும் கஸ்தூரி மஞ்சள், வியர்வை சுரப்பிகளைத் தூண்டி அழுக்கை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதில் உள்ள வாசனையால் நல்ல பாக்டீரியாக்களைப் பாதுகாத்து, வைரஸ் தொற்று வரவிடாமல் செய்யும். மஞ்சள் வாசனைக்கே கொசுகூட கிட்ட நெருங்காது.

சமையல் மஞ்சள்

வேரோடு இருக்கும் விரலி மஞ்சள்தான் ச‌மையலுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சாம்பார், கூட்டு, பொரியல் என சமையலில் சிட்டிகை மஞ்சள்தூளைச் சேர்த்தவுடன், சட்டென நிறத்தைக் கொடுக்கும். இந்த மஞ்சளில் ‘அல்கனாய்டு ஆக்டிவ்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய சக்தி படைத்தது. பெரும்பாலான அலோபதி தோல் மருத்துவர்கள் இந்த மஞ்சளைத்தான் பெண்கள் பூசுவதாக நினைத்து, மஞ்சளைத் தவிர்க்கச் சொல்கின்றனர்.”

மஞ்சள் மகிமை

வேனல் கட்டிகள், பருக்கள், தேமல் இருந்தால், கஸ்தூரி மஞ்சள், சந்தனத்தை அரைத்துப் பற்று போடலாம்.

பாதத்தில் ஏற்படும் வெடிப்புக்கும் விளக்கெண்ணெயுடன் மஞ்சள் சேர்த்துப் பூசினால், சட்டென சரியாகும்.

கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்துக் குளித்தால், தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

கஸ்தூரி மஞ்சளை அரைத்து லேசாக சூடுபடுத்தி அடிபட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.

கோடைக் காலத்தில் மஞ்சள் பூசுவதால், சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.

பசும் மஞ்சள் கிழங்கு, வெள்ளரிக்காயை அரைத்து எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து ஃபேஷியல் பேக் போட்டுவர, மாசு மரு இல்லாமல் முகம் பளிச்சென மாறும்.

கோரைக்கிழங்கு, பூலான் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றை அரைத்து, பச்சைப் பயறு மாவு கலந்து தினமும் உடலில் பூசிக் குளித்துவர, சருமத்தில் நிறம் கூடும்.

மஞ்சளைக்கூட அளவோடு பயன்படுத்துவது நல்லது. வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் அரைத்து பூசிக் குளிப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள்.

பாக்கெட்டில் விற்கப்படும் மஞ்சள் பொடியில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மஞ்சள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. பசும் மஞ்சள் கிழங்காக வாங்கி அரைத்துக் குளிப்பது நல்லது.
p50a

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button