ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

இது சத்தான அழகு

imagesகண்ணுக்கு அரைக்கீரை… வளர்ச்சிக்கு முளைக்கீரை… வாய்ப்புண்ணுக்கு மணத் தக்காளி… ஞாபக சக்திக்கு வல்லாரை… சரும அழகுக்கு  பொன்னாங்கண்ணி… இப்படி ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உண்டு. தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால்  அழகும் ஆரோக்கியமும் இளமையும் நீடிக்கும் என்பது காலங்காலமாக நிரூபிக்கப்பட்டு வருகிற உண்மை.

‘‘உடலின் உள் உறுப்புகளுக்கு நல்லது செய்கிற அத்தனை கீரைகளும் இலை வகைகளும் வெளிப்பூச்சுக்கும் நல்லது செய்யும்’’ என்கிறார் அழகுக்கலை  நிபுணர் ஹசீனா சையத். விதம் விதமான கீரைகள் மற்றும் இலைகளை வைத்து அவர் செய்து காட்டுகிற அழகு சிகிச்சைகளை நீங்களும் பின்பற்றிப்
பார்க்கலாமே…

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் உள்ள புரதமும் பீட்டா கரோட்டினும் கூந்தல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடியவை. தினம் சிறிது கறிவேப்பிலையை பச்சையாக  மென்று தின்றால் கூந்தல் கருமையாக, அடர்த்தியாக வளரும். வாரம் ஒரு முறை கைப்பிடி அளவு கறிவேப்பிலையை, ஊற வைத்த வெந்தயம்  சேர்த்து அரைத்து, தலையில் தடவி, 1 மணி நேரம் ஊற வைத்து, பிறகு அலசவும். இது கூந்தல் உதிர்வையும் இளநரையையும் தடுக்கும். கறிவேப்பிலையைக் காய வைத்துப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிது முல்தானி மிட்டியும், சுத்தமான பன்னீரும் சேர்த்துக் குழைத்து  முகத்துக்கு பேக் போல போடலாம். இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கி, முகத்துக்கு ஒருவித பளபளப்பைக் கொடுக்கும்.

வேப்பிலை

வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து, அரை பக்கெட் தண்ணீரில் கலக்கவும். தலைக்குக் குளித்து முடித்ததும், இந்தத் தண்ணீரால் கூந்தலை  அலசினால், கூந்தல் கண்டிஷன் ஆகும். பேன், ஈறு, பொடுகுத் தொல்லை மறையும். வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, மூடி வைக்கவும்.  அதன் சாரமெல்லாம் தண்ணீரில் இறங்கியதும், அந்தத் தண்ணீரை வடிகட்டி வைக்கவும். அதை ஃப்ரிட்ஜில் வைத்து, தினசரி குளிக்கும் தண்ணீரில்  சிறிது கலந்து உபயோகித்தால் சருமத் தொந்தரவுகள், ஒவ்வாமை வராது. பருக்களும் எட்டிப் பார்க்காது. இதே தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தில்  தடவிக் கொண்டு தூங்கலாம். காலையில் முகம் கழுவிட கரும்புள்ளிகள், பருக்கள், தழும்புகள் போன்றவையும் மறைந்து, சருமம் பளிச்சென மாறும்.

ஆமணக்கு இலை

ஆமணக்குக் கொட்டை யில் இருந்துதான் விளக்கெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. விளக்கெண்ணெய் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது.  ஆமணக்கு இலையை அப்படியே தலையில் வைத்திருந்தால், தலைவலி பறந்து போவதுடன், தலையில் ஏதேனும் கொப்புளங்கள் இருந்தாலும்  ஆற்றும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், ஆமணக்கு இலையை மார்பகங்களின் மேல் வைத்திருந்தால், பால் சுரப்பு அதிகமாகும்.

செம்பருத்தி இலை

செம்பருத்தி இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும். அதில் அரை கப் தயிர் சேர்த்துக் குழைத்து, தலையில்  தடவி, 1 மணி நேரம் காத்திருக்கவும். வெதுவெதுப்பான தண்ணீரால் அலசவும். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் முடி உதிர்வது நிற்கும். கூந்தல்  நுனிகள் பிளவுபடுவதும் தவிர்க்கப்படும். செம்பருத்தி இலையுடன், வெந்தயம் சேர்த்து அரைத்து, மோர் கலந்து தலையில் தடவிட, பொடுகுத்  தொல்லை சரியாகும். செம்பருத்தி இலைகளைக் கரகரப்பாக அரைக்கவும். அதை சருமத்தில் ஸ்க்ரப்பர் போன்று உபயோகித்தால் இறந்த செல்களும்  கரும்புள்ளிகளும் நீங்கி, சருமம் மென்மையாக மாறும்.

முருங்கைக்கீரை

முருங்கைக் கீரையின் சாறுடன், எலுமிச்சைச்சாறு கலந்து சருமத்தில் தடவினால், சருமம் சுத்தமாகவும் பளபளப்பாகவும் மாறும்.

துளசி

சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தில் துளசியின் பங்கு மகத்தானது. துளசியை தண்ணீர் விட்டு அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் அடைபட்ட சருமத் துவாரங்கள் சுத்தமாகி, சருமம் பளிச்சென மாறும். துளசியை உலர வைத்து பொடித்துக் கொள்ளவும். முடிகிற  போதெல்லாம் இந்தத் துளசிப் பொடியை முகத்தில் பவுடர் மாதிரி தடவிக் கொண்டு படுத்து ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள கரும்புள்ளிகளை  கொஞ்சம் கொஞ்சமாக மறையச் செய்யும். துளசியை அரைத்து, பருக்களின் மேல் பொட்டு போல வைத்து காய்ந்தவுடன் கழுவினால் பருக்கள் இருந்த  இடம் தெரியாமல் மறையும். கருந்துளசியை அரைத்துத் தலையில் தடவி, மேலே ஒரு துணியைக் கட்டிக் கொண்டு, ஒரு மணி நேரம் கழித்து  அலசினால் பேன், ஈறு தொல்லை மறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button