ஃபேஷன்

பெண்ணுக்கு ஏற்ற உடை சேலையா? சுடிதாரா?

பெண்ணே நீ உன்பண்பாட்டு அடையாளமாகப் பூட்டப்பட்ட சங்கலிகளை அறுத்தெறிவதன் ஒரு நடவடிக்கையாக உன் சேலையை வீசிவிடு பண்பாட்டுப் பாதுகாவலர்கள் கேலியாகப் பார்க்கிறார்கள். இப்பெல்லாம் எந்தப் பொண்ணு சேலைகட்டுறா? எல்லாரும் சுடிதார், சல்வார்னு மாறி தமிழச்சி அடையாளத்தையே அவுத்துப்போட்டுட்டு நிக்கிறாங்களே,”என்ற விமர்சனம் அந்தக் கேலிப் பார்வையில் இருக்கிறது.

சுடிதார் அணியும் பழக்கம் அதிகரித்திருக்கிறது, கிராமங்களில் கூட பரவி வருகிறது என்பது ஓரளவு உண்மைதான்.முற்போக்கான சிந்தனையுள்ளவர்களில் கூடபலர் அதைமட்டும் ஒப்புக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் உலகமயமாக்கல், ஒற்றைப்பண்பாட்டு ஆதிக்கம் முதலியவற்றை எதிர்ப்பவர்கள் சுடிதார், சல்வார், போன்ற உடைகள்தமிழ்நாட்டுத்தாவணிகளையும், சேலைகளையும் ஒழித்துக்கட்ட வந்த எதிர்க்கலாச்சார ஆயுதங்களாகச் சித்தரிக்கிறார்கள். அரசியல், அறிவியல் என எல்லாத்துறைகளிலும் திருப்பங்களை ஏற்படுத்தியது பெரும்பாலும் ஆண்கள்தான்.

அந்தப்பாதி மூளையின் பங்களிப்பிலேயே உலகசமுதாயம் இத்தனை முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது என்றால், மீதிமூளையின் ஆற்றலும் சுதந்திரமாக முழுமையாகச் செயல்படவிட்டிருந்தால் இன்னும் எத்தனை முன்னேற்றங்களைக் கண்டிருக்கமுடியும்! இத்தனை வளர்ச்சிக்குப் பிறகும்கூட மானுட சமுதாயம் இன்னும் ஏன் இருட்டில் தடுமாறுகிறது என்ற கேள்விக்கான விடையும் கூட அந்தப்பாதி மூளை இருட்டடிப்புக்குள் தான் இருக்கிறது.

பேருந்தில் சங்கடமின்றி ஏறி இறங்க முடிவதில்லை என்பது முதல், ஆண்களின் திருட்டுப் பார்வை பற்றிய உறுத்தலின்றி வேலைகளைச் செய்ய இயலுவதில்லை என்பது வரையில் சேலை பெண்ணுக்கு ஒரு மிகப்பெரிய இடைஞ்சல். எழுத்தாளர் சு.சமுத்திரம் ஒரு சிறுகதையில், பெரியபுராணத்தைக் கொஞ்சம் மாற்றியிருப்பார். பரமசிவனோடு நடனப்போட்டியில் குதிக்கும்பார்வதி, எல்லாநுட்பங்களிலும் சரிசமாக ஈடுகொடுக்க, கடைசியில் பரமசிவன் தனது காலை உயரத் தூக்கி நிற்க,அப்படிச் செய்ய முடியாமல் நாணத்தோடு அவள் தோல்வியை ஒப்புக் கொள்கிறாள் என்பது புராணம்.

புதிய கதையில் பார்வதி கூச்சமின்றிக் காலைத் தூக்கி ஆடி வெற்றி பெறுவாள்! அதற்குக் காரணம் நவீன பார்வதி சுடிதார் அணிதிருந்தது தான் என்று முடித்திருப்பார் சமுத்திரம்.சேலையை விடசுடிதார் நிச்சயம் பெண்ணுக்கு வசதியான, கண்ணியமான உடைதான். அடிமைத்தன அலங்காரம் தான் அழகென்றால் சேலை அழகானது தான். இன்றைக்கு சில இடங்களில், குறிப்பாக மகளிர் கல்லூரிகளில் ,தாவணித் திருவிழா நடத்துகிறார்கள். இதற்கென்றே வாங்கப்பட்ட பாவாடை- தாவணியோடு அல்லது அம்மாவின் பாதிச் சேலையோடு மாணவிகள் என்னவோ உற்சாகமாகத் தான் விழாவிற்கு வருகிறார்கள்.

சில பத்திரிகைகள் பல வண்ணப்பூக்களின் கதம்பம் போல் இருக்கும் பல வண்ணத்தாவணித் தேவதைகளைப் படமெடுத்து அட்டையிலேயே வெளியிடுகின்றன.மறைந்து வருகிற ஒரு பண்பாட்டு அடையாளம் இதன் மூலம் மீட்கப்படுவதாகப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் சொட்டச் சொட்ட கவர்ச்சியில் ஊறிய தாவணி- பாவாடைக்குள் மாட்டிவிட்டு, வருங்கால கிரண்பேடிகளையும், சானியாமிர்சாக்களையும், பாமாக்களையும், முளையிலேயே கிள்ளுகிற கைங்கர்யம் இத்தகைய விழாக்களின் அடியிழையாக இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய தாவணித் திருவிழாக்களை, இந்துத்துவக் கூடாரங்களின் ஆசீர்வாதம் பெற்ற சில கல்லூரி நிர்வாகங்களும் நடத்துவது தற்செயலானது அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.தனிமையில் செல்ல ‘அச்சம்’, மற்றவர்கள் முன்நிற்க ‘நாணம்’, ஆணைவிட கூடுதலாக ஏதும் அறியாத ‘மடம்’, வாரிசுகளை பெற்றுத் தரும் விளைநிலமாக மட்டுமே பிழைத்திருக்கிற பயிர்ப்பு’.. ஆகிய நற்குணங்கள் கொண்டவளாய்ப் பெண்ணின் பரிணாமத்தைப் பின்னுக்குத் தள்ளுகிற அடையாளங்கள் தேவையில்லை. இதை ஏற்க இயலாதர்கள் முன் வைக்கிறவாதம்.

“இப்படி எல்லாத்தையும் மாத்திக்கிட்டே போனா நம்ம பண்பாடு என்னாகிறது” என்பதுதான். நீண்டகாலமாகப் புழக்கத்தில் இருப்பதாலேயே ஒரு பழக்கம் புனிதப் பண்பாடாகி விட்டது. மேற்படி தாவணி- சேலைக்கு முன், நீண்ட சடை- கூந்தலுக்கு முன் நம் ஆதித்தாத்திகள் எப்படி இருந்தார்கள்? ரவிக்கை அணிவதற்குக் கூட ஒரு பகுதி பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை என்பது ஒரு பண்பாடாக இருந்ததே! இதையெல்லாம் யோசித்தால் பண்பாடு என்பது சமுதாய வளர்ச்சிக்கேற்ப மாறி வந்திருப்பது தெளிவாகும்.

saree

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button