முகப்பரு

முக’வரி’கள் மறைய…

சுருக்கங்கள் அற்ற சருமம் இளமையான தோற்றத்தை எடுப்பாய் காட்டும். 40 வயதைத் தொட்டதுமே, தோலில் ஏற்படும் சுருக்கங்கள் ‘மூப்பு நெருங்குகிறது’ என்பதைச் சொல்லாமல்சொல்லும். இந்தச் சுருக்கங்களைப் போக்க பலரும் பியூட்டி பார்லர், மாற்று மருத்துவ சிகிச்சைகள் எனத் தீவிர முயற்சியில் இறங்குவார்கள். ஆனால், அவர்களின் கவனம் முழுவதும் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்குவதில் இருக்குமே தவிர, கை, கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் சுருக்கங்களை பற்றிய அக்கரை இருக்காது. வயதின் மூப்பு, சருமத்தில் எங்கெல்லாம் தெரியும்? வந்த சுருக்கங்களைக் குறைக்கவும், வராமல் தடுக்கவும் என்ன செய்யலாம்? என்பது குறித்த டிப்ஸ்களைத் தருகிறார் அழகுக் கலை நிபுணர் ஹசீனா சையத்.

‘நம் தோலில் உள்ள கொலாஜென் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்கள், தோலுக்கு மிருதுவையும், உறுதித்தன்மையையும் தருகிறது. வயது அதிகரிக்கும்போது புரதங்களின் அளவு உடலில் குறையும். இதன் காரணமாகவே தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. முதலில் உள்ளங்கையின் மேற்புறத்தில்தான் சுருக்கங்கள் தோன்றும். ஏனெனில், இந்தப் பகுதியில்தான் நீர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிறகுதான் முகத்திலும், கழுத்துப் பகுதியிலும் தெரியும்.

பொதுவாக, எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு சுருக்கங்கள் அதிகம் வருவது இல்லை. வறண்ட தோல் உடையவர்களுக்கு கொலாஜென் குறைபாட்டால், விரைவில் சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும்.

35 முதல் 40 வயதுடையவர்களுக்கு சுருக்கம் ஏற்பட்டால், அது இயற்கையாக வயது அதிகரிப்பதைக் காட்டுகிறது. ஆனால் 25 முதல் 30 வயதுடைய வர்களுக்கு சுருக்கம் ஏற்படுமானால், அவர்களின் வாழ்க்கைமுறையிலோ, உணவுப் பழக்கத்திலோ பிரச்னைகள் அல்லது மரபு சார்ந்த பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது.

புகைபிடித்தல், சோப் மற்றும் க்ரீம்களை அடிக்கடி மாற்றுதல், சருமத்தில் சூரிய ஒளி அதிகம் படுதல், மன அழுத்தம், சுற்றுச்சூழல் மற்றும் நம் முக பாவனைகளும்கூட சுருக்கங்கள் வருவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. மேலும், சிலர் தூங்குவதற்கு முன்பு, முகத்தில் க்ரீம்கள், முல்தானி மட்டி, சந்தனம் என ஏதேனும் பூசிக்கொண்டு படுப்பார்கள். எந்த ஒரு பொருளையும் முகத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. இதனால், தோல் வறண்டு, அச்சுப் பதிந்து சுருக்கங்கள் ஏற்பட்டு விடும்.

சரும சுருக்கங்களைப் போக்க மருத்துவ ரீதியாக பல சிகிச்சைகள் இருந்தாலும், அவற்றுக்கான கட்டணம் அதிகம். பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். எனவே, சுருக்கங்கள் வந்தவுடன் அதைப் போக்க முயற்சி எடுப்பதைவிட, வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே போதும், என்றும் இளமையாக இருக்கலாம்!’ என்கிறார் ஹசீனா.

– ரெ.சு.வெங்கடேஷ்
p62a
சரும சுருக்கங்களை தடுக்க எளிய டிப்ஸ்..

பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் இழந்த பொலிவை மீட்டெடுக்கலாம். இதன் மூலம் சருமம் உறுதித்தன்மை அடையும்.

வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, அன்னாசி போன்ற பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இளமையை தக்க வைக்க, மீனுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மீனில் ஒமேகா 3 கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதுடன் நினைவாற்றலையும் அதிகரிக்கும். ‘காட் லிவர் ஆயில்’ தோலில் எண்ணெய் சத்தை அதிகரிக்கும்.

வாரம் ஒரு முறை, குளிப்பதற்கு முன் பாதாம் எண்ணெய் எடுத்து கை, கழுத்து மற்றும் முகப் பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இது ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவதோடு, சுருக்கங்களைத் தடுக்கும்.

தயிர், சுருக்கங்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படும். கழுத்து மற்றும் கைகளில் தயிரைத் தடவிக் கழுவுவதைத் தொடர்ந்து செய்து வந்தால் சுருக்கங்கள் வராது.

வெயிலில் வெளியில் செல்லும்போது சன்ஸ்கிரீன், குளிர் காலத்தில் மாய்ஸ்சுரைசர்கள் பயன்படுத்தலாம். அதுவும் சருமத்துக்கு ஏற்ற எஸ்பிஎஃப் அளவை பார்த்து க்ரீம்கள் வாங்க வேண்டும்.

முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆயில் புல்லிங் செய்யலாம்.

வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும்கூட சருமத்தில் முதுமையை நெருங்கவிடாது.

மூளையையும் மனதையும் எவ்வளவு ரிலாக்ஸ்டாக வைத்திருக்கிறோமோ அதே அளவு நம் உடலும் தோலும் சிறப்பாக இருக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம், யோக முத்திரைகள் போன்ற பயிற்சிகளைச் செய்வது அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button