சைவம்

கீரையை எப்படிப் பார்த்து வாங்குவது?

கீரைகள் வாங்கவே பயமாக இருக்கிறது. இருப்பதிலேயே அதிக கெமிக்கல் தெளிக்கப்படுவது கீரைகளில்தான் என்று கேள்விப்படுகிறோம். எல்லோராலும் ஆர்கானிக் கீரை வாங்கவோ, வீட்டிலேயே கீரை வளர்க்கவோ முடியாத நிலையில் பாதுகாப்பான கீரையை எப்படிப் பார்த்து வாங்குவது? கீரை சமைக்கும் முன் எப்படி சுத்தப்படுத்த வேண்டும்?

டாக்டர் ராஜேஷ், தாவரவியல் பேராசிரியர்

ஆரோக்கிய வாழ்விற்கு தேவையான சரிவிகித உணவினை பூர்த்தி செய்வதில் கீரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலுக்குத் தேவையான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் புரதங்களைப் பெற கீரைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

கீரைகளின் நன்மைகளைப் பற்றிப் பேசும்போது அதன் வளர்ப்பின்போது உபயோகப்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக்கொல்லிகள், களைக்கொல்லிகள் போன்ற ரசாயனங்களால் ஏற்படும் தீமையும் நம் நினைவுக்கு வந்து நம்மை பயமுறுத்தும். மேலும் எல்லோராலும் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கீரைகளை வாங்குவது சாத்தியமானது அல்ல.

எனவே, கீரைகளின் மேல் பகுதியில் இருக்கும் இத்தகைய ரசாயனங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். சில சிறிய செயல்முறைகளின் மூலம் மேற்கூறிய ரசாயனங்களை கீரையிலிருந்து எளிதில் களைய முடியும். கீரைகளை வாங்கும்போது ஆரோக்கியமானவையாக பார்த்து வாங்க வேண்டும். வெள்ளை அல்லது துரு போன்ற புள்ளிகளோ, கோடுகளோ அல்லது துகள்களோ இருப்பின் அவை பூஞ்சை அல்லது பூச்சிகளின் முட்டையாக இருக்கலாம்.

எனவே அவற்றை நீக்கி விட வேண்டும். முதலில் கீரைகளை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். பின்னர் உப்பு நீரில் (2g/100ml) இரண்டு அல்லது மூன்று முறை கழுவ வேண்டும். குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் 70-80% ரசாயனங்களை நாம் அகற்ற முடியும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுவது அல்லது நீராவியில் வேக வைப்பது போன்றவையும் இந்த ரசாயனங்களை களைய உதவும்.

2 அல்லது 3 டீஸ்பூன் வினிகரை நீரில் கலந்து 15-20 நிமிடங்கள் அதில் ஊற வைத்து சமைக்கும் போது ரசாயனங்கள் பெருமளவு நீங்கி விடும். மேலும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறுடன் ஒரு டீஸ்பூன் சமையல் சோடா மற்றும் ஒரு கப் நீர் சேர்த்து தயாரிக்கும் எளிய கலவையில் 5-10 நிமிடங்கள் ஊற வைத்து பின் நல்ல நீரில் கழுவுவதன் மூலமும் ரசாயனங்களை உணவுப் பொருட்களிலிருந்து நீக்கலாம்.

கீரைகளை நன்கு கழுவிய பின்னரே நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவும் போது அதிலுள்ள சத்துகளை வெகுவாக இழக்கிறோம். கீரையை வேக வைத்த நீரினை சாம்பார் போன்ற பதார்த்தங்கள் செய்ய பயன்படுத்துவதன் மூலம் அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் பெற முடியும்.BFfmClv

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button