மருத்துவ குறிப்பு

கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானவையா?

எதையும் திட்டமிட்டுச் செய்கிற தலைமுறை இது. திருமணத்தில் தொடங்கி, குழந்தைப் பிறப்பு, வளர்ப்பு என எல்லாம் அப்படித்தான். திருமணமான உடனேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம், ஆறு மாதங்களோ, ஒரு வருடமோ தள்ளிப் போடலாம் என நினைக்கிறவர்களுக்கு, அதற்கான சரியான முறை எது என்பதில் இன்னமும் குழப்பமே நீடிக்கிறது.

வேறெந்த கருத்தடை முறைகளைவிடவும், கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பது எளிதானதாக இருந்தாலும், அது பக்க விளைவுகளை ஏற்படுத்துமோ, பின்னாளில் குழந்தைப் பேறே இல்லாமல் செய்துவிடுமோ என்கிற குழப்பங்களும் பலருக்கு உண்டு. கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானவையா? யாருக்கு உகந்தவை? பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? சந்தேகங்களை தீர்க்கிறார் மருத்துவர் நிவேதிதா.

கருத்தடை மாத்திரைகளை உபயோகித்தால் உடல் எடை கூடும், ஹார்மோன் கோளாறுகள் வரும் என்றெல்லாம் பயந்த காலம் இன்றில்லை. இப்போது கிடைக்கிற கருத்தடை மாத்திரைகளில், நம் உடலில் இயல்பாக உள்ள ஹார்மோன்களுக்கு
சமமான அதே போன்ற ஹார்மோன்களுடன் வருவதால் பக்க விளைவுகளே இருப்பதில்லை.குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடச் செய்வது தவிர, இந்த மாத்திரைகளால் வேறு சில நன்மைகளும் உண்டு. மாதவிலக்கு சுழற்சி முறையற்றிருக்கும் பெண்களுக்கும், பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளவர்களுக்கும்கூட இந்தக் கருத்தடை மாத்திரைகள் பின்னாளில் பிரச்னைகளைத் தீர்ப்பதில் உதவுகின்றன.

இந்த மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட நாட்களுக்கு தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். நாள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். ஒரு நாள் மறந்துவிட்டாலும், அடுத்த நாள் முந்தைய நாளின் மாத்திரையையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். 2 நாட்கள் தொடர்ந்து மறந்தால், மாத்திரையின் பலன் கிடைக்காமல் போகலாம். மற்ற கருத்தடை முறைகளில் தோல்வி வாய்ப்புகள் சற்றே அதிகம். கருத்தடை மாத்திரைகளிலோ, அது வெறும் 2 சதவிகிதம்தான்.

ஆனால், இது தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்குமே தவிர, பால்வினை நோய்களை தடுக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஒன்றுக்கு மேலான நபர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள், வெறும் கருத்தடையை மட்டுமே நம்பி, கர்ப்பத்திலிருந்தும், பால்வினை நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம் என தப்புக் கணக்கு போடவேண்டாம்.குறிப்பிட்ட காலம் வரை இந்த மாத்திரைகளை உபயோகித்துவிட்டு, கர்ப்பம் தரிக்க வேண்டும் என முடிவெடுத்ததும் நிறுத்தி விடலாம்.

நிறுத்திய உடனேயே கருத்தரிப்பது அறிவுறுத்தத் தக்கதல்ல. மாத்திரைகளை நிறுத்தி, 2 மாதங்களுக்கு வேறு பாதுகாப்பான முறைகளைப் பயன்படுத்தி கருத்தரிக்காமல் இருந்துவிட்டு, பிறகு கர்ப்பம் தரிக்க முயற்சிப்பதே பாதுகாப்பானது. மாத்திரைகளை நிறுத்தியதும் கருத்தரிப்பதால், அத்தனை நாள் எடுத்துக் கொண்ட மருந்தின் விளைவால் வெளியாகிற கருமுட்டை ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.ஒற்றைத் தலைவலி, ரத்தம் உறைதலில் சிக்கல், கல்லீரல் கோளாறுகள் உள்ள பெண்கள் கருத்தடை மாத்திரைகளைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

நீண்ட காலம் கருத்தடை மாத்திரைகள் எடுப்பவர்களில் அரிதாக சில பெண்களுக்கு போஸ்ட் பில் அமெனோரியா என்கிற பிரச்னை வரலாம். அதாவது, மாதவிலக்கானது ஒரு வருடம் வரைகூட வராமல் போகலாம். தேவையற்ற கர்ப்பத்தை அபார்ஷன் செய்து, அதனால் மீண்டும் கருத்தரிக்காத அளவுக்கு கருக்குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகளை சந்திப்பதற்குப் பதில்கருத்தடை மாத்திரைகளை எடுப்பது மிகவும் பாதுகாப்பான முறை.”
ld4236

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button