ஃபேஷன்அலங்காரம்அழகு குறிப்புகள்

விழாக்கால அழகு பராமரிப்பிற்கு….

பண்டிகைக் காலங்கள் ஆரம்பித்து விட்டன! இனி வரிசையாக  கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று வீடுகள் தோறும் அமர்க்களம்தான்… கொண்டாட்டம்தான்!

விருந்துகளும், உபசரிப்புகளும், பூஜைகளும் தொடர்ந்து இருப்பதால், வேலை அலுப்புகளுக்கு இடையிலும் நம்மை கொஞ்சமாவது பளிச்சென்று வைத்துக் கொள்ள வேண்டாமா?

உங்கள் சருமம் பண்டிகையின் பிஸியான காலங்களிலும்கூட தேஜஸீடன் விளங்க இதோ அழகு டிப்ஸ்கள் தருகிறார் பியூட்டிஷியன்.

நமது பெண்கள் தங்கள் லைஃப் ஸ்டைலுக்குத் தகுந்த மாதிரி தங்களை அழகுப்படுத்திக் கொள்ளத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு கிராமத்திலோ கூட்டுக் குடும்பத்திலோ இருந்துகொண்டு, பெண்கள் பண்டிகை காலங்களில் தங்கள் கூந்தலை “ப்ரீ ஹேர்”ஆக விரித்து போட்டபடி நடமாடிக் கொண்டிருந்தால் வீட்டில் பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பிறகு பண்டிகையின் கலகலப்பு மூடும் கெடும். ஸோ, முகத்தில் பக்கவாட்டில் முடி பறந்து வந்து விழாதபடி இரு காதருகிலும் முடி வைத்து அழகாக ஒரு க்ளிப் போட்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஸ்லிம்மான உடல்வாகா, இல்லை குண்டான உடல் வாகா என்பதற்குத் தகுந்தபடி நவீன நாகரீக உடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் பொருத்தமாக இருக்கும்!

தலையில் முடிகொட்டுகிறது, பொடுகுத் தொல்லை என்றால் பண்டிகை நாட்களுக்கு ஒரு மாதம் முன்பே கவனித்து சரி செய்து கொள்வது முக்கியம்.

ஷாப்பிங், வேலைகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போது, நல்லெண்ணெயில் தலை முதல் பாதம் வரை ஆயில் மஸாஜ் எடுத்துக் கொண்டு, அரை மணி நேரம் ஊறவிட்டுக் குளியுங்கள். சாதாரணமாகவே எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடிக்கு மாத்திரமல்ல, முகத்திற்கும் உடல் சருமத்திற்கும்கூட மினுமினுப்பைக் கொடுக்கும்.

வாழைப்பழம், தேன், வெண்ணெய் மூன்றையும் கூழாக்கி ஃபேஸ் பேக் போட்டு 15 நிமிடங்கள் விட்டு இளம் சூடான நீரால் முகத்தை கழுவுங்கள்.

முகத்தைப் பொலிவாக்க மஞ்சள் மிக நல்லது. ஆனால் பகலில் முகத்தில் மஞ்சள் பூசினால் உடை முழுக்க மஞ்சள் கறை தெரியும். எனவே இரவில் எண்ணெயுடன் கலந்த மஞ்சளை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து பின் வெந்நீர் தொட்டு வெறுமனே துடைத்துவிட்டு அப்படியே உறங்கி விடுங்கள். காலையில் முகம் கழுவினால் போதும்.

பயத்தமாவை தண்ணீரில் குழைத்து முகத்தில் போட்டுக் கொண்டு நன்கு உலர்ந்தவுடன் முகம் கழுவினால் முகம் தளர்வு நீங்கி இறுக்கமாக யூத்ஃபுல்லாக இருக்கும்.

பெரும்பாலான பெண்களின் முகம் பளிச்சென்று மிருதுவாக இருக்க, கைவிரல்கள் மட்டும் சுருக்கங்களுடன் ரஃப்பாக இருக்கும். விரல்களில் செய்யும் வேலைகள் பெண்களுக்கு அதிகம் என்பதால்தான் இப்படி! இதற்கு ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி உப்பு, இரண்டு சொட்டு ஷாம்பூவிட்டு உள்ளங்கையோடு விரல்களையும் நனைத்து அப்படியே 15 நிமிடங்கள் அமிழ்த்தி வைத்திருந்துவிட்டு பின்பு கைகளை வெளியே எடுத்து டவலால் துடைத்து நன்கு கழுவிக் கொண்டு தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய் தடவி விரல்களை நன்கு மசாஜ் (மேல் நோக்கி) செய்யுங்கள்.

வெண்ணெய் மசாஜ்கூட கைவிரல்களுக்கும், பாதங்களுக்கும் நல்லது. பாதங்களையும் மேற்கண்டவாறே வெந்நீரில் அமிழ்த்தி வைத்து பின் மசாஜ் செய்யுங்கள். நரம்பு முடிச்சுகள் உள்ள உள்ளங்கால்களில் மசாஜ் செய்யும்போது உடம்புக்கு நல்ல ரிலாக்ஸேஷன் கிடைக்கிறது. இதனால் உடம்பும் அலுப்பு நீங்கி புத்துணர்ச்சி அடைகிறது!

வீட்டில் தயாரிக்கும் மருதாணி, விதவிதமான நெயில் பாலீஷ்களைவிட நகங்களுக்கு பாதுகாப்பு.

வீட்டிலிருக்கும் எந்த வாசனை மலர்களானாலும் சரி, நீங்கள் குளிக்கும் தண்ணீரில் அரை மணி நேரம் போட்டு வைத்து பிறகு குளியுங்கள். அன்று முழுக்க பயங்கர புத்துணர்ச்சியோடு திகழ்வீர்கள். சந்தன எண்ணெய் கொஞ்சம் காஸ்ட்லிதான். ஆனால் அதை இரண்டே இரண்டு சொட்டுக்கள் தண்ணீரில் கலந்துவிட்டு, அந்த நீரில் குளித்துவந்தால், அன்றைய நாள் முழுவதும் ஒரு சந்தன மரத்தடியில் நீங்கள் இருப்பதுபோல் அத்தனை வாசமாக இருக்கும்.

காலை, மாலை என தினமும் இருமுறை உதடுகளுக்கு வெண்ணெய் தடவி வாருங்கள்! அதன் மென்மை அப்படியே இருக்கும்.

பண்டிகை காலத்திற்கு ஒரு வாரம் முன்பே புருவங்களைத் திருத்திக் கொள்வது ரொம்ப முக்கியம். கூடவே ஹெர்பல் ப்ளீச் மற்றும் ஃபேசியலும்!

கை, கால்கள், மேலுதடு, அக்குள் போன்ற இடங்களிலுள்ள தேவையில்லாத முடிகளை ஒரு வாரம் முன்பே அகற்றுங்கள். வேக்ஸிங் முறையே சிறந்தது. க்ரீம், பிளேடு இவைகள் சருமத்தை கருக்கச் செய்துவிடும்.

கடைக்கு புதுசு புதுசாக வரும் ஷாம்பூவை உபயோகிக்காதீர்கள். தலைக்கு ஹெர்பல் ஆயில், ஹெர்பல் ஷாம்புதான் சிறந்தது.

லிப்ஸ்டிக் பிடிக்காதவர்கள் பண்டிகை கோலாகலங்களின்போது மட்டும் லைட் கலர் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

எண்ணெய் வழியும் முகம் கொண்டவர்கள் அடிக்கடி வெறும் நீரால் முகம் கழுவிக்கொள்ளுங்கள்.

சருமப் பளபளப்புக்கு சாப்பாடும் மிகவும் முக்கியம். விட்டமின்கள், மினரல்கள் கொண்ட சரிவிகித உணவை கீரை, காய்கறி, பழங்கள் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். உணவில் ஃபைபர் ரொம்ப முக்கியம்.

பண்டிகைக்கு முன் வாரம் ஒரு முறை சோற்றுக் கற்றாழை, பால் கலந்து முகத்திற்குத் தடவி வந்தால் முகம் பளபளப்பாக மட்டுமல்ல.. மிருதுவாகவும் இருக்கும்.

face01

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button