மருத்துவ குறிப்பு

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமா?

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமா?
ஒவ்வொருவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சினைகளை மீறி மனதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், நிறைவாகவும் வைத்துக் கொள்வது என்பது சாதாரண விஷயமல்ல. நல்ல குடும்ப சூழல் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

புரிந்து கொள்ளும் கணவன், ஆதரவான மனைவி, அன்பான குழந்தைகள், விட்டுக் கொடுக்கும் மூத்தோர்கள் இருந்தால் மட்டுமே குடும்பம்… குடும்பமாக இருக்கும்.

குடும்பம் என்பது ஒரு மனிதனுள் பின்னிப்பிணைந்தது. மனிதனுக்கு குடும்பமே முக்கியம். அவனுக்கு பெற்றோர், மனைவி, குழந்தைகள், அண்ணன், அக்கா, சித்தப்பா, அத்தை, மாமா என அவனது உறவுகள் நீண்டு கொண்டே செல்லும். ஒரு குடும்பத்தின் முழு பொறுப்பும் அதில் உள்ள அனைத்து நபர்களையும் சாரும். இதுதான் அந்த குடும்பத்தினை மகிழ்ச்சியாய் வாழ வைக்கும்.

* ஒரு மனிதனுக்கு தன் மகிழ்ச்சியினை, துக்கத்தினை பகிர்ந்து கொள்ள நெஞ்சுக்கு நெருக்கமான ஆள் வேண்டும். அது தான் குடும்பம்.

* தனியாக வாழும் ஒரு மனிதனை விட குடும்பத்தோடு வாழும் மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதினை அன்றாட வாழ்வில் நாம் காணலாம்.

* கூட்டு குடும்பத்தில் வளரும் குழந்தைகள் சமுதாயத்தினை வெகுவாய் மதிப்பார்கள்.

* அன்பு, பாசம், நேர்மை, தன்னம்பிக்கை இவை போன்ற உண்மைகள், பண்புகள் குடும்பத்தோடு வளர்பவரிடம் இருக்கும்.

* குடும்பத்தோடு வாழும் குழந்தைகள் புத்திசாலியாய், திறமையாய் வளரும். காரணம் அங்குள்ள பெரியோர்களின் வழிகாட்டுதலே.

* இக்காலத்தில் கணவன், மனைவி ஒரு குழந்தை வீட்டில் வேலைக்கு அதிக உதவி ஆட்கள் என பெருகி வரும் இக் காலத்தில் அதிக திருட்டு, கொலை, குழந்தைகளுக்கு வன் முறை போன்றவையும் பெருகி வருகின்றன.

* குடும்பத்தில் மூத்தவர்களும் சேர்ந்து இருந்த நேரத்தில் குடும்ப செலவு, வீட்டு வேலை என எதுவுமே யாருக்குமே பெரிய சுமையாக இருந்ததில்லை.

* ஒரு குழந்தைக்கு அளவிட முடியாத அன்பு குடும்பத்தில் உள்ள பலரிடம் இருந்தும் கிடைத்துக் கொண்டே இருந்தது.

* திருட்டு, கொலை, வன்முறைகள், மிகக் குறைவாய் இருந்தது.

* செலவுகள் கட்டுக்குள் இருந்தன.

* குடும்ப கட்டுப்பாடு காரணமாக தீய பழக்கங்கள் குறைவாக இருந்தன.

* கல்யாணம், விழா இவை அனைத்தும் அனைவரின் தோள்களிலும் சுமக்கப்படுகின்றது.

* வாழ்வினை வாழக் கற்றுக் கொள்ள இளைய சமுதாயத்தினால் எளிதாய் முடிந்தது.

* ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழத் தெரிந்தது.

* இந்த அருமையான சொர்க்கம் இன்று காணப்படுவது குறைந்து வருகின்றது. அல்லது பல குறைகளோடு வாழ்கின்றனர். இந்த நிலை தொடருமானால் திரும்பவும் மனிதன் சமூதாய மிருகம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவானோ என்ற கவலை தோன்றுகின்றது.

இதன் காரணம் என்ன?

* ஏனோ சில தீய குணங்களும் பழக்கங்களும் குடும்ப நபர்களின் மனதில் புகுந்து விட்டன.

* ஒருவர் உழைப்பதும் பலர் அதனை உழைப்பில்லாமல் உண்பதும் ஒருவரின் நல்ல குணத்தினை பலர் அட்டை போல் உறிஞ்சுவதும் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தி விட்டன.

* வீட்டின் பெரியவர் தலைவர் என்பது போய் தலைக்குத் தலை பெரிய ஆள் என்று பேசுவது விரிசலான குடும்பங்களை நன்கு உடைக்கின்றது.

* மொத்தத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மகாபாரத யுத்தம் நிகழ்கின்றது.

* ‘நான்’, ‘நான் மட்டுமே’ என்ற நினைப்பே இன்று அநேகரை ஆட் கொள்கின்றது. இந்த போக்கு ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கவே செய்கின்றது. எனவே நன்கு ஒற்றுமையாய் இருந்த உங்கள் குடும்பம் ஏதோ காரணங்களுக்காக பிரிந்திருந்தால் அதனை சீர் செய்யும் முயற்சியினை இன்றே இப்பொழுதே ஆரம்பித்து விடுங்கள். அதற்காக செய்ய வேண்டியவை என்ன?

* முதலில் குடும்ப நபர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நம்பிக்கை வையுங்கள். ஒருவர் மிகப் பெரிய தவறுகளை செய்திருக்கலாம். பரவாயில்லை, மன்னியுங்கள். மறந்து விடுங்கள். நடந்தது போகட்டும் நடப்பது நன்மையானதாக இருக்கட்டும். இது ஒரு நொடியில் வராது. ஆனால் ஒவ்வொரு நொடியும் முயற்சி செய்யுங்கள். நடந்து விடும். நீங்கள் மட்டுமே நேர்மையானவர் அல்ல. பாதை தவறும் நபர்கள் அன்பால் நல்ல வழிக்கு வந்து விடுவார்கள். எனவே நம்பிக்கை வையுங்கள்.

* பிறரையே குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். இவ்வாறே செய்ய முனைந்தால் நீங்கள் தோற்று மட்டுமே போவீர்கள். மன்னித்துக் கொள்ளுங்கள் என்று குடும்ப நபர்களிடம் சொல்லிப் பாருங்கள். வெற்றி ஓடோடி வரும். குடும்ப நபர்கள் அனைவரும் கை நீட்டி ஓடி வந்து விடுவார்கள்.

* பிறர் நிலையில் உங்களை நிறுத்திப் பாருங்கள். அவர்கள் நிலை உங்களுக்கு எளிதாய் புரியும்.

* உதாரணமாக நாள் முழுவதும் ஓயாமல் உழைக்கும் உங்கள் மனைவியின் நிலையினை நினைத்துப் பாருங்கள்.

* ஓடாய் உழைத்து உங்களை உருவாக்கிய பெற்றோர்களின் இன்றைய நிலையினை நினைத்துப் பாருங்கள்.

* நீங்கள் சம்பாதிக்கின்றீர்கள் என்பதால் நீங்கள் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் என்பதில்லை என்பதனை உணருங்கள்.

* உடன் பிறந்தவர்களுக்கு உதவுவதால் நீங்கள் கர்ணப் பிரபு இல்லை. ஒருமுறை உதவியதையோ அல்லது பலமுறை உதவியதையோ தேவையின்றி பட்டியலிட்டு நோட்டீஸ் போர்டில் ஓட்டாதீர்கள்.

* குடும்பத்தில் நெருங்கிய உறவுகளிடம் எந்த ரகசியமும் வேண்டாம். அது தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கி விடும்.

* குடும்ப உறவுகளிடம் பொய் வேண்டாமே. அது உறவுகளிடம் நீண்ட இடைவெளி ஏற்படுத்தி விடும்.

* கணவன் தன் மனைவியை ஏமாற்றுவதும், மனைவி தன் கணவனை ஏமாற்றுவதும் இவர்களையும் இவர்களது குழந்தைகளையும் இவர்களது ரத்த உறவுகளையும் அடியோடு அழித்து விடும். இது இன்றைய கால கட்டத்தில் அதிகரித்தே வருகின்றது.

* கல்யாணம் பேசும் பொழுதே படித்த பெண்கள் ஆணின் பெற்றோர் தங்களுடன் இருக்கக் கூடாது என்று சட்டம் போடுவது குடும்பம் என்ற கூட்டின் அடித்தளத்தினையே ஆட்டம் காண செய்து விடுகின்றது.

* பெருகி வரும் முதியோர் இல்லங்கள் குடும்பம் என்ற சொல் வரலாற்றில் பார்க்க வேண்டிய சொல் ஆகிவிடுமோ என்ற அச்சத்தினைத் தருகின்றது. ஆகவேதான் ‘குடும்ப தின’ என்று வருடமொருமுறை கொண்டாடி நம்மை நாம் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

* நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்…. தாத்தா, பாட்டிகளால் தான் அநேக குடும்பங்களில் பலவித பாதுகாப்புகளும், நன்மைகளும் கிடைக்கின்றன. எனவே குடும்பத்தை குடும்பத்தோடு கொண்டாடுங்கள்.201610071406586030 Find Happiness in family life SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button