மருத்துவ குறிப்பு

அவதி நிறைந்த அவசர பயணம்

அவசர பயணங்களை முடிந்த அளவு தவிர்த்துவிடுங்கள். அது உங்களை அவஸ்தைப்படுத்திவிடும்.

அவதி நிறைந்த அவசர பயணம்
அவசரமாக ஊருக்கு கிளம்புகிறவர்கள் ரெயில், பஸ்களில் இடம்கிடைக்காமல் படும்பாடு வார்த்தைகளில் அடங்காது. அதிலும் பண்டிகை காலம் என்றால் அவர்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது. ரெயில்கள், அரசு பேருந்துகள், தனியார் சொகுசு பேருந்துகள் எல்லாமே நிரம்பி வழியும். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

அவசர பயணங்கள் மேற்கொள்ளும்போது நாம் எதை எல்லாம் இழப்போம் தெரியுமா?

* பெரும் பண நஷ்டம். டிக்கெட் கிடைத்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு நிறைய பணம் கொடுத்தோ அல்லது லஞ்சம் கொடுத்தோ டிக்கெட் வாங்க முற்படுவோம்.

* எப்படியாவது ஊருக்கு போய்விட வேண்டும் என்று துடிக்கும் அந்த நேரத்தில், பணச் செலவு ஒரு பொருட்டாக தெரியாது. ஆனால் அடித்து பிடித்து பஸ்சிலோ, ரெயிலிலோ ஏறி அமர்ந்த பின்புதான் ‘இவ்வளவு பணம் ஆகிவிட்டதே’ என்ற கவலைவாட்டத் தொடங்கும்.

* பஸ், ரெயிலுக்கு இவ்வளவு பணத்தை கொடுப்பதற்கு பதில் ‘கார் பிடித்து சவுகரியமாக போய் விடலாமே’ என்று நினைத்தால் பணத்தை அள்ளிவீசவேண்டியதிருக்கும்.

* இந்த மாதிரி அவசர பயணங்கள் நேரும்போது, அலுவலக பணிகளை மின்னல் வேகத்தில் முடிக்கவேண்டியதிருக்கும். சிலர் இருக்கிற வேலையை இருக்கிறபடியே போட்டுவிட்டு கிளம்பிவிடுவார்கள். அதனால் பல நாட்களாக சேர்த்துவைத்த நல்ல பெயரை ஒரே நாளில் இழக்கவேண்டியதிருக்கும்.

* அவசர பயணம் மேற்கொள்ள இருக்கும்போது இருக்கிற வேலையை முடித்துக்கொடுக்க பலரும் தடுமாறுவார்கள். அப்போது மன அழுத்தம், தலைவலி, பரபரப்பு ஏற்படும். இது நிச்சயம் உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதிக்கும்.

* மாணவர்கள் என்றால், குறித்த நேரத்தில் படித்து முடிக்க வேண்டிய பாடங்கள், எழுத வேண்டிய பாடங்கள், பரீட்சைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவசர பயணம் மேற்கொள்கிறவர்களை மிரட்டும்.

* உட்கார சீட் கிடைக்காவிட்டாலும் நின்றுகொண்டே போய்விடலாம் என்று நினைத்து வண்டி ஏறும் பலருக்கு கடைசி வரை இருக்க இடம் கிடைக்காது. கால் பகுதி தூரத்தை கடக்கும் முன்பே, ‘ஏண்டா கிளம்பிவந்தோம்’ என்ற எரிச்சலுக்கு உள்ளாகவேண்டியதிருக்கும். தான் ஒரு பக்கம், எடுத்து வந்த உடைமைகள் இன்னொரு பக்கம் என்று தனித்தனியாக சிலர் பயணம் செய்து கடைசி வரை தவிப்பார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இருப்பதை சுருட்டும் திருட்டு பேர்வழிகளும் கைவரிசையை காட்டி சில பயணிகளுக்கு பெரும் இழப்பை உருவாக்கிவிடுவார்கள்.

* அவசர பயணம் மேற்கொள்கிறவர்களைத்தான் திருடர்கள் குறிவைப்பார்கள். மன குழப்பத்துடன் இருக்கும் பயணிகள் தான் அவர்களுக்கு தேவை. கூட்டநெரிசல் அவர்கள் கொள்ளையடிக்க சாதகமாக இருக்கும். நெரிசலில் பயணிப்பவர்கள் எவ்வளவு நேரம்தான் தங்கள் உடைமைகளை தோளில் சுமந்து கொண்டு போகமுடியும்? அசந்திருக்கும் நேரம் பார்த்து திருடர்கள் கையில் கிடைப்பதை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.

* அவசர பயணங்களில் உணவு பற்றி சரியாக திட்டமிட முடியாது. அதனால் சூழ்நிலைக்கு தக்கபடி கண்டதையும் சாப்பிட வேண்டியதாகிவிடும். சாப்பிட்ட உடனே சில உணவுகள் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டால், அதனால் ஏற்படும் அவஸ்தை சொல்லிமாளாது. இந்த அவஸ்தைக்கு பயந்து, சாப்பிடாமலே பயணித்தாலும் அதுவும் உடலை பாதிக்கும்.

இப்படி பலவிதங்களில் நம்மை கஷ்டப்படவைக்கிறது, அவசர பயணங்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு ஊருக்கு போய் சேர்ந்த பின்பாவது டென்ஷன் தீர்ந்து மகிழ்ச்சி பிறக்குமா என்றால், அதுவும் இல்லை. குறித்த நேரத்திற்குள் திரும்ப செல்ல வேண்டுமே என்ற பதற்றம் மீண்டும் தொற்றிக்கொள்ளும். மீண்டும் அதே போராட்டத்தோடு பயணிக்க வேண்டுமே என்கிற பரபரப்பு ஊருக்கு வந்த மகிழ்ச்சியை தின்றுவிடும்.

மிக அவசரமான பயணங்களை தவிர்க்கமுடியாதுதான். ஆனால் பண்டிகை காலங்களில் திட்டமிடாத பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்கலாம். ஏன்என்றால், மகிழ்ச்சி என்பது நம் மன நிலையை அடிப்படையாக கொண்டது. பதற்றம் உருவாகி விட்டால், பண்டிகை என்றாலும் மகிழ்ச்சி தோன்றாது.

பண்டிகையை அவரவர் வாழும் ஊரிலேயே மகிழ்ச்சியாக கொண்டாட வழி இருக்கிறது. வாய்ப்புகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து நகர்புறங்களில் வாழ்கிறவர்கள் பல்வேறு அமைப்புகளை வைத்திருக்கிறார்கள். அந்த அமைப்பினர் ஒன்று சேர்ந்து கொண்டாடவேண்டியதுதான். அது வித்தியாசமான அனுபவத்தை தரும்.

நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் ஒன்று கூடி ஏதேனும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்கிருப்பவர்களுடன் பண்டிகை கொண்டாடலாம். மனதிற்கு நிறைவாக இருக்கும்.

அவசர பயணங்களை முடிந்த அளவு தவிர்த்துவிடுங்கள். அது உங்களை அவஸ்தைப்படுத்திவிடும். 201611090718072774 emergency trip problems SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button