கர்ப்பிணி பெண்களுக்கு

தாய்ப்பால் இயற்கை தரும் முதல் தடுப்பூசி

தனது குழந்தை எல்லாவற்றிலும் முதன்மையாகவும், முதல்வனாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தாய்க்கும் ஏற்படும் கனவு. அதற்காக எத்தகைய துயரத்தையும் தாங்கிக் கொள்வாள். பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்வியோடு தனியாக ஒரு படிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, நன்றாக வளர வேண்டும் என்பதற்காக சத்தான மாத்திரைகள், டானிக்குகள் என்று சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் இதிலே கொட்டுகின்றனர் பெற்றோர்கள்.
வளரும் குழந்தைகளுக்கு இத்தனை மெனக்கெடும் தாய்மார்கள், அது குழந்தையாய் இருக்கும் போது கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால் போதும், வலுவான ஆரோக்கியமான குழந்தையை வளர்த்திருக்கலாம். அவர்கள் சிரத்தை எடுக்க மறந்தது தாய்ப்பால் ஊட்டுவதைத்தான். எல்லா உயிரினங்களிலும் மேன்மையானதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மனிதன்தான், தாய்ப்பால் விஷயத்தில் விலங்குகளைவிட மோசமாக நடந்து கொள்கிறான். எந்த விலங்கும் தனது குட்டிக்கு போதுமான அளவு பால் கொடுக்க மறுப்பதில்லை.
மனித இனத்தின் பெண் மட்டும்தான் தன் குழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கிறாள். பிறந்த குழந்தைக்கு குறைந்த பட்சம் 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவும் கொடுக்கத் தேவையில்லை. போதுமான அளவு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க வேண்டியதில்லை. என் குழந்தை ஆரோக்கியமாக வளர சத்தான தாய்ப்பால் வேண்டும். அதை என் குழந்தைக்கு குறைவில்லாமல் கொடுக்க வேண்டும் என்று மனதார நினைத்தாலே போதும்.
பால் சுரக்கத் தொடங்கும். குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சிசேரியன், உடல்நிலை சரியில்லை என்று பிறந்த சில நாட்கள் பால் கொடுக்கவில்லை என்றால் தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். அதனால் சிசேரியன் என்றாலும் மயக்கம் தெளிந்த பின் பால் கொடுக்கலாம். குழந்தை உறிஞ்ச, உறிஞ்ச பால் அதிக அளவில் சுரக்கத் தொடங்கிவிடும். குழந்தையின் பசியை அறிந்து இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பாலுட்ட வேண்டும்.
பால் குடித்த ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பால் சுரந்துவிடும். தாய்ப்பால் இயற்கை தரும் முதல் தடுப்பூசி. அது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும். கலப்படமற்றது, சுத்தமானது. எளிதில் ஜீரணமாகும். குழந்தையின் மலம், சிறுநீர் வெளியேற்றத்திலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். முதலில் வரும் சீம்பால்தான் குழந்தைக்கு வரும் எல்லா நோய்களிலிருந்தும் காப்பாற்றுகிறது. உடலாலும், மனதாலும் குழந்தை முழு வளர்ச்சியடையும். பார்வைக் கோளாறு ஏற்படாது.
வைட்டமின் டி இருப்பதால் எலும்பை பாதிக்கும் ரிக்கட்ஸ் எனும் நோய் வராது. தன்னம்பிக்கை கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைத்திறன் கூடும். இவற்றோடு தாயின் அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே குழந்தைக்கு போய்ச்சேரும். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நன்மைகள் ஏராளம். மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படாது.
பிரசவத்திற்குப்பின் அதிகமாக வெளியேறும் ரத்தப் போக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நின்று விடும். தாய்ப்பால் கொடுக்கும் வரை கணவருடன் கூடினாலும் கருத்தரிக்காது. இது இயற்கை தரும் குடும்பக் கட்டுப்பாடு. இத்தனையும் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள். எனவே, தாய்ப்பாலை கொடுங்கள். பால் கொடுத்தால் மார்பகத்தின் கவர்ச்சி குறைந்து போகும் என்ற ஆதாரமற்ற வதந்தியை நம்புவதைவிட தாய்ப்பால் கொடுத்து வலிமையான பாரதத்தை உருவாக்குவது, இளம் தாய்மார்களின் கையில் தான் இருக்கிறது.p12c

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button