மருத்துவ குறிப்பு

அழகுச் செடிகளும் அருமையான அனுபவமும்!

அழகியல் தோட்டங்கள் அமைப்பது பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக அழகியல் தோட்டத்துக்கான செடிகளைப் பற்றிப் பார்ப்போம். இந்த இதழில் பனை வகையைச் சேர்ந்த அழகுச் செடிகள் மற்றும் குறுந்தாவரங்கள் (Shrubs) என சொல்லக்கூடிய அழகுச் செடிகளையும் பற்றித் தெரிந்து கொள்வோம். Shrubs எனப்படுகிறவற்றில் பூக்கும் செடிகளும் உள்ளன. வெறுமனே இலைகளால் அழகூட்டுகிற வகைகளும் உள்ளன. இத்தகைய செடிகளை தோட்டத்தில் எங்கே வைத்தால் அழகு கூடும்? அவற்றின் பலன் என்ன?

பனை வகைகளை தனித்து வைத்தாலும் அழகு. கம்பீரமாக நிற்கும். அதே நேரம் பனைக்கூட்டமாக வைத்தாலும் அழகாகக் காட்சியளிக்கும். Palm varieties எனப்படுகிற இவற்றில் பனை மரம், தென்னை மரம், பாக்கு மரம் எல்லாம் உண்டு. இவற்றுடன் பொருந்திப் போகிற இன்னொன்று மூங்கில். அதையும் நாம் கூட்டமாக வைக்கலாம். Palm வகைச் செடிகளை வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஒட்டி வைக்கலாம். வீட்டுக்கும் வீட்டின் தோட்டத்துக்கும் நடுவில் உள்ள இடத்தில் வைக்கலாம். தோட்டத்தை வீட்டுடன் இணைக்கவும் (foundation planting எனச் சொல்வோம்)

அதாவது, பிரிந்து நிற்கிற வீட்டையும் தோட்டத்தையும் இவற்றை வைப்பதன் மூலம் இணைந்து நிற்கிற
மாதிரியான தோற்றம் பெறும். Areca palm என சொல்லப்படுகிற பனை வகையை காம்பவுண்ட் சுவரைச் சுற்றி வைக்கலாம். இது அடுத்த வீட்டுக்கும் உங்கள் வீட்டுக்கும் இடையில் ஒரு திரைச்சீலை போலவும் அமையும்.Bottle palm என்றொரு வகை உண்டு. இவற்றின் கீழ்ப்பகுதி பாட்டில் வடிவில் இருக்கும். இவற்றை புல்வெளிகளில் ஆங்காங்கே ஒவ்வொன்றாக நிறுத்தி வைக்கலாம்.

தெரு போன்ற அமைப்புள்ள பகுதிகளில் நிழல் சாலை மரங்களாகவும் (Avenue trees) இவற்றை வைக்க முடியும். இந்த palm வகைச் செடிகளை வைத்து விட்டாலே அந்தப் பகுதிக்கு ஒரு ரம்மியமான தோற்றம் வந்துவிடும். இவற்றின் இன்னொரு சிறப்பு, இந்த வகைச் செடிகளை வீட்டுக்குள்ளேயும் அழகான குவளைகளில் வைக்க முடியும் என்பது!சென்னை அடையாறில் உள்ள தியசாஃபிகல் சொசைட்டியின் உள்ளே water palm என ஒன்று இருப்பதைப் பார்க்கலாம். அது தண்ணீரிலேயே வளரக்கூடியது.

இது நம்முடைய சீதோஷ்ண நிலைக்கும் வளரக்கூடியது. Palm வகைகளில் விசிறி வாழை, கூந்தல் பனை, மீன் வால் பனை, வாஷிங்டன் பனை என ஏகப்பட்டவை உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு அழகு உண்டு. இவை மெதுவாக வளரக்கூடியவை. மற்ற செடிகளைப் போல இவை காயாமல் எவர் கிரீன் என்று சொல்லக்கூடிய பசுமையுடன் இருக்கும். பனைச் செடிகளை கூட்டமாக வைக்கிற போது அதை palmatum என்று சொல்கிறோம்.

உங்கள் தோட்டத்துக்கு அழகை மட்டுமின்றி, பசுமையும் தேவை என விரும்பினால் அதற்கு சரியான சாய்ஸ் இந்த பனை வகைகள். குறுந்தாவரங்கள்… இவை ரொம்பவும் சின்ன செடிகளாகவும் அல்லாமல் பெரிய மரங்களாகவும் அல்லாமல் ஓரளவு மீடியமான அளவில் இருக்கும். குரோட்டன்ஸ் வகை போன்றவை. குரோட்டன் என்பது Codieum variegetum வகையைச் சேர்ந்தவை. ஆனால், எல்லாமே குரோட்டன் கிடையாது. அக்காலிஃபா, சின்ன நந்தியாவட்டம், அடுக்கு நந்தியாவட்டம், இட்லிப்பூ, செம்பருத்தி என எல்லாமே குறுந்தாவரங்கள்தான்.

பலவகையான பூச்செடிகளும் குறுந்தாவரச் செடி வகைகளைச் சேர்ந்தவைதான். பெரிய லான் அல்லது கார்ப்பெட் கார்டன் அமைக்கிற போது ஆங்காங்கே இந்த குறுந்தாவரச் செடிகளை வைக்கலாம். இந்தக் குறுந்தாவரப் பூச் செடிகளை வைத்து நமது வீட்டுத் தோட்டத்தில் ஒரு நந்தவனம் அமைக்கலாம். கோயில்களைச் சுற்றியுள்ள செடிகளை கவனித்திருக்கிறீர்களா? அடுக்கு நந்தியாவட்டை, ஒற்றை நந்தியாவட்டை, மல்லி, முல்லை, பிச்சி, பன்னீர் பூ, அரளி போன்றவை கோயில் நந்தவனங்களில் வளர்க்கக்கூடியவை.

இது போல கடவுளுக்குப் படைக்கிற பூக்களை நமது வீட்டு நந்தவனத்திலிருந்தே எடுக்கலாம். கோயில்களுக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலங்களில் முக்கியமாக பூச்செடிகள் இருப்பதைப் பார்க்கலாம். அங்கே மலர்கிற பூக்களைத்தான் கடவுளுக்குப் படைப்பார்கள். கோயிலுக்குக் கொடுக்கும் அளவுக்குப் பூக்கள் கிடைக்கவில்லை என்றாலும் நமது வீட்டு பூஜைக்குப் பயன்படுத்துகிற அளவுக்காவது நாமே நம் வீட்டுத் தோட்டத்திலிருந்து பூக்கள் வளர்ப்பது என்பது அருமையான ஒரு அனுபவம்.

பூந்தோட்டம் என வரும்போது அதில் ஒவ்வொருவரது தேவைகளும் விருப்பங்களும் வேறு வேறாக இருக்கும். புதுச்சேரி அன்னையை வழிபடுகிறவர்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மலரை வைத்து வணங்குவார்கள். அந்த ஒவ்வொரு மலருக்கும் ஒரு அர்த்தம் உள்ளதென்பது அவர்களது நம்பிக்கை. அவர்கள் பொகேன் வில்லா மலர்களைக் கூட வைப்பார்கள். இந்தக் குறுந்தாவரச் செடிகளையும் பனை வகைகளுக்குச் சொன்னது போலவே வீட்டையும் தோட்டத்தையும் இணைக்கும் பகுதியில் வைக்கலாம்.

ஆங்காங்கே ஒரு வட்டமோ, சதுரமோ போட்டு அதற்குள் ஒரு குழுவாக வைக்கலாம். உதாரணத்துக்கு ஒரு வட்டம் அல்லது சதுரத்தில் 4 அல்லது 5 செம்பருத்திச் செடிகள்… நடுவில் ஒரு செடி என வைக்கலாம். இவற்றில் பராமரிப்பு அதிகம். இவற்றை வைக்கிற போது வெள்ளை மாவுப் பூச்சிகளின் தொந்தரவு சற்றே அதிகமாக இருக்கும். அவை வராமல் தடுப்பது பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

குறுந்தாவரங்கள் வைக்கிற போது தோட்டத்துக்குள் எறும்புகள் வராமல் தடுப்பது நல்லது. செடிகள் வைக்கிற போது அடர்த்தியாக வைக்காமல் அடியில் தண்டுகள் தெரிகிற மாதிரி வைக்க வேண்டும். அந்தத் தண்டுகளில் லேசாக வேப்பெண்ணெயைத் தடவி விட்டால் எறும்புகள் ஏறாமலும் வெள்ளைமாவுப் பூச்சிகள் வராமலும் ஓரளவு கட்டுப்
படுத்த முடியும்.

குறுந்தாவரங்களில் இலைத் தாவரங்களையும் வைக்கலாம். பூத்தாவரங்களையும் வைக்கலாம். இலைத்தாவரங்களில் பலவித பச்சை நிற இலைகளைக் கொண்டவை இருக்கின்றன. சிவப்பு நிற இலை கொண்டவை கூட உண்டு. மஞ்சள் கலந்த பச்சை, சிவப்பு கலந்த பச்சை எனக் கலவையாக வைக்கிற போது உங்கள் தோட்டமே வண்ணமயமாக மாறும். சென்னை, மீனம்பாக்கம் ஏர்போர்ட்டின் காம்பவுண்ட் சுவரைச் சுற்றி அகாலிஃபா சிவப்பு மற்றும் அகாலிஃபா பச்சை ஆகிய குறுந்தாவரச் செடிகள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

இப்படி இலைகளை வைத்தே வித்தியாசமான ஒரு அழகைக் காட்ட முடியும். பூச்செடிகளை வைக்கிறபோது அவற்றின் நிறமும் வடிவமும் இயற்கையாகவே தோட்டத்துக்கு ஒரு அழகைக் கொடுத்துவிடும். நாம் ஏற்கனவே பார்த்தது போல தோட்டம் என்பது எல்லோரது விருப்பங்களுக்கும் ஏற்றபடி அமைக்கப்பட வேண்டும். எனவே சிவப்பு, மஞ்சள் போன்ற பிரைட் நிறங்களிலும், ஊதா, பிங்க், நீலம் போன்ற குளிர்ச்சியான நிறங்களிலும் பூக்கள் இருக்கும்படி கலவையாக வைக்க வேண்டும்.

இப்படி ஒரு குழுவாக குறுந்தாவரங்களை வைப்பதற்கு shrubbery என்று பெயர். குறுந்தாவரக் கூட்டம் என்று தமிழில் சொல்லலாம். இவை கண்ணுக்கு விருந்தளிக்கக்கூடியவை என்பதில் சந்தேகமில்லை. இந்தச் செடிகளை தரமான நர்சரியில் வாங்க வேண்டும். கட்டிங் முறையில்தான் இவை வளர்க்கப்படுகின்றன. முதலில் தரமான செடிகளைத் தேர்வு செய்து வீட்டில் வளர்த்து பிறகு, அவற்றில் இருந்தே அடுத்தடுத்த செடிகளை பெருக்கம் செய்து கொள்ளவும்
முடியும்.
ld4460

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button