மருத்துவ குறிப்பு

இளம் பெண்களை வாட்டும் வாழ்வியல் பிரச்சினைகள்

இருபது-முப்பது வயதுப் பெண்களை, நிரந்தர வேலை, திருமணம், குழந்தைப் பாக்கியம், உடல் பருமன், முதுமையின் தொடக்கம் என எண்ணற்ற பிரச்சினைகள் ஆட்டிப் படைக்கின்றன.

இளம் பெண்களை வாட்டும் வாழ்வியல் பிரச்சினைகள்
தேடல் நிறைந்த பருவம், இளமை. இன்றைய இளம் பருவத்தினர் இனிமையை தேடுவதைவிட, சுமைகள் மிகுந்து காணப்படும் வாழ்வில் தீர்வுகளைத் தேடி அலைபவர்களாக மாறிவருகிறார்கள். குறிப்பாக இருபது-முப்பது வயதுப் பெண்களை, நிரந்தர வேலை, திருமணம், குழந்தைப் பாக்கியம், உடல் பருமன், முதுமையின் தொடக்கம் என எண்ணற்ற பிரச்சினைகள் ஆட்டிப் படைக்கின்றன.

நீங்களும் அதே ரகம் என்றால், ஆய்வாளர்கள் இதில் இருந்து மீள்வதற்கு சொல்லும் வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்.

வேலை:

கல்லூரியை கடந்து, வயது இருபதைத் தாண்டினால், வாழ்க்கை கேள்விகள் நிறைந்ததாகிவிடுகிறது. ‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வியை சமூகம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஏனெனில் பலருக்கும் எதிர்பார்த்த மாதிரியான வேலை உடனே அமைந்துவிடுவதில்லை. விரும்பும் வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கவோ, அலையவோ வேண்டியிருக்கிறது.

25 வயது வரை அதில் நிச்சயமற்ற நிலை நீடித்தால், மனம் மேலும் படபடக்கும். ஒரு பக்கம் பெற்றோர் திருமண ஏற்பாட்டில் மும்முரமாக இருப்பார்கள். அந்த பெண்ணின் மன நிலையோ படித்த படிப்பிற்கான வேலை சரியாக அமையவில்லையே என்ற ஏக்கத்தை எதிரொலித்துக்கொண்டிருக்கும். ஆனால் கிடைத்திருக்கும் வேலையை விட்டுவிட்டு, அதைவிட சிறந்த வேலையை தேடவும் மனம் தயங்கும். இதுபோன்ற பிரச்சினை தனி நபர் சார்ந்தது அல்ல. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பொதுவானவை.

அமெரிக்காவில், ‘இளம் பெண்களின் வேலை திருப்தி’ பற்றி கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. முப்பது வயதுக்குட்பட்ட பணியாளர்களில் 80 சதவீதம் பேர், ‘தாங்களுக்கு கிடைத்திருக்கும் வேலையில் திருப்தியில்லை’ என்று கூறியிருக்கிறார்கள். அதனால் அந்த பணியில் இருந்து வேறு பணிக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், ‘இருக்கிற வேலையை விட்டுவிட்டால் உள்ளதும் போச்சே என்ற நிலை ஆகிவிடக்கூடாது என்ற பயத்துடன் இருப்பதாகவும்’ கூறியிருக்கிறார்கள். ‘வேறு வேலை கிடைக்காமல் போய்விடக்கூடாதே!’ என்ற பயத்திலே கிடைத்திருக்கிற வேலையில் திருப்தியில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

‘இதுபோன்ற அச்சம் தேவையில்லை’ என்கிறார் யோகா ஆசிரியை மேகா. பதிப்புத் துறை சார்ந்த பணியில் இருந்த அவருக்கு அந்த பணியில் திருப்தி இல்லை. ராஜினாமா செய்துவிட்டு தான் கற்ற யோகா கலையை சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். இப்போது மேகாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது யோகா.

“அலுவலக வாழ்க்கை என்னுடைய கனவுகளை சிதைப்பதாக உணர்ந்தேன். இப்போது அதிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன்” என்று பூரிக்கிறார் அவர்.

இப்படி வேலையில் திருப்தியில்லாமல் திணறுகிறவர்களுக்கு மனநல நிபுணர்கள் தரும் தீர்வு என்ன?

“குறிப்பிட்ட துறை உங்களுக்கு ஏற்றது என நினைத்து அதில் வேலை பார்க்கத் தொடங்கியபின் அந்த துறை திருப்தியாக இல்லை என்று உணர்ந்தால் அந்த வேலையை மறுபரி சீலனை செய்வது நல்லதுதான். மனதுக்குப் பிடித்த ஒன்றுதான் மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் உண்டாக்கும். அதே நேரத்தில் அந்த பணியில் இருந்துகொண்டே பிடித்த அடுத்த வேலையை தேடிக்கொள்வது அவசியம். அந்த மாதிரியான நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவேண்டும். துணிச்சலை வரவழைத்துக்கொள்ள வேண்டும். என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் உங்கள் மனம் நிலைகுலையாத அளவுக்கு பார்த்துக் கொள்ளவேண்டும்” என்கிறார்கள்.

திருமணம் :

இளம் பெண்கள் ஒருவழியாக கிடைத்த வேலையில் மனதை திருப்திபடுத்திக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கையில், ‘இத்தனை வயதாகிவிட்டதே! எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறாய்?’ என்ற நெருடலான கேள்வி எழுப்பப்படும். நாம் மரபுகளில் ஆழப் பதிந்தவர்கள் என்பதால் சமூகத்தின் இந்தக் கேள்வியை தடுக்க முடியாதுதான். உறவுகளும், தோழிகளும்கூட சமயத்தில் இந்த கேள்விகளை கேட்கும்போது மனதில் லேசாக வலி தோன்றத்தான் செய்யும். தன் மீதான அக்கறையில்தான் அந்த கேள்வியை கேட்கிறார்கள் என்பது தெரிந்தாலும் மனம் கலக்கமடைவதை தடுக்க முடியாது.

இதை எப்படி எதிர்கொள்வது? என்று சொல்கிறார் உளவியல் ஆய்வாளர்.

“அது என் தனிப்பட்ட விருப்பம் என்று முகத்தை முறிக்கும் வகையில் எல்லோரிடமும் பதில் கூற முடியாதுதான். ‘திருமணம்- குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ள இன்னும் கூடுதல் பக்குவம் தேவை என்று நினைக்கிறேன். அதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உங்கள் அக்கறை எனக்கு அதற்கு துணை வரட்டும்’ என்று நாசூக்காக கூறிவிடலாம்.

நிஜமாகவே திருமண வாழ்க்கைக்கு தேவையான தகுதிகளை இளம் பெண்கள் வளர்த்துக்கொள்ளவேண்டியதிருக்கிறது. திருமண வாழ்க்கையின் பொறுப்புகளையும் அவர்கள் உணரவேண்டியதிருக்கிறது. அதற்கு மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக வேண்டியதிருக்கிறது. மணவாழ்க்கையில் அவசரத்தைவிட நிதானமே சிறந்தது.

குழந்தையின்மை :

ஒருவழியாக திருமணம் முடிந்து, ஒன்றிரண்டு வருடங்கள் ஆகிவிட்டால், ‘இன்னும் தொட்டில் ஆடவில்லையே?’ என்ற கேள்வி இளம்பெண்களை நோக்கி எழும்பும். இந்த கேள்வி, திருமணம் செய்த பெண்ணின் வீட்டிற்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் வரும். இந்த மாதிரியான கேள்விகளை கேட்டு பழக்கப்பட்ட குடும்பங்களில் இருந்துதான் நாம் பிறந்து வளர்ந்திருக்கிறோம். அதனால் இந்த கேள்வியை எதிர்கொள்ள பெண்கள் தயங்கக்கூடாது. அதே நேரத்தில் குழந்தையின்மையை பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் அவசியம் இருக்கவேண்டும்.

‘குழந்தையின்மையை நினைத்து பெண்கள் வருந்தவேண்டியதில்லை. இன்றைய நவீன கால மருத்துவத்தில் குழந்தையின்மைக்கும்- வயதுக்கும் தொடர்பில்லை. இளம் வயதை கடந்த பின்பும் நவீன மருத்துவத்தின் மூலம் தாய்மையடையலாம். அதனால் குழந்தையின்மையை பற்றிய பயத்தில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும்’ என்று கூறுகிறார், மகப்பேறு நிபுணர்.

‘குழந்தையின்மையை பற்றிய கேள்விகள் எழுப்பப்படும்போது இளம் பெண்கள் தடுமாறாமல் நிதானமாக பதிலளிக்க வேண்டும். ‘தாய்மையடைதலை இன்னும் ஒன்றிரண்டு வருடங்கள் தள்ளிவைத்திருக்கிறோம்’ என்றோ, ‘தாய்மையடைய தயாராகிக்கொண்டிருக்கிறேன்’ என்றோ, ‘நாங்களும் உங்களைப்போல ஆவலோடு காத்திருக்கிறோம்’ என்றோ சொல்லுங்கள்.

அழகுக் குறைபாடு :

இளம் பெண்கள் தங்கள் தலையில் ஒற்றை நரை முடியையோ, முகத்தில் லேசான சுருக்கத்தையோ முதன் முதலாக காணும்போது மிரண்டு போகிறார்கள். அதனை மறைக்க கையில் கிடைத்த அழகு சாதன பொருட்களை எல்லாம் பயன்படுத்த தொடங்கிவிடு கிறார்கள். இளநரை, தோல் சுருக்கம், குதிகால் வெடிப்பு, உடல் பருமன் போன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது. அந்தந்த துறையில் முறையாக கற்று, சிகிச்சை அளிப்பவர்களை கண்டறிந்து ஆலோசனை பெறுங்கள். 201612190933075972 problems that young women SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button