ஆரோக்கிய உணவு

வெந்தயம்… கசப்பு தரும் இனிமை!

சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும் ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு. இந்த அதிசய விதைகளை, `சின்னஞ்சிறு நல மாத்திரைகள்’ என்றே சொல்லலாம்.

கிரேக்கர்கள்தான் இந்தியாவுக்கு வெந்தயத்தை அறிமுகப்படுத்தியவர்கள். இன்றைக்கு இது சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் உணவில் மணமூட்டி! அதுவும் சாதாரண மணமூட்டி அல்ல… தொற்றாநோய்களான சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்… என அனைத்துக்கும் பயன் தரக்கூடியது!

`வீகன் டயட்’ முறையைப் பின்பற்றுபவர்களுக்கு அதிக நார்ச்சத்து தருவது வெந்தயம் மட்டுமே. இதில் கரையும் நார், கரையாத நார் இரண்டுமே உள்ளன. கரையும் நார், இதய ரத்தத் தமனிகளில் சேரும் கொழுப்பைக் குறைக்க உதவும். கரையாத நாரில் இரு முக்கியப் பயன்கள் உள்ளன. ஒன்று, மலத்தை எளிதாகக் கழியவைக்கும். இன்னொன்று, உணவோடு வரும் சர்க்கரை ரத்தத்தில் வேகமாகக் கலப்பதைத் தடுக்கும்.

பல மேற்கத்திய நாடுகளில் ரத்தக் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க, வெந்தயத்தின் கசப்புத் தன்மையை நீக்கி, அதன் சத்தை எடுத்து, ரொட்டிகளிலும் கேக்குகளிலும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

272519 20339

வெந்தயம் தரும் நன்மைகள்…

* வெந்தயம், ஹார்மோன்களைச் சீராக்கும் தன்மைகொண்டது. அதனால், `ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் ஊட்டும் உணவு இது’ என்று உலகின் பல பாரம்பர்ய மருத்துவ முறைகள் இதைப் பதிவுசெய்திருக்கின்றன.

* மாதவிடாய் கால வலியான சூதகவலிக்கு (Dismenorrhea) பல காரணங்களைச் சொல்கிறது நவீன மருத்துவம். ரத்தசோகை, கர்ப்பப்பை உள் சவ்வு, கர்ப்பப்பைக்கு வெளியேயும் வளர்ந்து தொல்லை தரும் எண்டோமெட்ரியோசைஸ் (Endometriosais), அடினோமயோசிஸ் (Adenomyosis)… எனப் பல காரணங்கள். இவை மாதவிடாய் காலத்தில் பெண்ணுக்குத் தாங்க முடியாத வலியைத் தருபவை. வெந்தயத்தில் இருக்கும் `டயாஜினின்’ சத்து, பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல் செயல்படும் வேதிச் சத்து. வெந்தயப் பொடியில் இருக்கும் இந்த டயாஜினின் சத்து, கர்ப்பப்பையை வலுவாக்கும்; ஹார்மோன்களைச் சீராக்கும்; வலியை நிரந்தரமாகப் போக்கும்.

* `பித்த உதிரம் போகும்; பேராக் கணங்களும் போகும்; வீறு கயம் தணியும்’ என `அகத்தியர் குணவாகடம்’ பாடியுள்ளது வெந்தயத்தைப் பற்றித்தான். வெந்தயம், மாதவிடாய் வலி நீக்க ஒரு பக்க விளைவில்லாத மருந்து. மாதவிடாய் வருவதற்கு முந்தைய ஐந்து நாட்களில், வெந்தயப் பொடியோ, வெந்தயக் களியோ, வெந்தய தோசையோ, வெந்தயம் சேர்த்த குழம்போ சாப்பிடுவது வலியைக் குறைக்க உதவும்.
334143 (1) 20547

* வாய் துர்நாற்றம், வியர்வை நாற்றம் இரண்டுக்கும் இது உதவும். சிறிது வெந்தயத்தை வெந்நீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்து, வெறும் வயிற்றில் அருந்தலாம். இது, குடலின் ஜீரணச் சுரப்புகளைச் சீராக்குவதன் மூலம், வாய் துர்நாற்றத்தை நீக்க உதவும்.

* பாலூட்டும் தாய்மார்கள், வெந்தயத்தைக் கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சியில் சேர்த்துச் சாப்பிட்டால், பால் சுரப்பு கூடும்.

* வெந்தயத்தையும் கருணைக்கிழங்கையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மெலிந்திருக்கும் உடல் வலிமை பெறும் என்கிறது சித்த மருத்துவம்.

336666 20263

* தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் தைலங்களில் வெந்தயத்துக்கு முக்கியமான இடம் உண்டு. உடல் சூடு அதிகமாக உள்ளவர்களுக்கு முடி உதிர்வது பெரிய பிரச்னை. வெந்தயத்தை அரைத்து, தலையில் அப்பி, சிறிது நேரம் ஊறவைத்து, பிறகு தலைக்குக் குளித்தால், கண்களும் தலையும் குளிரும். தலைமுடி உதிர்வது நீங்கும்.

* சர்க்கரைநோயின் ஆரம்பகட்ட நிலையில் (Impaired Glucose Tolerance Stage) இருப்பவர்கள், வெறும் வெந்தயத்தை லேசாக வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு, காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அரை டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button