மருத்துவ குறிப்பு

ஆபத்தான தலைவலிகள் ஏவை?

பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான ஆபத்தான தலைவலிகளுக்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

மண்டையோட்டுக் குழியினுள் அமுக்கம் அதிகரித்தல்.
சில வகைத் தொற்றுக்கள். உதாரணம் மூளைய அழற்சி
இராட்சதக்கல நாடியழற்சி (Giant Cell Arterilis)
மண்டையோட்டுக்குழியினுள் ஏற்படும் குருதிப் பெருக்கு
மூளைய முண்ணாண் பாய்பொருளின் கனவளவில் ஏற்படும் குறைவு
தலையில் அடி படுதலின் பின்னரான தலைவலி
திடீரென ஏற்படும் கண்ணின் அமுக்க அதிகரிப்பு
மூளையில் ஏற்படும் கட்டிகள், சீழ்க்கட்டிகள்

மேற்கூறிய காரணிகளால் ஏற்படுத்தப்படும் தலைவலிக்கு விஷேட சிகிச்சைகள் அவசியமாகின்றன. ஏனெனில் மேற்கூறிய காரணங்கள் பாரதூரமான விளைவுகளைத் தரவல்லன. ஏன் சில உயிராபத்தையே விளைவிக்கக்கூடியன!

புதிதாக, திடீரென்று தீவிரமான தலை வலி ஏற்ப்பட்டால்
முன் எப்போதும் எதிர்நோக்காத அல்து உணராத, முற்றிலும் வேறுபட்ட தீவிரமான தலைவலி ஏற்பட்டால்,
தன்னுணர்வில் மாற்றம் ஏற்பட்டால் ( Altered Consciousness)
தீவிர காய்ச்சல், வாந்தி இருப்பின்,
ஒரு பக்கம் வாதம் ஏற்பட்டு உணர்வற்றிருப்பின்
காலையில் எழும் போதே தலையிடி இருப்பதுடன், இருமும் போதோ அல்லது தும்மும் போதோ தலைவலி அதிகரிப்பின்
பார்வையில் மாற்றம் ஏற்படின் ( குனியும் போது / வளையும் போது / இருமும் போது)

உடனடி வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறான நோய் அறிகுறிகள் தலைவலிக்கான அடிப்படைக் காரணி உயிராபத்தை விளைவிக்கவல்ல நோய் நிலைமைகளால் ஏற்பட்டதென்பதை எடுத்தியம்புகின்றன.

சில ஆபத்தில்லாத தலைவலி வகைகள்

ஒற்றைத் தலைவலி
வேலைப்பளு காரணமாக ஏற்படும் தலைவலி (Tension Headache)
கிளஸ்ரர் தலைவலி (Cluster Headache)

என்பன சில ஆபத்தில்லாத தலைவலி வகைகள் ஆகும்.

i. ஒற்றைத் தலைவலி

பொதுவாக நாற்பது வயதிற்குட்டபட்டவர்களிலே ஏற்படுகின்ற தலைவலியாகும். இது தீவிரமான தலைவலியை ஏற்படுத்தும். இடிப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தும் தலைவலியாகும். இதனுடன் சேர்ந்து வயிற்றுப்பிரட்டல், வாந்தி என்பன காணப்படலாம். இவ் வகைத் தலைவலி உடையோர் வழமையான வேலைகளில் ஈடுபடமுடியாது அவதியுறுவர்.

மன அழுத்தம், காலநிலை மாற்றம், நித்திரை குழம்புதல்,சொக்லேட், சீஸ், மதுபானம், அதிக வெளிச்சம், அதிகரித்த ஒலி, அதிகரித்த அசைவுகள் போன்றன இவ்வகைத் தலைவலியைத் தூண்ட வல்லன. ஒற்றைத் தலைவலியால் அவதியுறுவோர் மேற்சொன்ன காரணிகளைத் தவிர்த்தல் உசிதமானது. சிலருக்கு மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.

ii. வேலைப்பளு காரணமாக ஏற்படும் தலைவலி

இருபக்கத் தலையிலும் உணரப்படுகின்ற மந்தமான ஒரு தலைவலியாகக் காணப்படும். சிலரில் பட்டியை இறுக்கியது போன்ற உணர்வு காணப்படும். சிலரில் கண்களுக்கு பின்னால் அழுக்குவது போன்று காணப்படும். சிலர் தலையுச்சியில் அமுக்குவது போன்று உணர்வர். இவ்வகைத் தலைவலி அதிக மன அழுத்தம், வேலைப்பளு உள்ளவர்களிலேயே பொதுவாக ஏற்படுகின்றது. இவர்களுக்கு தளர்வுப் பயிற்சிகள் பரிந்துரைக்கபடுகின்றது. சிலருக்கு வலி நிவாரணிகள் தேவைப்படலாம்.

iii. கிளஸ்ரர் தலைவலி

இருபதுக்கும், நாற்பதுக்குமிடையிலான வயதுடைய ஆண்களில் ஏற்படவவல்ல ஒரு வகைத் தலைவலியாக இது காணப்படுகின்றது. மிகத் தீவிரமான தாங்கமுடியாத தலைவலியாகக் காணப்படும். ஒரு பக்கத் தலைப்பகுதியிலேயே ஏற்படும். கண்ணின் பின்னாக உருவெடுக்கும் இத் தலைவலியுடன் கண்ணீர் சுரத்தல், மூக்கடைப்பு, கண் செந்நிறமாதல், தற்காலிகமாகக் கண்ணை இறுக்கி மூடமுடியாதிருத்தல் போன்றனவும் காணப்படலாம்.

தலைவலி நீடிக்கும் நேரம் 30 – 90 நிமிடங்களாக இருப்பினும், ஒரே நாளில் பல தடவைகள் ஏற்படலாம். நித்திரையில் கூட ஏற்படலாம். இவ் வகைத் தலைவலி பொதுவாக ஆண்டொன்றின் குறிப்பிட்ட காலத்திலேயே ஏற்படுகின்றது.

இவ்வகைத் தலைவலி உடையோருக்கு முற்காப்பு மருந்துகள் வழங்கமுடிவதில்லையாயினும், தலைவலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் மருந்துகள் மூலம் தலைவலியை நிறுத்த முடிகின்றது. இவ்வகைத் தலைவலி உடையோரில் வலிநிவாரணிகள் பயனற்றவை ஆகின்றன.photo

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button