மருத்துவ குறிப்பு

பர்சனல் லோன்… சுமையைக் குறைக்க சூப்பர் டிப்ஸ்!

கடன் அன்பை முறிக்கும்; சில நேரங்களில் எலும்பையும் முறிக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், சில சமயங்களில் கடன் வாங்குவது நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.

கடனைக் கண்டு அஞ்சிய காலம் போய், இன்றைக்கு கடன் சந்தை என்ற ஒன்றே பக்காவாக உருவாகிவிட்டது. வீட்டுக் கடன், தொழில் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன், மோட்டார் கடன், மொபைல் கடன் வரை ஏராளமான கடன்கள் சந்தையில் குவிந்து கிடக்கின்றன. இந்தக் கடன்களை பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவர அறிக்கையின்படி, தனிநபர் கடன்களை அதிகம் வாங்கியிருப்பது தென் இந்தியர்கள்தான் என்பது தெரிய வந்துள்ளது. மொத்த தனிநபர் கடனில், தென் இந்திய மாநிலத்தவர்களின் பங்கு 38.45% ஆகும்.

மேலும், இங்கு கடன் வாங்குவோரின் எண்ணிக்கை 2014-ம் வருடத்தைக் காட்டிலும் 2015-ல் 13.66% அதிகரித்திருக்கிறது. வேகமான நகரமயமாக்கம், அதிகரித்த பணப் புழக்கம் போன்ற காரணங்களால் மக்களின் கடன் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.

எளிதில் வாங்குவதற்கும், தேவைக்கேற்ப அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வதற்கும் வசதி உள்ளதால், தனிநபர் கடன்கள் எளிதில் மக்களைக் கவர்ந்து விடுகின்றன. ஆனால், ”கையை நீட்டிய உடனே பணம் ரொக்கமாக கிடைக்கிறது என்பதற்காக தனிநபர் கடனை அதிக வட்டிக்கு வாங்குவது எதிர்காலத்தில் நம்மை பெரும் சுமையில் தள்ளிவிடும். கொஞ்சம் ஸ்மார்ட்டாக திட்டமிட்டால் கடன் சுமையிலிருந்து நாம் எளிதில் தப்பிக்கலாம்” என்கிறார் நிதி ஆலோசகர் யூ.என். சுபாஷ். எப்படி என்று அவரிடமே கேட்டோம்.

“ஒருவர் கடனே வாங்கக் கூடாது என்ற கொள்கையில் இருந்தால்கூட இப்போதுள்ள வாழ்க்கை முறையில் முடியவே முடியாது. வங்கி இருப்பில் எவ்வளவு பணம் இருந்தாலும், கிரெடிட் கார்டில் கடனுக்குதான் செலவு செய்கிறோம். வீடு கட்ட, படிப்புக்கு, வாகனங்கள் வாங்க, தொழில் செய்ய, பொருட்கள் வாங்க என அனைத்துக்கும் கடன் வாங்குகிறோம்.

சரியான கடன்!

வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் என நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு கடனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறைந்த வட்டி, டாக்குமென்ட் இல்லாத லோன் என்றெல்லாம் வங்கிகள் விளம்பரம் செய்வதைப் பார்த்து, தனிநபர் கடனை வாங்கினால் பின்னர் பிரச்னை உங்களுக்குதான். கடன்களிலேயே அதிக வட்டி கொண்டது தனிநபர் கடன்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தனிநபர் கடன் குறுகிய காலக் கடனாக வருவதால், உங்கள் தினசரி வாழ்க்கையின் கேஷ் ஃப்ளோவிலேயே பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.

அது மட்டுமல்லாமல், பல வங்கிகள் கெடு தேதிக்கு முன் பணத்தை மொத்தமாகத் திருப்பிச் செலுத்த அனுமதிப்ப தில்லை. அதற்கு அபராதம் விதிக்கின்றன. எனவே, மிக மிக அவசர காலத்தைத் தவிர, மற்ற சமயங்களில் கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் பெறுவது கூடவே கூடாது!
ஒழுக்கம் வேண்டும்!

சொந்தப் பணமாக இருந்தாலும் சரி, கடனாகிய வாங்கியப் பணமாக இருந்தாலும் சரி, பணத்தைக் கையாளுவதில் ஒழுக்கம் வேண்டும்.

தனிநபர் கடன் மூலம் வாங்கிய தொகையை நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் செலவு செய்துகொள்ளலாம் என்பதால் நம் மனம் தடுமாற வாய்ப்புள்ளது.

எனவே, பணத்தைக் கையாள்வதில் ஒழுக்கம் இல்லா விட்டால், மொத்த பணமும் நீங்கள் எதற்காகக் கடன் வாங்கினீர்களோ, அந்த இலக்கை எட்டுவதற்குள் விரயமாகிவிடும். ஏனெனில் செலவுக்கும் கடனுக்கும் மிக முக்கிய காரணம், நம்முடைய பழக்கவழக்கம்தான். அதில் சிறு சிறு மாற்றங்களைச் செய்தாலே நம்மால் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும்.

p56a

திட்டமிடல் அவசியம்!

கடன் வாங்கியிருக்கும் பட்சத்தில், எப்போதும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்களுடைய வருமானம், அன்றாடச் செலவு, எதிர்கால செலவு மற்றும் அவசர கால செலவு என ஒரு பட்ஜெட் போட்டு கொள்ள வேண்டும்.

இதன் அடிப்படையில் வருமானத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒரு பங்கை அன்றாடச் செலவுகளுக்கும், இரண்டாம் பங்கை சேமிப்புக்கும், மூன்றாம் பங்கை கடனுக்கு செலுத்த வேண்டிய இஎம்ஐ போன்றவற்றுக்காக திட்டமிட்டு கொண்டால் எளிதில் சமாளிக்க முடியும்.

அதேபோல், என்ன கடன், எவ்வளவு தொகை தேவை, திருப்பிச் செலுத்தும் காலம், உங்களுடைய வயது, வருமானம் ஆகியவற்றை வைத்தே கடன் வாங்குவது குறித்த முடிவுகளை எடுக்க வேண்டும். உங்களின் தேவை என்ன என்பதைத் தெரிந்து, அதற்கேற்ப கடன் வாங்குவது நல்லது. கடன் கிடைக்கிறது என்பதற்காக ரூ.50,000 தேவை என்றால் ரூ.2 லட்சம் வாங்கக் கூடாது.

தவணைக் காலம்!

தனிநபர் கடன் வாங்கும்போது எத்தனை ஆண்டுகளுக்குள் அந்தக் கடனை திரும்பக் கட்டி முடித்துவிடவேண்டும் என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்துவிடுங்கள். எந்தக் கடன் வாங்குவதாக இருந்தாலும் அதை உங்களது 50 வயதுக்கு முன்பே திரும்பச் செலுத்தும் வகையில் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

மேலும், குறுகிய காலத்தில் அடைக்க விரும்பினால், உங்களின் இ.எம்.ஐ. தொகை அதிகமாக இருக்கும். அதே கடனை நீங்கள் நீண்ட காலத்தில் அடைத்தால் இ.எம்.ஐ. குறைவாக இருக்கும். கடன் வாங்குபவர்கள் இளம் வயதில் (25-30) வாங்கினால் நீண்ட கால அடிப்படையில் சுமை இல்லாமல் திருப்பிச் செலுத்தலாம்.

வட்டியுடன் கட்டணம்!

வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கியிலும் மாறுபடும். குறைவான வட்டி என்று விளம்பரம் செய்வார்கள். ஆனால், தனிநபர் கடன் வாங்கும்போது வட்டியை மட்டும் பார்த்து கடன் வாங்கக் கூடாது. இதனுடன் வசூலிக்கப்படும் இதர கட்டணங்கள் என்னென்ன, எதற்கெல்லாம் அபராதம்
உண்டு என்பதையும் முன்பே தெரிந்துகொள்வது முக்கியம்.

p56b

செலுத்தும் தொகையைக் கூட்டிக் கொள்ளுங்கள்!

கடன் வாங்கியபிறகு நமக்கு ஊதிய உயர்வு, போனஸ் போன்றவை கிடைக்கலாம். அதனை செலவு செய்துவிடாமல் உங்களுடைய கடன் சுமையைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ள பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம்.

உங்களுடைய இஎம்ஐ, செலுத்தும் அசல் தொகையை உங்களுடைய வருமான உயர்வுக்கேற்ப அதிகப்படுத்திக் கொள்வது நல்லது.

இதன் மூலம் குறித்த காலத்துக்கு முன்பே கடனை முடித்துவிடலாம்.

நிதி ஆலோசகர் சுபாஷ் கூறியது போல, கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால், சரியான கடனை வாங்குவதன் மூலம் அதிக வட்டி சுமையைக் கொடுக்கும் தனிநபர் கடனிலிருந்து தப்பித்து வாழ்வை வளமாக்கிக் கொள்வதுதானே சாமர்த்தியம்!

எவ்வளவு கடன் இருக்கலாம்?

வருமானமும் மாத கடன் தவணையும்

வீட்டுக் கடன் – வருமானத்தில் 40% மிகாமல்

கார் கடன் – வருமானத்தில் 15% மிகாமல்

தனிநபர் கடன் – வருமானத்தில் 10% மிகாமல்

மொத்தக் கடன் – வருமானத்தில் 50% மிகாமல்

கடனுக்கு இன்ஷூரன்ஸ்!

”நீங்கள் வாங்கும் கடனுக்கு வங்கிகள், நிதி நிறுவனங்களால் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. அதற்கான பிரிமீயத்தை நீங்கள்தான் கட்ட வேண்டும். நீங்கள் இந்த இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு பதிலாக உங்கள் கடன்கள் அனைத்தையும் கணக்கிட்டு, அந்தத் தொகைக்கு ஒரு ரெகுலர் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. வங்கிகள் / நிதி நிறுவனங்கள் உங்களை இன்ஷூரன்ஸ் எடுக்க வற்புறுத்தினால், நீங்கள் எடுத்திருக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸை அவர்களிடம் காட்டுங்கள்” என்கிறார் நிதி ஆலோசகர் சுபாஷ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button