மருத்துவ குறிப்பு

நிமோனியாவை தடுத்து நிறுத்துவோம்!

நுரையீரலைப் பாதித்து சுவாசித்தலை சிரமப்படுத்தும் மிக முக்கிய நோய்த் தொற்று நிமோனியா. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் நிமோனியா பாதிப்பால் உயிரிழக்கின்றனர். ஆனால், இதை தவிர்க்கவும் தடுக்கவும் முடியும். நிமோனியா தொற்றானது நுரையீரலைப் பாதித்து, சுவாசிப்பதையே கடினமாக்கிவிடும். இதன் பாதிப்பு பலருக்கு சாதாரணமாக இருக்கலாம். சிலருக்கு, உயிரிழப்பைகூட ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

*சுவாசிக்கும்போது அல்லது இருமலின்போது நெஞ்சு வலி.

*பெரியவர்களுக்கு நினைவில் தடுமாற்றம் அல்லது மனநிலையில் மாற்றம்.

*சளியுடன் கூடிய இருமல்.

*சோர்வு, காய்ச்சல், குளிர்க்காய்ச்சல், வியர்வை.

*வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு.

*சுவாசத் திணறல்.

காரணம் என்ன?

பல வகையான கிருமிகள் நிமோனியாவை ஏற்படுத்தலாம். இருப்பினும், சுவாசக் குழாயை எளிதில் அடையும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் நிமோனியா ஏற்படுகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட சக்திவாய்ந்த கிருமிகள் தாக்கும்போது நோய் எதிர்ப்பு குறைந்துவிடுகிறது.

பாக்டீரியா: பொதுவாக காணப்படும் நிமோனியா பாதிப்பு பாக்டீரியா வகையைச் சார்ந்தது. ஸ்ட்ரெப்ட்டோக்காக்கஸ் நிமோனியா (Streptococcus pneumoniae) என்ற பாக்டீரியாவால் சளி, ஃபுளு காய்ச்சல் ஏற்படும்.

பூஞ்சை: நீண்ட காலம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தவர்களுக்கு இந்த வகை பாதிப்பு ஏற்படும். நீண்ட மூச்சு இழுக்கும்போது, சுற்றுச்சூழலில் உள்ள கிருமிகள் உள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

வைரஸ்: சில வகை வைரஸ் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு, ஃபுளு, சளி பிரச்னை ஏற்படும். இது நிமோனியாவை ஏற்படுத்தலாம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பிரச்னை ஏற்படலாம். இந்த வகை நிமோனியா, சிலருக்கு மட்டும் தீவிரமாக வெளிப்படலாம்.

பாதிப்புகள்

*சுவாசிக்க சிரமமாக இருப்பதால், போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் வெண்டிலேட்டர் என்கிற செயற்கை சுவாசம் கூட தேவைப்படலாம்.

*நுரையீரலில் நீர் கோத்து அதனால் சளிப் படிவம் உருவாகும். இதனால், நோய்த் தொற்று இன்னும் அதிகரிக்கலாம். எனவே, இந்த சளியை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தேவை எனில் சிறு அறுவைசிகிச்சை செய்தும் கூட சளி அகற்றப்படும்.

*நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்திய பாக்டீரியா, ரத்தத்தில் கலக்கும்போது அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால், உடல் உறுப்புகள் செயல்படாமல் போகலாம். செப்டிசீமியா என்ற பாதிப்பு மிகவும் அபாயகரமானது.

கண்டறிவது எப்படி?

நிமோனியா பாதிப்பு இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால், ரத்தம், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும். இதன் மூலம், எந்த மாதிரியான நோய்த் தொற்று என்பதையும் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தையும் கண்டறிய முடியும்.

பல்ஸ் ஆக்ஸிமெட்டரி பரிசோதனை மூலம், ரத்தத்தில் ஆக்சிஜன் எந்த அளவுக்கு உள்ளது எனக் கண்டறியலாம். நிமோனியா பாதிப்பு இருந்தால், சுவாசிக்க முடியாத காரணத்தால் ரத்தத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருக்காது. நுரையீரலில் இருந்து திரவம், சளியை எடுத்து, பரிசோதனை செய்வதன் மூலம் நோய்த் தொற்றைக் கண்டறியலாம்.

சிகிச்சை

ஆரம்பநிலையில் இருப்பவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறத் தேவையில்லை. சில வாரங்களில் சரியாகிவிடும். இவர்களுக்கு ஆன்டிபயாடிக், இருமலுக்கான மருந்து, காய்ச்சல் மற்றும் வலியைப் போக்கும் மருந்துகள் அளிக்கப்படும். நிமோனியாவை விரட்ட ஆன்டிபயாடிக் நல்ல சிகிச்சை. முன்னேற்றம் ஏற்பட்டதும் ஆன்டிபயாடிக் எடுப்பதை நிறுத்தக்கூடாது. இது, கிருமி வீரியம் பெறச் செய்துவிடும்.

சுவாசித்தலில் சிரமம் உள்ளவர்கள், செயற்கை சுவாசம் தேவைப்படுபவர்கள், இதயத் துடிப்பு 50-க்கு கீழ், அல்லது 100க்கு மேல் உள்ளவர்கள், உடல் வெப்பநிலை பாதிப்பு, சிறுநீரக செயல்திறன் குறைவு உள்ளிட்ட பிரச்னையுள்ளவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற நேரிடும்.pneumonia1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button