மருத்துவ குறிப்பு

டெங்குக்காய்ச்சலின் அறிகுறிகள் எவை? மருத்துவர்.S.கேதீஸ்வரன்

டெங்கு நோயை ஏற்படுத்தும் டெங்கு வைரஸ்ஆனது நான்கு வகைப்படும். இந்த வைரஸ் தொற்றும் போது இதற்கு எதிராக உடலில் பூரணமான ஏதிர்ப்புச்சக்தி உருவாவதில்லை. முதலாவது தரம் டெங்குக்காய்ச்சல் ஏற்படும்போது கடுமையான பாதிப்பு ஏற்படுவதில்லை. இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது தரம் ஏற்படும்போது
கடுமையான தாக்கம் ஏற்படும் இந்தப்பாதிப்புக்கு உடலின் நிர்ப்பீடனத்தொகுதியின் அதீத செயற்பாடே காரணமாகும்.

ஈடீஸ் நுளம்பானது டெங்கு நோய்வாய்ப்பட்ட ஒருவரைக் கடிக்கும் போது நுளம்பினுள் வைரஸ் கிருமிகள் குருதியுடன் செல்கின்றன. வைரஸ்கள் நுளம்பினுள் பெருகி ஒருகிழமையின் பின் இன்னொருவரைக் கடிக்கும் போது அவருக்கு டெங்கு தொற்றிக் கொள்கின்றது.

டெங்கு வைரஸ் தொற்றிய நுளம்பு இடும் முட்டைகளில் இருந்து வெளியேறும் நுளம்புகளும் டெங்கு நோயைப் பரப்புகின்றன. அது மட்டுமல்லாது நுளம்பின் முட்டைகள் பல மாத காலத்துக்கு வறட்யைத்
தாங்கி உயிர் பிழைக்கக்கூடியன. அதாவது இந்த மழைகாலத்தில் இடப்படும் முட்டைகள் அடுத்த மழைகாலத்திலும் பொரிக்கக்கூடிவை. இந்தகாரணங்களால் டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவது கடினமாகும்.

டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்தக் கூடிய வழிவகைகள் எவை?

ஈடீஸ் நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதே பிரதானமானதாகும் இரண்டாவதாக நுளம்பு கடிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும். நுளம்பு பெருகக்கூடிய இடங்களைக் கட்டுப்படுத்துவதானது சமுதாயத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டியதொன்றாகும்.

நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாவன

வீட்டு வளவிலுள்ள பழைய ரின்கள் யோகட்கோப்பைகள், பொலிதீன்போன்றவற்றை புதைத்து விடுதல் அல்லது எரித்துவிடுதல்
வாளிகள், கோப்பைகளைக் கவிழ்த்து வைத்தல்
அவற்றில் நீர்நிரம்பியிருந்தால்நீரைக் கவிழ்த்து ஊற்றுவது மட்டும்போதாது. அவற்றின் உட்புறச்சுவரில் ஒட்டியுள்ள முட்டைகளைத்துடைத்து அகற்றுதல்
வாய்க்கால், கூரைப்பீலி என்பவற்றை அடைத்து நீர்தேங்காதுபார்த்துக்கொள்ளுதல்.
பூச்சாடிகளிலுள்ள நீரை 2 நாளைக்கு ஒரு தடவை மாற்றுதலும் அதன் உட்புறத்தை துடைத்தலும்
குளிர்சாதனப் பெட்டியில் அடியிலுள்ள தட்டு, Ant trops என்பவற்றிலுள்ள நீரையும் இடைக்கிடை மாற்றுதல், நீரை மாற்ற முடி யாவிட்டால் உப்பு அல்லது சோப்கரசலைச் சேர்த்து விட்டால் நுளம்பு பெருகாது.
எல்லோரும் தத்தமது வீடுகளையும்காணிகளையும் சுத்தமாகவைத்திருக்க வேண்டும். குப்பைகளை பக்கத்திலுள்ள வெறுங்காணிக்குள் வீச வேண்டாம். நுளம்புகள் ஒரு மைல் தூரம் வரை பறக்கவலவை. எனவே நாம் மற்றவர்களின்காணியில் வீசிய குப்பைகளிலிருந்து பெருகிய நுளம்பு நம்மையே கடிக்கலாம்.
வீடுகள் மட்டுமன்றி நம் வேலைத்தளம், பிள்ளைகள் செல்லும் பாடசாலை, மேலதிக நேர வகுப்பு போன்றவற்றின் சூழல் பற்றியும் கவனம் செலுத்துங்கள்.

நுளம்பு கடிக்காமல் பாதுகாப்பது எப்படி?

ஈடீஸ் நுளம்புகள் பகலில் கடிப்பதனால் இரவில் நுளம்புவலையைப் பயன்படுத்துவதன் மூலம் பாது காக்க முடியாது. காலையிலும் மாலையிலும் நுளம்புகள் அதிகமாக உள்ள இடங்களைத் தவிருங்கள் கை நீட்டு சேட்களையும் நீண்ட காற்சட்சட்டைகளையும் அணிவதன் மூலம் நுளம்பு கடிப்பதைத் தடுக்கலாம் இறுக்கமான உடைகளை விட தளர்வான உடைகளே சிறந்தவை. வெளியே செல்லும்போது காலுறை, சப்பாத்து அணிவது மேலதிக பாதுகாப்பை அளிக்கும். நுளம்பைவிரட்டும் கிறிம்களையும் எண்ணெய்களையம் உபயோகிக்கலாம்.

டெங்குக்காய்ச்சலின் அறிகுறிகள் எவை?

மனிதர்களில் சில நூற்றுக்கணக்கான வைரஸ்கள் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. இவற்றில் சிலருக்கே டெங்குக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற ஆபத்தான காய்ச்சல்கள் ஏற்படுகின்றன. டெங்குக் காய்ச்சல் நோயாளிக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்புறம்நோ தசைநோ. மூட்டு நோ மற்றும் முதுகுநோ போன்றவை ஏற்படும். டெங்கு நோயாளிகள் எல்லோருக்கும் இறப்பு போன்ற பெரிய பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கே இத்தகையதாக்கம் ஏற்படும்.

பாரதூரமான டெங்குக்காய்ச்சலின் அபாய அறிகுறிகள்

தொடர்சியான வாந்தி மூக்கு முரசு போன்றவற்றிலிருந்து இரத்தக்கசிவு, வயிற்றுநோ. மூச்செடுக்க சிரமம், குருதி வாந்தி வயிறு வீங்குதல் தலைச்சுற்று சிறுநீர்குறைவாகப் போதல், அறிவு மயங்குதல் என்பன அபாய அறிகுறிகளாகும்.

காய்ச்சல் ஏற்பட்டஒருவர் என்ன செய்யவேண்டும்

ஆரம்ப நிலைகளில் டெங்குக் காய்ச்சலை சாதாரண வைரஸ் காய்சல்களிலிருந்து வேறுபடுத்தி அறிவது கடினமாகும். காய்ச்சல் ஏற்படும் 3ஆம்நாள் நீங்கள் மருத்துவரை அணுகி FullBlood Count எனப்படும் குருதிச் சோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்தச் சோதனையில் குருதிச்சிறுதட்டுக்களின் அளவு குறைவடைந்தால் அந்த மருத்துவரின் ஆலோசனையுடன் வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறலாம். உங்களுக்கு மேற்குறிப்பிட்ட அபாய அறிகுறிகள் ஏதுமிருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்குச்செல்லுதல் வேண்டும்.

கர்ப்பிணித்தாய்மார்கள், நீண்டகாலநோய்வாய்பட்டவர்கள் (இருதய சிறுநீரக நுரையீரல்) காய்ச்சல் ஏற்பட்ட முதல்நாளேவைத்தியரிடம் செல்லல் வேண்டும். காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு அதிக நீரிழப்பு ஏற்படும் என்பதால் அதிகளவு நீராகாரங்களை அருந்த வேண்டும். வளர்ந்த ஒருவர்(50kg) 2.5லிற்றர் நீராகாரங்களை ஒரு நாளைக்கு எடுக்க வேண்டும். நீரை விடகஞ்சி, சூப், இளநீர் நெல்லுப்பொரித் தண்ணிர் ஜீவனி போன்றவற்றை அருந்துவது நன்று சிவப்பு அல்லது மண்ணிற குளிர்பானங்களை அருந்த வேண்டாம். இவற்றை அருந்திய பின் வாந்தி எடுத்தால் இரத்த வாந்தி எடுத்தவரா என அறியமுடியாமல் போகலாம்.

வளர்ந்த ஒருவர் காய்ச்சலுக்கும் உடல் நோவுக்கும் பரசித்தமோல் வில்லைகளை 6 மணித்தியாலத்துக்கு ஒருதடவை எடுக்கலாம். இது தவிர Diclofenac lbuprofen போன்ற மாத்திரைகளை எக்காரணத்தைக் கொண்டும் எடுக்காதீர்கள்.

முடிவாக டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது என்பது முழுச்சமுதாயமும் உணர்ந்து செயற்பட்டால் மட்டுமே முடியக் கூடிய செயலாகும். எனவே எமது குழந்தைகளையும் உறவுகளையும் பாதுகாப்போம் என உறுதி பூணுவோமாக.

மருத்துவர்.S.கேதீஸ்வரன்
பொது மருத்துவ நிபுணர்.Dengue.Fever

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button