மருத்துவ குறிப்பு

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு ஜோடிகள் கவனிக்க வேண்டியவை… தவிர்க்க வேண்டியவை!

விவாகரத்து என்னும் உட்சபட்ச பிரிவு நிலையை நோக்கி நீதிமன்றப் படிகளை மிதிக்கும் தம்பதியர்களில்… காதல் திருமணம், பெற்றோரால் செய்துவைக்கப்பட்ட திருமணம் எனப் பாகுபாடுகளைக் கடந்த நிலைதான் நிலவுகிறது. இந்த விவாகரத்துப் பிரிவு நிலைக்கு பிரதானக் காரணம், தம்பதிகளுக்கு இடையே புரிதல் இல்லை என்பதுதான். திருமணத்துக்குப் பிந்தைய காலத்தைவிடவும், முன்பே ஜோடியினர் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டால், வாழ்க்கை இனிக்கும். அந்தப் புரிதலை நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடையிலான இடைவெளியில் கட்டாயம் பெறமுடியும் என்கிறார், உளவியல் நிபுணர், முனைவர் நப்பின்னை. அதற்காகத் தம்பதியர் செய்யவேண்டிய, செய்யக்கூடாத விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.

செய்ய வேண்டியவை!

* நிச்சயம் முடிந்த ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு இடைப்பட்ட காலத்தில், பால்ய கால நண்பர்கள் போல தங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்களை ஒளிவு மறைவின்றிப் பேசிப் பழகலாம். இதன் மூலம், ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். ஒருவருக்குப் பிடித்த விஷயங்களை மற்றொருவர் செய்யவும், பிடிக்காத விஷயங்களைத் தவிர்க்கவும் முடியும்.

* திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கைச் சூழல், வேலைச் சூழல், மனைவி வேலைக்குச் செல்வது, கூட்டுக் குடும்பமா… தனிக் குடும்பமா போன்ற விஷயங்களை முன்கூட்டியே பேசி சுமுக முடிவுகளை எடுக்க வேண்டும்.

* தாம்பத்ய விஷயங்களால்தான் இன்றைக்குப் பெரும்பாலான தம்பதியர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் உண்டாகின்றன. திருமணத்துக்குப் பின்பு, ஒரு குழந்தை போதும் என ஒருவரும், இன்னொரு குழந்தை வேண்டும் என மற்றொருவரும் முரண்பட்டு நிற்பது, இன்றைக்கு அதிகம். எனவே, வருங்கால தம்பதியர் முன்கூட்டியே இது குறித்துத் தெளிவாகப் பேசி, முடிவு எடுத்துக்கொள்வது நல்லது.

* பிறக்கும் நம் குழந்தையை எப்படி நல்ல முறையில் வளர்க்கலாம், எப்படி நாம் இருவருமே சுமுக முடிவுகளை எடுத்து நல்ல பெற்றோராக இருக்கலாம் என்பதைத் தெளிவுடன் பேசிவிடுவது நலம்.

* இருவருமே தங்கள் உறவினர்கள், நண்பர்களைப் பற்றி மற்றொருவரிடம் கூறியும் அறிமுகப்படுத்திவிடுவதும் நல்லது. குறிப்பாக, தங்களின் எதிர்பாலின நண்பர்களைப் பற்றியும் அவருடனான நல்ல நட்பையும் எடுத்துக்கூறி, வருங்கால வாழ்க்கைத் துணைக்கு தேவையற்ற சந்தேகம், அச்சம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* ஒருவர் மேல் ஒருவர் முழு நம்பிக்கையை வைக்க வேண்டும். ஒருவரிடம் இருக்கும் சிறு சிறு தவறுகளைப் பெரிதுபடுத்தாமல் பக்குவமாகவும் மென்மையாகவும் கையாண்டு, நல்வழிப்படுத்த வேண்டும். இதுதான் சிறந்த இல்லறமாகவும் வாழ்க்கைத் துணையாகவும் இருக்கும்.

* பெரிய அளவிலான உடல்நலப் பிரச்னைகள் ஏதாவது இருப்பின், அதை நிச்சயத்துக்கு முன்பே சொல்லி, பிரச்னையின் தன்மையை வாழ்க்கைத் துணையும் அவரது குடும்பத்தாரும் ஏற்றுக்கொண்டு நல்ல தீர்வை நோக்கிச் செல்லும் வகையில் செயல்பட வேண்டும். மாறாக, அப்பிரச்னையை மறைப்பது, எதிர்காலத்தில் தம்பதியரிடையே பெரிய பிரிவை ஏற்படுத்தலாம்.

* திருமணத்துக்குப் பின்னர் மேல்படிப்பு, வேலைக் காரணங்களால் யாரவது ஒருவர் மற்றொருவரை சில காலம் பிரியும் நிலை ஏற்பட்டால், அந்தச் சூழலை எப்படி ஆரோக்கியமாக எதிர்கொள்வது என்பதை முன்கூடியே தீர்மானிக்கலாம்.

* தம்பதியர் சார்ந்த எந்த ஒரு முடிவாக இருந்தாலும், இரண்டு பேருமே கலந்து ஆலோசித்து சுமுக முடிவுகளை எடுக்க வேண்டும். அவை ஆழமாக, அறிவுபூர்வமாகவும் இருப்பதே சிறந்தது.

காதல் ஜோடி

செய்யக் கூடாதவை!

* ‘நீயா? நானா?’ என்ற அதிகாரப் போக்கையும், ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்டே ஆகவேண்டும் என எதிர்பார்க்கவும் கூடாது. இருவருக்கும் சுதந்திரமான முடிவெடுக்கும்… நடந்துகொள்ளும் சூழல் இருக்க வேண்டும்.

* மத, கடவுள் நம்பிக்கை மாதிரியான விஷயங்களில் ஒருவரை இன்னொருவர் கட்டாயப்படுத்தி, கருத்துத் திணிப்புகளைச் செய்யக் கூடாது.

* தம்பதியர் தங்களுக்குள் நடக்கும் எந்த ஒரு பிரச்னையையும் விளையாட்டாகவோ, சீரியஸாகவோ நம்மிடம் உண்மையான அக்கறை இல்லாத மூன்றாம் நபரிடம் சொல்லக் கூடாது. அத்தகைய மூன்றாம் நபர் கூறும் கருத்துகளால் பிரச்னை பெரிதாகலாம். தமக்குள் பேசித் தீர்க்க முடியாத சிக்கலாக இருப்பின், உண்மையான அக்கறைகொண்ட பெற்றோர், நெருங்கிய நண்பர்களிடம் பேசி, தீர்வுகாண வேண்டும்.

* எந்தச் செயல்பாட்டையும் சண்டையாகப் பார்க்கும் மனப்பான்மையை வளர்க்கக் கூடாது. ஒருகட்டத்தில் பிரச்னை பெரிதாக வளர்கிறது எனத் தெரியவந்தால், யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும். நீயா நானா என்பதல்ல திருமணப் பந்தம். இருவருக்குமே விட்டுக்கொடுக்கும் எண்ணம் இருக்க வேண்டியது கட்டாயம்.

* முதிர்ச்சியற்ற சிறு வயதுப் பருவ எதிர்ப்பாலின காதல் பழக்கங்கள், ஆசைகள் போன்ற விஷயங்களை அடிக்கடி வாழ்க்கைத் துணையிடம் சொல்லக் கூடாது. கல்லூரி, வேலைச் சுழலில் காதல் இருந்து, முழுமையாக விலகியிருந்தால், அதனைப் பக்குவமாக வாழ்க்கைத் துணையிடம் சொல்லிவிட வேண்டும்.

* திருமணத்துக்கு முன்பு நட்பு ரீதியாக, வாழ்க்கைத் துணை என்ற புரிதலுடன் பழகலாம். ஆனால், அது வரம்புக்குட்பட்ட பழக்கமாக இருக்க வேண்டும். தனி மனித ஒழுக்க கோட்பாடுகளை சீர்குலைக்கும் வகையில், திருமணத்துக்கு முன்பே உடலுறவுகொள்வது போன்ற செயல்பாடுகளைச் செய்யக் கூடாது. C7Z3bV9WwAA6hOD 10249

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button