இளமையாக இருக்க

சைக்கிள் ஓட்டினால் இளமையாகத் தெரிவோம்!

மும்பையின் மூலை முடுக்குகளில் எல்லாம் அநாயாசமாக சைக்கிளில் வளைய வருகிற ‘சைக்கிள் ஃபிரோஸா’வுக்கு 43 வயது. முன்னணி வர்த்தக நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பெரிய பொறுப்பில் இருப்பவர். கப்பல் மாதிரியான காரும், அதற்கொரு டிரைவரும் வைத்துக்கொள்ளும் அந்தஸ்தில் இருந்தாலும், தினசரி சைக்கிளிலேயே வேலைக்கு வந்து செல்கிறார் ஃபிரோஸா. அதுதான் அவரது விருப்ப வாகனமாம்!

‘`சின்ன வயசுலேருந்தே எனக்கு சைக்கிள் ஓட்டப் பிடிக்கும். 8 வயசுல சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டேன். சொந்தமா சைக்கிள் வாங்கிக் கொடுக்கிற அளவுக்கு அப்பாவுக்கு வசதி இல்லை. அரை மணி நேரத்துக்கு 50 பைசா வாடகையில சைக்கிள் கிடைக்கும். சைக்கிள் ஓட்ட ஏதாவது காரணம் வேணுமேனு, நானா வலியப் போய் அம்மாகிட்ட ஏதாவது வேலை இருக்கானு கேட்டு வாங்கிச் செய்வேன். தெருக்களைச் சுத்தி வருவேன்.

கொஞ்சம் வளர்ந்ததும் செகண்ட் ஹேண்ட் சைக்கிள் கிடைச்சது. எப்பவேணா சைக்கிள் ஓட்டலாம்னு ஒரு சின்ன சந்தோஷம் சேர்ந்தது. அப்ப நான் நிறைய பசங்களுக்கு சைக்கிள்லயே போய் ட்யூஷன் எடுத்திட்டிருந்தேன். ட்யூஷன் எடுத்துச் சேர்த்த பணத்துல முக்கால்வாசி பணத்தை அம்மாகிட்ட செலவுக்குக் கொடுத் துட்டு, மிச்சத்தை எனக்கு சைக்கிள் வாங்க சேர்த்து வைப்பேன். அப்படி சேர்ந்த பணத்துல
புது சைக்கிள் வாங்கினேன். அந்த நாளை வாழ்க்கையில மறக்க முடியாது…” – சிலிர்க்கிற ஃபிரோஸாவுக்கு சிறுவயது ஆர்வம் இன்று வரை சிறிதும் குறையாதது ஆச்சர்யம்!

“சைக்கிள் ஓட்டறதை சுவாரஸ்யமா மட்டுமே பார்த்த எனக்கு அதுல சவால்களும் வரும்னு எதிர்பார்க்கலை. காலேஜுக்கு சைக்கிள்ல வந்த ஒரே பெண் நான்தான். வீட்ல அக்காவுக்கு கல்யாணம் பேச ஆரம்பிச் சாங்க. அக்கம்பக்கத்துல இருந்தவங்க, நான் இனிமேலும் சைக்கிள்ல சுத்தறது சரியா வராதுனு சொல்லவே, அம்மாவும் என்னை சைக்கிள் ஓட்டறதை நிறுத்தச் சொன்னாங்க. ஓவரா சைக்கிள் ஓட்டினா கல்யாணம் ஆகி, குழந்தை பெத்துக்கிறதுல சிக்கல் வரும்னு பயந்தாங்க. அது மட்டுமா… ஜீன்ஸ் போடவும் தடை போட்டாங்க. சல்வார் கமீஸ், துப்பட்டாவுலயும் என்னால சைக்கிள் ஓட்ட முடியும்னு நிரூபிச்சேன். என்ன பண்ணினாலும் என் சைக்கிள் ஆர்வத்தை நிறுத்த முடியலை.

அந்த வயசுல என்னோட கனவெல்லாம் சைக்ளத்தான் போட்டியில கலந்துக்கிறதா மட்டும்தான் இருந்தது. சைக்ளத்தான்ல ஏழரை கிலோ மீட்டர் ரன்னிங், 30 கி.மீ சைக்கிளிங் மறுபடியும் 7.5 கி.மீ ஓட்டம் இருக்கும். அதுல கலந்துக்கப் போறதா சொன்னபோது எங்கம்மாவுக்கு நம்பிக்கையே இல்லை. சைக்ளத்தான்ல கலந்துக்கணும்னா டி-ஷர்ட்டும், ட்ராக் பேன்ட்டும் வேணும். என்கிட்ட அதுகூட இல்லை. ஒவ்வொண்ணையும் ஒவ்வொருத்தர்கிட்ட கடன்வாங்கிட்டு போனேன். சைக்ளத்தானை வெற்றிகரமா முடிச்சிட்டேன்னு வந்து சொன்னபோது எங்கம்மா நம்பவே இல்லை. அது மட்டு மில்லாம அந்த ஈவென்ட்டுல நான் நாலாவதா வந்து இன்னொரு சர்ப்ரை ஸையும் கொடுத்தேன்…” – நினைத்தது நிறைவேறிய மகிழ்ச்சி அனுபவத்துடன், தனது சைக்கிள் பயணக் கதையைத் தொடர்கிறார்.

‘`படிப்பை முடிச்சதும் பெரிய கம்பெனியில சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்ல வேலை கிடைச்சது. வீட்லேருந்து ஆபீஸ் 12 கிலோ மீட்டர்… முதல்ல ட்ரெயின்லதான் போயிட்டு வந்திட்டிருந்தேன். ட்ரெயின்ல பயங்கர மான கூட்டம் இருக்கும். வேற வழியில்லாம ட்ரெயின்ல போயிட்டு வந்தாலும், வேலை முடிஞ்சு வந்ததும் எல்லா இடங்களுக்கும் சைக்கிள்லயே சுத்துவேன். 96-ல எனக்கும் சுரேஷுக்கும் கல்யாணமாச்சு. தானேலேருந்து ஜுஹு ஏரியாவுக்கு வந்தோம். கல்யாணம், குழந்தை, மறுபடி வேலைக்கு என்னைத் தயார்படுத்திக்கிறதுனு இருந்ததுல சில வருஷங்கள் சைக்கிள் ஓட்ட முடியலை.

2010-ல நடிகர் சல்மான்கான், ‘பீயிங் ஹ்யூமன் மும்பை சைக்ளத்தான்’னு ஒரு நிகழ்ச்சியை பிரபலப்படுத்தினார். அதுல எப்படியாவது கலந்துக்கிட்டு, மறுபடி என் சைக்கிள் ஆர்வத்தைப் புதுப்பிக்கணும்னு நினைச்சேன். புது சைக்கிள் வாங்கினேன். அந்த சைக்ளத்தான் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டதுனு சொல்லலாம். சைக்கிள் ஆர்வலர்களோட அறிமுகமும் நட்பும் கிடைச்சது.

ஒரு கட்டத்துல வேலைக்கும் சைக்கிள்லயே போறதுனு முடிவு பண்ணி னேன். சுற்றுச்சூழலைக் காப்பாத்தணும்… மாசைக் கட்டுப்படுத்தணும்கிற மாதிரி யான எந்த எண்ணமும் அப்போ எனக்கு இல்லை. என்னோட சுதந்திரத்துக்காக மட்டும்தான் சைக்கிள்ல வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். சைக்கிள் ஓட்டற வங்களோட பெரிய சவால்னா சாலைகள்.

பல ஊர்கள்லயும் சைக்கிளுக்கான தனிப்பாதைகள் கிடையாது. பார்க்கிங் வசதி கிடையாது. நான் அதைப் பத்தியெல்லாம் கவலைப்படலை. ‘ஸ்மார்ட் கம்யூட் ஃபவுண்டேஷன்’ சார்பா ‘சைக்கிள் 2 வொர்க்’னு ஒரு குழுவை ஆரம்பிச் சேன். இதுல உறுப்பினர்களா இருக்கிறவங்க, மாசத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகள்ல சைக்கிள்ல தான் வேலைக்குப் போகறதைப் பின்பற்றுவாங்க.

சைக்கிள்ல வேலைக்குப் போக ஆரம்பிச்ச புதுசுல என்னைக் கடந்து போறவங்க ‘எப்படிப் போறீங்க… டயர்டா இல்லையா’னு கேட்டிருக்காங்க. ‘நீங்க இந்த அனுபவத்தை ட்ரை பண்ணியிருக் கீங்களா?’னு கேட்பேன். ஆமாம்… அனுபவிச்சாதான் அந்த சந்தோஷம் புரியும். சைக்கிள் ஓட்டறது சூழலுக்கு ஆரோக்கியமானது. தவிர சைக்கிள் ஓட்டிப் பாருங்க. 5, 10 வயசு இளமையா தெரிவீங்க.. உங்களையும் அறியாம, ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவீங்க… இன்னும் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்” என்கிற ஃபிரோஸா, வேலைக்குச் செல்வதற்கென ஃபோல்டிங் சைக்கிள் ஒன்றை வாங்கியிருக்கிறார். விலை ரூபாய் 40 ஆயிரம்!
‘`எங்க வேணா கொண்டு போக லாம். நடக்க வேண்டிய, படி ஏறி இறங்க வேண்டிய இடங்கள்ல இந்த சைக்கிளை மடக்கி தூக்கிட்டுப் போயிடலாம். பார்க் பண்றதும் சுலபம்…” என்கிறவருக்கு தன்னுடைய முயற்சியில் மும்பையை ‘பைசைக்கிள் ஃப்ரெண்ட்லி’ நகரமாக மாற்றியதில் பெருமை.

‘`இந்தியாவையே பை சைக்கிள் ஃப்ரெண்ட்லி நாடா மாத்தணும்… அதுதான் அடுத்த லட்சியம்!”

– சபதம் செய்கிறார் சைக்கிள் காதலி!71p1

Related Articles

One Comment

  1. இளமை திரும்ப முடியாது…மனதளவில்..எண்ணங்களையும்..செயல்களிலும்..நல்லவிதமாக.. இருந்தால் போதும்…. வயதிற்கு ஏற்ற உடல் பயிற்சி இருந்தால்.. நல்லது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button