மருத்துவ குறிப்பு

பெண்கள் உத்வேகத்துடன் பணியாற்ற நிறுவனங்கள் செய்ய வேண்டியவை

அலுவலகப் பணி மற்றும் குடும்பப் பொறுப்பு இரண்டையும் சரிசமமாக கவனிப்பது பெண்களுக்கு மிகவும் கடினமான விஷயம்தான். நம்முடைய தினசரி அலுவல்கள் அதிகமாகிக் கொண்டே போகும் இந்தக் காலகட்டத்தில் ஏதாவது ஒன்றை இழந்துதான் இன்னொன்றில் கவனம் செலுத்த முடிகிறது. இரண்டையும் சமநிலையில் வைத்துப் பார்ப்பது இயலுமா? பணியாளர்களின் பங்கு மட்டுமில்லாமல், இதில் நிறுவனங்களின் பங்கும் மிகவும் இன்றியமையாதது.

அலுவலகப் பணி மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டையும் பார்க்கும்போது அலுவலகப் பணியினால் வரும் மனஅழுத்தம் குடும்பம், நண்பர்கள், உறவினர்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதேபோல குடும்பப் பிரச்னை அலுவலகப் பணியை பாதிக்கக்கூடாது. இப்போதெல்லாம் அலுவலகம் செல்பவர்கள் தங்கள் வாழ்க்கை தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் முனைப்பாக இருக்கிறார்கள்.

அதனால் தங்களது அலுவலகப் பணி இப்படித்தான் அமைய வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை கொள்கிறார்கள். தங்களது முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு தகுந்தாற்போல வேலை நேரத்தை மாற்றிக்கொள்ளவும் நினைக்கிறார்கள். அலுவலகம் அதிக தூரத்தில் இல்லாமலிருக்க வேண்டும் என்பதிலிருந்து மனதிற்கு பிடித்த வேலையாக இருக்க வேண்டும் என்பதுவரை தங்கள் விருப்பப்படி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

தங்களது வயது, வேலை பார்க்கும் இடத்தின் தன்மை, புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் திறன் எல்லாம் இந்தப் பட்டியலில் வருகிறது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரே வேலையில், ஒரே இடத்தில் இருக்க விரும்புவார்கள். குழந்தைகளின் படிப்பு அவர்களுக்கு முக்கியம். அடிக்கடி ஊர் மாற்றுவது இயலாத ஒன்று. ஆனால், திரு
மணம் ஆகாதவர்கள், சின்ன வயதுக்காரர்களுக்கு நிறைய ஊர்களைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் நிறைய இருக்கும்.

வெளிநாடுகளுக்குப் போகவும் தயங்கமாட்டார்கள். எந்த வயதுக்காரர்கள் ஆனாலும் வீடு, வீட்டின் அமைதி மிகவும் முக்கியம், இல்லையா? அதனால் எல்லோருமே குடும்பப் பொறுப்பு+அலுவலகப் பணி இரண்டையும் சமமாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அலுவலகப் பணி+குடும்பப் பொறுப்பு சமநிலை ஏன் முக்கியம்? தங்கள் வாழ்க்கையை சரியான விகிதத்தில் அமைத்துக் கொண்டு குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்பவர்கள், அலுவலகப் பணியிலும் தகுந்த கவனம் செலுத்தி, கூட வேலை செய்பவர்களுடன் ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்வதாக ஓர் ஆராய்ச்சி சொல்லுகிறது.

அலுவலகப் பணியை, அது கொடுக்கும் மனஅழுத்தத்தை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வீட்டிற்குச் செல்லும்போது வீட்டில் அவர்களுடைய செல்வாக்கு அதிகரிக்கிறது. வீட்டில் அமைதி நிலவும்போது ஊழியர்களால் அலுவலகத்தில் திறமையாகவும், உற்சாகமாகவும் பணியை முடிக்க முடிகிறது. இதனால் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன் அலுவலர்களிடையே நிலவும் எதிர்மறை எண்ணங்களும் குறைகின்றன என்று மேற்சொன்ன ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

பணியாளர்களின் சொந்த வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனங்கள் பணியாளர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெறுகின்றன. அங்கு தொடர்ந்து பணிபுரிய அவர்கள் விரும்புகிறார்கள். விலக விரும்புவதில்லை. நிறுவனங்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கின்றனர். இது நிறுவனங்களுக்கும் ஒரு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுப்பதுடன் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது போன்ற வேலைகள் குறைகின்றன.

அலுவலகத்தில் திறமையாளர்கள் அதிகரிக்கின்றனர். அவர்களிடையே நிலவும் பாசிடிவ் எண்ணங்கள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. குறிப்பாக பெண் பணியாளர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்வது, குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் சேவை முதலியவை மிகவும் அவசியம். நிறுவனங்கள் எந்த வகையில் அலுவலகப் பணி+குடும்பப்
பொறுப்பு சமநிலையை வளர்க்க உதவலாம்? உடற்பயிற்சி நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் வகையில் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும் விஷயங்களில் உடற்பயிற்சி முதலிடத்தை வகிக்கிறது.

ஒவ்வொரு திடகாத்திரமான மனிதனுக்கும் ஒரு நாளைக்கு 30 நிமிட உடற்பயிற்சி தேவை. உடற்பயிற்சி நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு உடம்பு சரியில்லை என்ற காரணத்தைக் காட்டி விடுமுறை எடுத்துக் கொள்வது குறைகிறது. உடற்பயிற்சி செய்வது நமது சந்தோஷ ஹார்மோன்களை அதிகம் சுரக்க வைக்கிறது. செரட்டோனின் என்கிற ஹார்மோனுக்கு ‘சந்தோஷ ஹார்மோன்’ என்று பெயர். இது அதிக அளவில் உற்பத்தி ஆவதால் நம் மனஅழுத்தம் குறைகிறது.

ஒவ்வொரு நிறுவனத்திலும் உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்து பணியாளர்கள் அதை பயன்படுத்த நேரத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம். அல்லது நிறுவனத்தின் வெளியே உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்ல விரும்பினால் நிறுவனத்தின் மூலம் அங்கத்தினர் ஆக உதவுவதுடன் தள்ளுபடி கூப்பன்களும் கிடைக்க வழி செய்யலாம். பணியாளர்களுக்கு ஆரோக்கியத்தைக் காட்டும் கருவிகளை பரிசளித்து அவர்களிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்பட உதவலாம். தினமும் 10,000 அடிகள் நடப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.

இதைச்செய்ய பணியாளர்களை உற்சாகப்படுத்தலாம். அறக்கட்டளைகள் சார்பாக நடக்கும் மாரத்தான் ஓட்டப்
பந்தயங்களில் பங்கெடுக்க பணியாளர்களை ஊக்குவிக்கலாம். குழந்தையை பார்த்துக்கொள்ளும் சேவை அலுவலகம் செல்லுபவர் என்பதால் பெண்களுக்கு குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு விட்டுப்போவதில்லை. நிறுவனம் இந்தச் சேவையைச் செய்வதால், இருவருக்குமே பயன் கிடைக்கிறது. அலுவலகத்தின் ஒரு பகுதியிலேயே நம் குழந்தையும் பத்திரமாக இருக்கிறது என்ற நினைவே பெண்களுக்கு மிகுந்த மனஅமைதியைக் கொடுக்கும். அவர்களது வேலைத்திறன் மேம்படும்.

நிறுவனங்கள் பெண் பணியாளர்களின் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் சேவையை செய்யலாம். நம்பகமான ஆட்களை நியமித்து குழந்தைகளை பார்த்துக் கொள்வதால் பல நன்மைகள் நிறுவனங்களுக்கும், பணியாளர்களுக்கும் கிடைக்கின்றன. வீட்டில் ஆட்களை பணியில் அமர்த்தி குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பெண்களுக்கு அலுவலகம்+வீடு இரண்டு இடங்களிலும் மனஅழுத்தம் கூடுகிறது. ஒருநாள் குழந்தையை பார்த்துக்கொள்ளும் ஆயா வரவில்லை அல்லது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அந்த பெண் படும்பாடு! வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் அவஸ்தை.

நிறுவனத்தின் உள்ளேயே குழந்தையை பார்த்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை என்றால் நிறுவனத்தின் அருகிலேயே இருக்கும் குழந்தையை பார்த்துக்கொள்ளும் சேவை மையத்திற்கு நிறுவனத்தின் மூலம் தள்ளுபடி விலையில் ஏற்பாடு செய்து கொடுக்கலாம். அதேசமயம் பெண் பணியாளர்களின் வேலை நேரங்களை எளிதில் பின்பற்றத்தக்க வகையில் மாற்றியமைத்துக் கொடுக்கலாம்.

உடம்பு சரியில்லாத குழந்தையை பள்ளிக்கூடத்திலிருந்து சீக்கிரம் அழைத்துவருதல், குழந்தையை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வருதல், மாலையில் அழைத்து வருதல் போன்ற நேரங்களை பணியாளர்களின் வசதிக்கேற்ப அவர்கள் அமைத்துக்கொள்ள அனுமதி கொடுக்கலாம். இவை எல்லாமே நிறுவனத்தின் உற்பத்தித் திறனை குறைக்காத வகையில் அமைய வேண்டும். வார இறுதிகளில் வெளியே செல்லுதல்ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள இந்த வெளியே செல்லுதல் மிகச்சிறந்த வழி.

பணியாளர்கள் தங்களுடன் பணிபுரிபவர்கள் பற்றிய சிறந்த கண்ணோட்டத்தை இந்த வெளியே செல்லுதல் உருவாக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியாக இருப்பவர் உண்மையில் நல்ல ஒரு தோழனாக மாறக்கூடும் இந்தச் சந்திப்புகள் மூலம் வேலைநேரத்தில் மட்டுமே அவர் மேலதிகாரி மற்ற சமயங்களில் நமது நல்வாழ்வை நாடுபவர் அவர் என்பதை அவர் கீழ் வேலை செய்பவர்கள் உணரலாம். மேலதிகாரி, அவர் கீழ் வேலை செய்பவர்கள் என்பதை மறந்து எல்லோரும் கூடி மகிழ்ந்து வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவது இருசாராருக்கும் இடையில் நல்லெண்ணத்தை ஊக்குவிக்கும்.

அலுவலகம் ஏற்பாடு செய்யும் குதூகலமூட்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், விருந்துகள், விடுமுறைக் கொண்டாட்டங்கள் இவை பணியாளர்களை உற்சாகப்படுத்தும். இவை எல்லாமே பெரிய அளவில் நடைபெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்தந்த துறை சார்ந்தவர்கள் மட்டுமே கூட இதுபோல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். வருடம் ஒருமுறை நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வெளியே சந்தித்து மகிழலாம்.

மாதத்தில் ஒரு நாள் பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து உணவு வகைகளை கொண்டு வந்து எல்லோருடனும் பங்கு போட்டு உண்ணலாம். இவை எல்லாமே பணியாளர்களிடையே நெருக்கத்தை உருவாக்கும் விஷயங்கள். குழந்தை
களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பெற்றோர்களின் திருமணநாள், பிறந்தநாள் இவற்றை எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்து விடுவதால் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளவும் முடியும்.

நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இந்த வசதிகளும் வாய்ப்புகளும் உங்களுக்கு இல்லாவிட்டால், அவற்றை நிறைவேற்றித் தருமாறு உங்கள் நிறுவனத்தில் வலியுறுத்தவும் தயங்காதீர்கள். தொடர்ந்து இதுபற்றிப் பேசுவோம் தோழிகளே..!Working Women Tackle Work Life Balance

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button