மருத்துவ குறிப்பு

வெயில் வெப்பம் தணிக்கும் எண்ணெய் குளியல்..செய்யவேண்டியதும் தவிர்க்கவேண்டியதும்.!

எண்ணெய் குளியல் என்றதுமே தீபாவளி பண்டிகைதான் நினைவில் வரும். எண்ணெய்க குளியல் ஆண்டுக்கு ஒருமுறை செய்வதல்ல. வாரத்துக்கு ஒருமுறையாவது செய்ய வேண்டும். குறிப்பாகக் கோடைக் காலங்களில் எண்ணெய்க் குளியல் மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. வெறும் சூடு தணிக்கவும், கூந்தலின் வேர்கள் உறுதியாக இருக்கவும் மட்டுமே எண்ணெய்க் குளியல் பயன்படுவதில்லை. அதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.

எண்ணெய் குளியல்

எண்ணெய்க் குளியல் செய்தால் நம்மைச்சுற்றி கண்களுக்குத் தெரியாத ஒரு வளையம் தோன்றுமாம். அவை கோள்களிருந்து வெளியேறும் காந்த அலைகளை நம் உடலுக்குள் நுழையவிடாமல் பாதுகாக்கக்கூடியது என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. யதார்த்தம் இப்படியிருக்க, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை குறித்துச் சித்த மருத்துவர் இரத்தின சக்திவேலிடம் கேட்டோம். அவர் கூறும் தகவல்கள் இதோ…

நம் முன்னோர், நோய் உடலை அண்டாமல் காப்பதுடன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய வழிகளைப் பின்பற்றினர். அவற்றில் சக்திவேல்முக்கியமானதாக எண்ணெய்க் குளியலைச் சொல்லலாம்.. ஒரு ஸ்பூன் எண்ணெயை உச்சந்தலையில் தேய்த்து உடனே ஷாம்புவால் தலையை அலசுவது என்பது எண்ணெய்க்குளியல் அல்ல. அதற்கும் ஒரு சில வழிமுறைகள், நேரம், காலம் உண்டு. அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே முழுப்பலனை அடைய முடியும்.

எண்ணெய் குளியல் வகைகள்:

தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்க்க வேண்டும். பின்பு சீயக்காய், மூலிகை ஷாம்பு ஆகியவற்றால் மட்டுமே தலையை அலச வேண்டும். தலைக்கு எண்ணெய் தேய்க்க நேரம் இல்லாவிட்டால் உடலுக்கு மட்டும் தேய்த்துக் கொள்ளலாம். முடிந்தால் புற்று மண்ணைத் தேய்த்தும் குளிக்கலாம். இதனால் உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருவதோடு, சருமமும் பொலிவாக இருக்கும்.

எந்த எண்ணெய் சிறந்தது?

இது வெயில் காலம் என்பதால், நல்லெண்ணெயை தேய்த்துக் குளிக்க உடல் சூடு தணியும். ஒரு சிலர் நல்லெண்ணெயில் மிளகு, பூண்டு, சீரகம் சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்ப்பார்கள். இம்முறையைக் குளிர்காலங்களிலும் சளி, இருமல், சைனஸ் போன்ற பிரச்னைகள் இருக்கும்போது மட்டுமே செய்ய வேண்டும். கோடைக் காலத்தில் இம்முறையைப் பின்பற்றினால், சூட்டை தணிப்பதற்குப் பதிலாகச் சூட்டை அதிகப்படுத்திவிடும்; தேவையற்ற உடல் உபாதைகள் உண்டாகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இயற்கை அரப்பு:

சீயக்காய் – 100 கிராம்
பச்சைப்பயறு – 100 கிராம்
பூந்திக்கொட்டை – 25 கிராம்
ஆவாரை இலை – 25 கிராம்.

இந்த நான்கும் சேர்ந்த கலவையில் நமக்குத் தேவையான அளவு தண்ணீர் அல்லது சாதம் வடித்த கஞ்சியில் சேர்த்துக் கலந்து தலையில் பூசி நன்றாக அலச வேண்டும். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த அரப்பு, உடல் சூட்டைத் தணித்து, சருமத்தைப் பாதுகாக்கும்.

பலன்கள் :

உடல் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சியை உண்டாக்கும்.

உடல் வலி, உடல் சோர்வு நீங்குவதோடு ஆயுள் அதிகரிக்கும்.

சிரங்கு, புண் போன்ற தோல் தொடர்பான நோய்கள் நீங்கும்

சருமத்திலுள்ள ஈரத்தன்மையைத் தக்கவைப்பதால் முகம் மட்டுமல்ல… உடலும்கூடப் பொலிவாகவும் இளமையாகவும் காணப்படும்.

உப்புசத்து அதிகமாகும்போது வரக்கூடிய உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

உடலில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கும்.

மலச்சிக்கல் நீங்கும்.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலிலுள்ள நச்சுகள் வெளியேறி உடல்பருமன் குறைய வாய்ப்பு உள்ளது.

எண்ணெய் குளியலுக்குச் சிறந்த தினம்:

எண்ணெய் குளியல்

தீபாவளி பண்டிகையின்போது எண்ணெய் குளியல் கட்டாயம் என்கிறது, சாஸ்திரங்கள்.

பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக் குளிக்க வேண்டும் என்கிறது. இதற்குக் காரணம் உண்டு, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். பொதுவாக அன்றைய தினங்களில் பெண்களும் அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதம் மேற்கொள்வார்கள்.

சடங்குகள், திருமணங்கள் போன்ற மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வாக எந்த வேலையும் செய்யாமல் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

கவனம்:

சூரியன் உதிக்கும்போதே எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இல்லையென்றால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் உண்டாகும்.

எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் வெயில் படும்படி வெளியே சென்றால் உடல் கருமை நிறமாகும். எனவே அன்றையநாள் முழுவதும் வெயிலில் செல்லாமல் வீட்டில் ஓய்வாக இருப்பது மிகவும் நல்லது. ஆனால் பகல் தூக்கம் கூடாது.

சீரகத் தண்ணீர், மோர், இளநீர், உணவுடன் நெய் சேர்த்துச் சாப்பிடுவது, ஆப்பிள், உலர் பழங்கள், காய்கறிகள், தேங்காய், கூழ் வகைகள் போன்ற எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டும் நாம் சாப்பிட வேண்டும். மருந்துக்குழம்பு மிகவும் நல்லது.

தயிர், புளிப்பான உணவுகள், பழைய உணவுகள், இறைச்சி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அன்றையநாள் முழுவதும் புகை, மது, உடலுறவு கூடாது.

hi 13241

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button