கர்ப்பிணி பெண்களுக்கு

முத்துப்பிள்ளை கர்ப்பம்

கர்ப்பத்தைப் போலவே அறிகுறிகள் காட்டி, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி, கடைசியில் கவலையில் ஆழ்த்தும் முத்துப்பிள்ளை கர்ப்பம் பற்றிய அறிமுகத்தைக் கடந்த இதழில் பார்த்தோம். அதன் அறிகுறிகள், கண்டுபிடிக்கிற வழிகள் மற்றும் தீர்வுகள் பற்றித் தொடர்ந்து பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ராஜஸ்ரீ.

அறிகுறிகள்…

எல்லா கர்ப்பத்தையும் உறுதி செய்கிற முதல் அறிகுறியான மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் முத்துப்பிள்ளை கர்ப்பத்திலும் இருக்கும். அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கும். முத்துப்பிள்ளை கர்ப்பமாக இருந்தால் இந்த வாந்தியும், மயக்கமும் அதிகமாவதுடன், 90 முதல் 95 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தப் போக்கும் ஏற்படும். அதனால் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுவார்கள்.

சில பெண்களுக்கு ரத்தப் போக்குடன் திராட்சை மாதிரியான குட்டித் திசுக்களும் வெளியேறும். சில பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவு கூடும். ஹைப்பர் தைராய்டு ஏற்பட்டு, அதன் அறிகுறிகளான அதிக களைப்பு, அதிக வியர்வை போன்றவையும் இருக்கலாம்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின் கர்ப்பப்பை, சாதாரண கர்ப்பம் தரித்ததை விட மிகப் பெரியதாக இருக்கும். அதாவது, மாதவிலக்கு தள்ளிப் போனதில் இருந்து கணக்கிட்டால் கர்ப்பப் பை இருக்க வேண்டிய அளவைவிட, அதிகப் பெரிதாக இருக்கும்.
ரத்தப் பரிசோதனையின் மூலம் கர்ப்பம் தரித்த பின் வருகிற ஹெச்.சி.ஜி. ஹார்மோன் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அடுத்து ஸ்கேன் செய்து அதை உறுதிப்படுத்தலாம். சினைப்பையின் இரண்டு பக்கங்களிலும் கட்டிகள் இருக்கலாம்.

தீர்வுகள்…

ஹெச்.சி.ஜி. ஹார்மோன் அளவுகளை சரி பார்த்ததும், ரத்தசோகைக்கானசோதனையும், நெஞ்சுப் பகுதிக்கு ஒரு எக்ஸ் ரேவும் எடுக்க வேண்டியிருக்கும். முத்துப்பிள்ளை கர்ப்பத் திசுக்கள் அங்கே பரவியிருக்கிறதா என்பதை அறியவே இந்தச் சோதனை. அந்தத் திசுக்கள் நுரையீரல் உள்பட உடலில் எங்கேவேண்டுமானாலும் பரவலாம். அடுத்து ‘வாக்குவம் ஆஸ்பிரேஷன்’ என்கிற முறையில் அந்தக் கருவை வெளியே எடுப்பதுதான் தீர்வு.

இந்த அறுவை சிகிச்சையின் போது ரத்த இழப்பு அதிகமிருக்கும் என்பதால் தேவையான ரத்தத்தைத் தயாராக வைத்துக்கொண்டே செய்யப்படும். கர்ப்பப்பை சுருங்கவும் மருந்துகள் கொடுக்கப்படும். கர்ப்பம் அசாதாரணமாக வளர்ந்துவிட்டது…. கர்ப்பிணியின் வயதும் அதிகம் என்கிற நிலையில், எதிர்காலத்தில் கருத்தரிக்கிற எண்ணம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, கர்ப்பப்பையையும் சேர்த்தே அகற்ற வேண்டி வரும்.

கர்ப்பத்தை அறுவையின் மூலம் அகற்றி விடுவதோடு முடிந்து போகிற பிரச்னை அல்ல இது. அதன் பிறகான தொடர் கண்காணிப்பு மிக முக்கியம். முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப்பையில் மட்டும்தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம். ஆனால் பயப்படத் தேவையில்லை. கீமோதெரபி சிகிச்சையின் மூலம் இந்தப் புற்றுநோயை 100 சதவிகிதம் குணப்படுத்திவிட முடியும்.

புற்றுநோயாக மாறுகிற வாய்ப்பானது முழுமையான முத்துப்பிள்ளைக் கர்ப்பத்தில் 15 முதல் 20 சதவிகிதமும், பகுதி முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் 5 சதவிகிதமும் இருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்தாலும்2 வாரங்கள் கழித்து மறுபடி ஹெச்.சி.ஜி. அளவை சரி பார்க்க வேண்டும். பிறகு வாராவாரம் சரி பார்க்க வேண்டும். ஹெச்.சி.ஜி. அளவானது 100க்கும் கீழே வரும். அதையடுத்து 2 வாரங்களுக்கு ஒருமுறை அந்தச் சோதனையை அது 5க்கும் கீழே வரும் வரை செய்ய வேண்டும்.

5க்கும் கீழ் வந்துவிட்டால் மாதம் ஒரு முறை சோதனை செய்தால் போதுமானது. 8 முதல் 10 வாரங்களில் ஹெச்.சி.ஜி. அளவானது சகஜ நிலைக்கு வந்து விடும். 1 வருடம் வரை இந்தத் தொடர் கண்காணிப்பு அவசியம்.ஹெச்.சி.ஜி.யின் அளவானது குறையாமல் அப்படியே இருந்தாலோ, திடீரெனஅதிகரித்தாலோ எச்சரிக்கையாக வேண்டும். குறிப்பிட்ட அளவை எட்டும்வரை சம்பந்தப்பட்ட பெண் கருத்தரிக்கக் கூடாது. அப்படிக் கருத்தரித்தால் ஹெச்.சி.ஜி. அளவானது அதிகரித்து, அனாவசியக் குழப்பத்தைத் தரும். எல்லாம் குணமாகி, ஹெச்.சி.ஜி. மற்றும் ஸ்கேன் மூலம் மருத்துவர் உறுதி செய்த பிறகே கர்ப்பம் தரிக்கலாம்.புற்றுநோயாக இருந்து கீமோதெரபி கொடுப்பதால் தாய்க்கோ, அடுத்துப் பிறக்கப் போகிற குழந்தைக்கோ பிரச்னைகள் வராது. ld3614

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button