மருத்துவ குறிப்பு

வயிற்றுப்புண் – அல்சர் – புற்றுநோயை குணப்படுத்தும் முள்ளங்கி

முள்ளங்கி நாம் சாதாரணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறிந்தோமில்லை. முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என வேறு சில வகை முள்ளங்கிகளும் உண்டு.ஆயினும் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டவை. வெண்ணிற முள்ளங்கி யானையின் தந்தத்தைப் போன்றதாய் நீண்டும் பெரியதாய் காணப்படும். சிறுமுள்ளங்கி கார்ப்புச் சுவையும், உஷ்ணத் தன்மையும் கொண்டு இருக்கும். இது உணவுக்கு சுவையூட்டும். குரலை செம்மைபடுத்தும். வாத, பித்த சிலேத்துமம் எனப்படும் மூன்று தோஷங்களையும் சமப்படுத்தும்.

பெரு முள்ளங்கி வறட்சித் தன்மையும், குரு குணமும், வாயுத்தன்மையும் உடையது. இது மூன்று தோஷங்களையும் வளர்க்கக் கூடியது. இதை சமையலுக்கு உபயோகப்படுத்தும் முன்பு எண்ணெயிலிட்டு வதக்கிய பின் உபயோகப் படுத்தினால் மூன்று தோஷங்களையும் தணிக்க வல்லது. மஞ்சள் முள்ளங்கி இனிப்பு சுவையும், உஷ்ணமும், இலகுத் தன்மையும், உஷ்ண வீரியமும் கொண்டிருக்கும். சடராக்கினியை வளர்க்கும் மலத்தை தடுக்கும்.

சுப வாதங்களைத் தணிக்கும். முதிர்ந்த முள்ளங்கியை விட இளம் முள்ளங்கியே நன்மை தருவதாக இருக்கும். முதிர்ந்த முள்ளங்கி வீக்கத்தையும், அழற்சியையும் தோற்று விக்கும். ரத்தத்தை கெடுக்கும். உலர்ந்த முள்ளங்கி 3 தோஷங்களையும், நஞ்சையும் போக்கவல்லது. முள்ளங்கி காய்ச்சல், இழுப்பு, மூக்கு, கண், தொண்டையில் தோன்றும் நோய்கள் ஆகியவற்றையும் போக்கும்.

முள்ளங்கிக் கஞ்சி வாயில் எச்சில் ஒழுகுதல், தொண்டை கரகரப்பு, தொண்டை அடைப்பு, நாவின் சுவையின்மை, பீநசம், இருமல், கப நோய்கள் ஆகியவற்றைத் தணிக்கும். முள்ளங்கியின் பூ கப பித்தங்களைத் தணிக்கும். முள்ளங்கியில் புற்று நோயைத் தடுக்க வல்ல மருத்துவப் பொருட்கள் மலிந்துள்ளன.

பண்டைக் காலந்தொட்டு ஈரல் நோய்கள் வந்த போது அதைப் போக்குவதற்கும் மேலும் வராது தடுப்பதற்கும் முள்ளங்கியை உண்பது என்பது வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. கந்தகச்சத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மருத்துவ வேதிப்பொருட்கள் முள்ளங்கியில் அடங்கியுள்ளன. அவை பித்த நீரை ஒழுங்காக சுரக்க உதவுகின்றன.

இதனால் முள்ளங்கி ஆரோக்கியமான பித்தப்பை க்கும் ஈரலுக்கும் உதவுவதோடு செரிமானத்தையும் சீர்படுத்துகிறது. புதிய முள்ளங்கிக் கிழங்கில் மிகுதியான விட்டமின் சி சத்து அடங்கியுள்ளது. முள்ளங்கி கிழங்கை விட முள்ளங்கி இலையில் 6 மடங்கு விட்டமின் சி சத்து அடங்கியுள்ளது. மேலும் முள்ளங்கி கீரையில் மிகுதியான சுண்ணாம்புச் சத்தும் உள்ளது.

மேலை நாடுகளில் பன்னெடுங்காலமாக முள்ளங்கி சாறு இருமலைத் தணிப்பதாகவும், மூட்டு வலிகளைப் போக்குவதற்கும், பித்தப்பை சம்பந்தமான நோய்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் முள்ளங்கிச் சாறு நீண்ட காலமாகத் தொல்லை தரும் நெஞ்சகக் கோளாறுகளிலிருந்து நிம்மதி பெறவும், வாயுக் கோளாறுகளை விரட்டவும் மற்றும் பேதி, தலைவலி, தூக்கமின்மை ஆகிய துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும் பயன்படுத்தப்படுகிறது.

முள்ளங்கி விதைகள் வயிறு நிரம்ப இருப்பது போன்ற நிலையிலும் நெஞ்சைக் கரித்துக் கொண்டு புளிப்புடன் நாம் உண்ணும் உணவு நீண்ட நேரத்துக்குப் பிறகு செரிமானம் ஆகாமல் மேலெதிர்த்து நெஞ்சுக்கு வருவது போன்ற நிலையிலும், உண்ட உணவு சீரணமாகாமல் வயிற்றுப் போக்கை உண்டாக்குகிற போதும், நெஞ்சுக் கோழை அதிகரித்து இருமல் மற்றும் மூச்சிரைப்பு ஏற்படுகிற போதும் சிறந்த நிவாரணத்தை அளிக்க வல்லது.

* முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து உள்ளுக்கு கொடுப்பதால் குத்திருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும்.

* முள்ளங்கியைப் பயிர் செய்து இரண்டு மூன்று இலைகள் வந்தவுடன் அந்த இலைகளில் ஒரு பிடி அளவு எடுத்து 2 முதல் 4 கிராம் அளவு சாதாரண சோற்று உப்பு சேர்த்து காலை, மாலை என 2 வேளையும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை என்கிற சிறுநீக மற்றும் பால்வினை நோய்களால் உண்டாகும் நீரடைப்பு நீங்கும். மலமும் வெளியேறும்.

* 50 முதல் 100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து குடித்து சிறுநீர் வர சிறுநீர் தாரளமாய் இறங்கும்.

* கிழங்கைப் பச்சையாகவோ, சமைத்தோ உண்பதால் சுவை யின்மை நீங்கிப் பசி உண்டாகும். உணவையும் சீரணமாக்கும்.

* அந்தி, சந்தி என இருவேளைகளும் முள்ளங்கி சாறு செய்து பருகுவதால் மூலநோய்கள் குணமாகும். இளம் முள்ளங்கி கீரையின் சாற்றை எடுத்து மெல்லிய துணியால் வடிகட்டி அதில் போதிய சர்க்கரை சேர்த்து அருந்திவர மஞ்சள் காமாலை குணமாகும்.

ஒரு தேக்கரண்டி முள்ளங்கி கிழங்குச் சாற்றோடு சம அளவு தேனும், உப்பும் சேர்த்து சாப்பிட இருமல், நெஞ்சக கோளாறுகள், இதய வலி, வயிற்று உப்பிசம், தொண்டைப்புண், தொண்டைக் கட்டு ஆகியன குணமாகும். முள்ளங்கி விதையை நன்றாக இடித்த காடி சேர்த்து குழைத்தப் பசையாக்கி வெண்புள்ளிகளின் மீது தடவி வர தோலின் நிறம் மாறி வரும்.

தினம் இப்படிச் செய்தால் நலம். இதையே படர் தாமரை, முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீது பூசி வர நன்மை உண்டாகும். இளம் முள்ளங்கித் துண்டுகளுடன் காரட், பீட்ரூட் போன்றவற்றையும் துண்டுகளாக்கி ஒன்று சேர்த்து சிறிது எலுமிச்சை சாறு உடன் உப்பு சிறிது சேர்த்து சாலட் போல உணவுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு நன்மை தரும்.

உள்ளுறுப்புகள் பலம் பெறும். சிறுநீரக ஈரல் தொடர்பான நோய்கள் விலகும். கோடை காலத்தில் முள்ளங்கி சாற்றை சிறிது சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி பெறும். முள்ளங்கியை ஏதேனும் ஓர் வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் தொற்று நோய்களிலிருந்து அது நம்மைப் பாதுகாக்கும்.

அதில் அடங்கியிருக்கும் இயற்கையான சுத்திகரிப்புத் தன்மையும் மற்றும் அதிகப்படியான விட்டமின் சி சத்தும் நோயற்ற வாழ்வுக்கு வகை செய்கின்றன. வயிறு குடல் புண்பட்ட நிலையில் உள்ளவர்கள் மட்டும் முள்ளங்கியை தவிர்ப்பது நலம்.

சாதாரண உணவாகும் முள்ளங்கியில் உள்ள மருத்துவ நன்மைகளை கருத்தில் கொண்டு அடிக்கடி உணவில் சேர்ப்போம். உன்னத நலன்களைப் பெறுவோம்.

முள்ளங்கியில் அடங்கியுள்ள சத்துக்கள்:

புதிதாக சேகரிக்கப்பட்ட 100 கிராம் முள்ளங்கியில் பின்வரும் சத்துக்கள் பொதிந்துள்ளன.  உயிர்ச்சத்து 1சதவீதம், மாவுச் சத்து 3% புரதச்சத்து, முழுமையான கொழுப்பு 1%, உணவாகும் நார்ச்சத்து 4%, விட்டமின்களான ஃபோலேட்ஸ் 6%, நியாசின் 1.5% பெரிடாக்ஸின் 5.5%, ரிபோஃப்ளேவின் 3%, விட்டமின் ஏ 1%, விட்டமின் சி,

25%, விட்டமின் ஈ 9%, விட்டமின் கே1 %,ஆகியவையும் எலக்ட்ரோலைஸ் எனப்படும் நீர்ச்சத்துக்களான சோடியம் 2.5%, பொட்டாசியம் 5%, ஆகியவையும் தாதுப் பொருட்களான சுண்ணாம்புச்சத்து 2.5%, செம்புசத்து 5%, இரும்புசத்து 4%, மெக்னீசியம் 2.5%, மாங்கனீசு 2.5%, துத்தநாகம் எனப்படும் ஸிங்க் 2%, ஆகியவையும் மருத்துவ சத்துப் பொருட்களான பீட்டா கெரோட்டின் 4 மைக்ரோ கிராம், ஆல்பா கெரோட்டின் சிறிதளவும் லூட்டின் கசியாசாந்தின் 10% மைக்ரோகிராமும் அடங்கியுள்ளன.

முள்ளங்கியின் இலை, பூ, கிழங்கு விதை ஆகிய அத்தனையும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவது ஆகும். முள்ளங்கிக் கீரையில் வளிக்குற்றமும், தீக்குற்றமும் பெருகும். வயிற்றுப் புழு, மார்பு எரிச்சல் இவை உண்டாகும். ஆயினும் வயிற்று வலியையும் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணையும் இது போக்கக்கூடிய மருந்தாக அமையும்.

சிறு முள்ளங்கியை முற்றாத இளம் நிலையில் எடுத்து உண்பதால் பல நோய்களைத் தணிக்கும் என்று அகத்தியர் குணபாடநூல் தெரிவிக்கிறது. இளம் முள்ளங்கியை உணவாக சமைத்து சாப்பிடுவதால் வாதம் எனப்படும் வாயு சம்பந்தமான நோய்கள், காப்பான் எனப்படும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்றெரிச்சல்,

வயிற்று வலி, குத்தல், வயிற்றில் வாயு சேர்தல், எலும்பு உறுக்கி இருமல் சளித் தொல்லைகள், கடுமையான தலைநோய்கள், பல்சிலந்தி,பஇரைப்பு மூலக்கடுப்பு ஆகிய நோய்கள் அத்தனையும் முள்ளங்கியின் மணத்தை கண்ட போதே மிரண்டு ஓடி விடும். *முள்ளங்கி விதை ஆண்மையைப் பெருக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கவல்லது. மலத்தை இளக்க வல்லது. வெப்பத்தை தூண்டக் கூடியது. பசியைத் தூண்டக் கூடியது. வயிற்று நோய் களை விரட்ட வல்லது.

radish juice can cure kidney problems SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button