தலைமுடி சிகிச்சை

முகத்தில் உள்ள பரு,அம்மை தழும்புகள் நீங்க சில டிப்ஸ்

நேற்றுவரை கண்ணாடி மாதிரி பளபளத்த சருமத்தில், இன்று திடீரென சின்னதாக ஒரு கரும்புள்ளியோ, பருவோ வந்தால் அது தரும் மன உளைச்சல் மிகவும் பெரியது. அதிலும் அந்தக் கரும்புள்ளியோ, பருவோ வந்தோமா, போனோமா என இல்லாமல், வந்துவிட்டுப் போனதன் தடமாக தழும்பை விட்டுச் சென்றால்? தழும்புகளைப் பார்க்கும் போதெல்லாம் தன்னம்பிக்கை குறையும். தூக்கம் தொலையும். தழும்புகளற்ற சுத்தமான சருமத்துக்கு மனது ஏங்கும். “சரியான காரணம் தெரிந்து, சிகிச்சை அளித்தால், தழும்புகளை விரட்டுவது இன்று மிகவும் சுலபம் என்கிறார் அழகுக் கலை நிபுணரும், அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்.
தழும்புகளைப் புரிந்து கொள்ளவும் அவற்றிலிருந்து தப்பிக்கவும் ஆலோசனைகள் சொல்கிறார் அவர். “அம்மைக்குப் பிறகு வந்தது, பருக்கள் விட்டுச் சென்றது என தழும்புகளில் 2 வகை உண்டு. இரண்டுக்கும் தனித்தனி அணுகுமுறையும் சிகிச்சையும் அவசியம். பருக்களைக் கிள்ளுவதாலோ, உடைப்பதாலோதான் பரு உண்டாகும் என்பது பரவலான கருத்து. அது மட்டுமே காரணமில்லை. பருக்களில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று சிஸ்டிக் அக்னே என்பது. பாரம்பரியமாகத் தொடரக்கூடிய இந்த வகைப் பரு, அளவுக்கு அதிக எண்ணெய் சுரக்கும் சருமம் கொண்டவர்கள், தலையில் ஃபங்கஸ் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். இந்தப் பரு உள்ள நபர்களின் மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தால் உள்ளே ஃபங்கஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருப்பதைப் பார்க்கலாம்.

சிஸ்டிக் அக்னேவை கிள்ளாமலும், உடைக்காமலும்கூட அது தழும்பை விட்டுச் செல்லும். அந்தளவுக்குக் கொடுமையான குணம் கொண்டது. ஒன்றிரண்டு பரு கிளம்பும் போதே மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, மூல காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையைத் தொடங்கினால், தழும்புகளில் இருந்து தப்பிக்கலாம். டிஸ்க்ரன்ட்டேஷன் தெரபி என்கிற சிகிச்சையின் மூலம் இவர்களுக்குச் சுரக்கிற அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம். அதன் மூலம் பருக்களும் அதிகரிக்காது. தழும்புகளும் வராது. – சிஸ்டிக் அக்னே உள்ளவர்களது சருமத் துவாரங்கள் அகன்று, பெரிதாக இருக்கும். வெளியில் செல்லும் போது சருமத்துக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார்களானால், இவர்களது சருமத்திலிருந்து சுரக்கும் சீபம் என்கிற எண்ணெய் பசையானது வெளியே கசிந்து, வெளிப்புற மாசுடன் சேர்ந்து சருமத் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். துவாரங்கள் பெரிதாக இருப்பதால் பருக்களும் பெரிய கொப்புளங்கள் போலவே வரும். இவர்கள் தலையில் பொடுகு இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையை செய்து பார்த்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டாலே பருவையும் அது விட்டுச் செல்கிற தழும்பையும் விரட்டலாம்.

இதெல்லாம் வராமல் தவிர்ப்பதற்கான வழிகள். ஏற்கனவே பரு வந்து, தழும்புகளும் தங்கி விட்டவர்கள் என்ன செய்யலாம்? வெறும் ஃபேஷியல் மட்டுமே தழும்புகளைப் போக்காது. மைக்ரோடெர்மாப்ரேஷன் மற்றும் மீசோதெரபி என்கிற இரண்டு சிகிச்சைகளும் இவர்களுக்குப் பலன் தரும். தழும்பு ஏற்பட்டவர்களது சருமத்தில் குழிகள் காணப்படும். மைக்ரோடெர்மாப்ரேஷன் என்கிற சிகிச்சை, சருமத்தை சமன்படுத்தி, குழிகளை மறைக்கும். 95 சதவிகிதம் தழும்புகள் மறையும். 100 சதவிகிதம் தெரியாமலிருக்க ஸ்கின் பீல் சிகிச்சை மட்டுமே தீர்வு. சருமத்தின் ஒரு லேயரை அப்படியே உரித்தெடுத்து, சருமத்தைப் புதுப்பிக்கச் செய்கிற இந்த சிகிச்சைக்குப் பிறகு சூரிய வெளிச்சமோ, வீட்டுக்குள் பல்பு வெளிச்சமோகூட படக்கூடாது. வெளிச்சம் பட்டால், ஸ்கின் பீல் செய்யப்பட்ட சருமம் கருப்பாகி, அது நிரந்தரமாகத் தங்கி விடும். மைக்ரோடெர்மாப்ரேஷன் மற்றும் மீசோ தெரபி சிகிச்சை களை 20 வயதுக்கு மேலானவர்கள் செய்து கொள்ளலாம். 30 வயதுக்கு மேலானவர்கள் வாரம் 2 முறை மைக்ரோடெர்மாப்ரேஷன் செய்து கொள்ளலாம். தழும்புகளை நீக்குவதில் அரோமாதெரபி சிகிச்சைக்குப் பெரும் பங்கு உண்டு. அது சருமத்தில் புதிய செல்கள் உருவாக உதவும்.

மைக்ரோடெர்மாப்ரேஷன் சிகிச்சையுடன், சைப்ரஸ் ஆயில், நட்மெக் ஆயில், பெர்கமாட் ஆயில், பெடிட்க்ரெயின் ஆயில், சாண்டல்வுட் ஆயில் ஆகியவை கலந்த அரோமா தெரபியையும் சேர்த்துக் கொடுக்கும் போது, தழும்புகள் நீங்கி, சருமம் புத்துணர்வு பெறுவது துரிதப்படுத்தப்படும். வீட்டிலேயே என்ன செய்யலாம்? தழும்புகள் சின்னதாக இருக்கும்போதே கவனித்து, சில சிகிச்சைகளைச் செய்ய ஆரம்பித்தால், அவை பெரிதாகாமலும் நிரந்தரமாகத் தங்காமலும் காக்கலாம். நெருஞ்சி முள் தூள் 100 கிராம், கறிவேப்பிலை தூள் 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் தூள் 100 கிராம், கசகசா தூள் 10 கிராம் ஆகியவற்றை காய்ச்சாத பாலில் குழைத்துக் கொள்ளவும், இரவு படுக்கப் போவதற்கு முன் சருமத்தில் தழும்புகளின் மேல் தடவிக் கொண்டு தூங்கவும். மறுநாள் காலையில் அதைத் தேய்த்துக் கழுவவும். சில நாட்களுக்குத் தொடர்ந்து இப்படிச் செய்து வர, சின்னத் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

முகச் சருமத்தை லேசாக, மிக மென்மையாகக் கிள்ளி விடுகிற சிகிச்சையை 20 வயதுக்கு மேல் எல்லோருமே ஒரு பயிற்சியாகச் செய்யலாம். சருமத்தின் மூன்றாவது அடுக்கான சப்கியூட்டேனியஸ் லேயரில்தான் சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் எனப்படுகிற கொழுப்பு செல்கள் இருக்கின்றன. லேசாகக் கிள்ளி விடுவதன் மூலம் இந்த செல்கள் தூண்டப்பட்டு மேலெழுந்து வரும். கன்னம் ஒட்டிப் போனவர்கள் கூட இந்த கிள்ளி விடுகிற பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், கன்னங்கள் ஓரளவு உப்பிப் பூரிக்கும். முகத் தசைகள் விரிவடைகிற போது, தழும்புகளின் அளவு சுருங்கும். பார்வைக்கு உறுத்தலாகத் தெரியாது. தினசரி காலையில் பல் துலக்கும் போது, வாய் நிறைய தண்ணீரை வைத்துக் கொள்ளவும். வாய் வலிக்கும் வரை வாயிலேயே வைத்திருந்து விட்டு பிறகு துப்பவும். இப்படிச் செய்வதாலும் கன்னத் தசைகள் விரிவடையும். தழும்புகள் மறையும். மேலே சொன்னதெல்லாம் பருக்களால் உண்டான தழும்புகளுக்கு.

அடுத்தது அம்மைத் தழும்புகளுக்கான சிகிச்சை அம்மை வந்த பிறகு ஏற்படுகிற தழும்புகள் அத்தனை சீக்கிரத்தில் மறையாது. லேசர், ஸ்கின் பீல் மாதிரியான நவீன சிகிச்சை களால் கூட 100 சதவிகிதம் போக்க முடியாது. தழும்புகள் ஆழமாவதற்கு முன்பே அக்கறை எடுத்துக் கொண்டால், ஓரளவு இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். அம்மை வந்து கொப்புளங்கள் ஆறிய உடனே அந்த சிகிச்சையைத் தொடங்க வேண்டும். காலம் தாழ்த்தினால் தழும்புகள் ஆழமாகி விடும்.

கொப்புளங்கள் ஆறிய நிலையில் சருமமானது மிகவும் மென்மையாக இருக்கும். அம்மை வந்ததில் இருந்தே தினமும் இளநீர் குடிக்க வேண்டும். அது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு, சருமத்துக்குத் தேவையான தண்ணீர் சத்தையும் தக்க வைக்கும். கார்ன் ஃப்ளோர் 1 டீஸ்பூன், புதினாவை காயவைத்து அரைத்த தூள் 1 டீஸ்பூன், மர மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், நட்மெக் ஆயில் 2 சொட்டு, ரோஸ்மெர்ரி ஆயில் 1 சொட்டு, சிடர்வுட் ஆயில் 1 சொட்டு எல்லாவற்றையும் சிறிது தண்ணீரில் குழைக்கவும். அம்மைத் தழும்புகளின் மேல் மென்மையாகத் தடவவும். அதை முற்றிலும் காய விடக் கூடாது. லேசான ஈரத்துடன் இருக்கும் போதே குளிர்ந்த தண்ணீர் விட்டு, மென்மையாகக் கழுவி விட வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு இப்படிச் செய்து வந்தாலே தழும்புகள் மறைந்து விடும்.
face+pimples

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button