மருத்துவ குறிப்பு

குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடாதீர்கள்

எச்சரிக்கை

திருமண வயது, குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வயது என்பதெல்லாம் இப்போது மொத்தமாக மாறிவிட்டது. படிப்பைத் தொடர்வதிலும், வேலையில் முன்னேற வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதாலும் திருமணத்தைப் பற்றி ஆண், பெண் இருவருமே நினைப்பதில்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் பொருளாதாரம் உள்ளிட்ட பல காரணங்களை முன்னிறுத்தி குழந்தை பெறுவதையும் தள்ளிப் போடுகிறார்கள்.

நாகரீக யுகத்தில் கருத்தடைக்கென ஏராளமான வழிமுறைகளும் வேறு இருக்கின்றன. விவாகரத்து விகிதமும் அதிகரித்து வருகிறது. இது போன்ற எண்ணற்ற காரணங்கள் குழந்தையின்மை பிரச்னையில் போய் நம்மை நிறுத்திவிடுகிறது” என்கிறார் மகப்பேறு மருத்துவரான அருணா அசோக்.ஏன்? எப்படி? என்பதற்கான காரணங்களை அவரிடம் விரிவாகக்கேட்போம்…

”குழந்தையின்மை பிரச்னையில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான ஆண்களுக்கு வயது அதிகரித்தாலும் அவர்களின் விந்தணுக்களின் உற்பத்தி குறைவதில்லை. ஆனால், பெண்களின் சினைப்பைகளில் இருக்கும் சினை முட்டைகளின் எண்ணிக்கை வயதாக வயதாகக் குறைந்துவிடுகிறது. குறிப்பாக, 30 வயதுகளின் பிற்பகுதியிலிருந்தே கருவுறும் ஆற்றல் பெண்களுக்குக் குறைகிறது.

இத்துடன் சுற்றுச்சூழல் மாசு, குடும்பத்தில் யாருக்காவது குழந்தையின்மை பிரச்னை இருப்பது, சினைப்பை புற்றுநோய், சினைப்பையில் ஏதாவது அறுவைச் சிகிச்சை, போதைப் பழக்கங்கள் போன்ற காரணங்களாலும் கருமுட்டைகளின் எண்ணிக்கை குறையும் ஆபத்து உள்ளது. இந்த சவால்களையெல்லாம் தாண்டி தாமதமாகக் கருவுறும்போது வேறு சில பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதில் அந்தக் கருவைக் கடைசி வரையில் காப்பாற்றிச் சுமப்பதில் உள்ள சிரமம் முக்கியமானது. 30 வயதுக்கு மேல் கருவுறும் பல பெண்களுக்கு ஹார்மோன் சமச்சீரில்லாதது மற்றும் கருப்பையில் உள்ள நீண்டகாலச் சிக்கல் ஆகியவற்றால் குறைப்பிரசவமே நேர்கிறது என்பதும் கவனத்துக்குரியது.

30-வது வயதுகளில் கருவுறும் ஒரு பெண் கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் ரத்த அழுத்தம், தைராய்டு, சர்க்கரை நோய் ஆகிய நோய்களாலும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. இது குழந்தை நிறைமாதமின்றி குறைப்பிரசவ குழந்தையாக பிறக்க வழிசெய்துவிடுகிறது.

மேலும், பிரசவத்தின்போது களைப்பு, சோர்வு காரணமாகவும் சிசுவை பெறுவதற்கு ஏற்ப உறுப்புகள் எளிதாகச் சுருங்கி விரியாமல் இருப்பதாலும் ஒரு பெண் நீண்ட நேரம் பிரசவ வலியால் துடிக்க வேண்டியிருக்கிறது.

சில சமயம் பிறக்கும் குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பாதித்தல், டவுன்சிண்ட்ரோம் பாதிப்பு உள்பட பல அசாதாரண பாதிப்புகளும் நிகழ்கின்றன.இதில் இன்னோர் முக்கியமான ஒன்றையும் குறிப்பிட வேண்டும்.

இன்று இணையதளத்தில் கிடைக்கும் பல தகவல்களை வைத்து எப்போது தேவையோ அப்போது இனப்பெருக்கத் தொழில்நுட்பத்தின் மூலம்(Assisted Reproductive Technology) கருவுறலாம் என்ற எண்ணம் பரவலாக பலரிடமும் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணத்தைப் பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். வயதாகி விட்டால் கருவுறுவதற்கான சிகிச்சை முறையால் கிடைக்கும் பலனும் குறைவு என்பது அவர்களுக்குத் தெரியாது.

தாமதமாகக் கருவுறுதலால், தாய் – சேய் உயிருக்கே ஆபத்து உள்பட அபாயங் களும் ேநரலாம். 30 அல்லது 40-வது வயதுகளில் கருவுறுவது இயலாத செயல் அல்ல. ஆனால், 35 வயதில் கருவுறும் பெண் தனது உடல்நிலையையும், குழந்தையின் உடல்நிலையையும் தொடர்ந்து அக்கறையுடன் கண்காணித்துக் கொண்டே வர வேண்டும்.

அதனால், தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் தள்ளிப் போவது போன்ற சூழலை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், வாய்ப்புகள் இருந்தும் அலட்சியம் காரணமாக, திருமணத்தைத் தள்ளிப் போடுவதையும், குழந்தைப் பிறப்பை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும்” என்கிறார்.ht4451573

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button